2026 ஏப்ரல் 29, புதன்கிழமை

'சமயத்தலைவர்கள் முழு நாட்டிற்கும் முன்மாதிரியானவர்களாக திகழ வேண்டும்'

Kogilavani   / 2013 ஜனவரி 29 , மு.ப. 05:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.சுக்ரி

'கிழக்கு மாகாணத்திலுள்ள சமயத்தலைவர்கள் முழு நாட்டிற்கும் முன்மாதிரியானவர்களாக திகழ வேண்டும். இந்த நாட்டில் இன ஐக்கியத்தையம் சமூகங்களுக்கிடையிலான ஒற்றுமையையும் புரிந்துணர்வையும் எற்படுத்த சமயத்தலைவர்கள் பாடுபடவேண்டும்' என கிழக்கு மாகாண படைக்கட்டளைத்தளபதி மேஜர் ஜெனரல் லால்பெரேரா தெரிவித்தார்.

மட்டக்களப்பு பாடுமீன் விடுதியில் நடைபெற்ற சமயத்தலைவர்களுக்கான சந்திப்பபிலேயே அவர் இதனை தெரிவித்தார்.
இங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர்,

'நாட்டில் இன நல்லுறவையும் ஐக்கியத்தையும் கட்டி வளர்க்க நாம் பாடுபட வேண்டும். இதற்காக சமயத்தலைவர்கள் முழுமையாக ஈடுபட வேண்டும். பிற சமயத்திற்கு மதிப்பளிக்கின்ற நிலை நம்மிடையே காணப்படல் வேண்டும்.

நமது மதத்தை பின்பற்றும் அதேநேரம் மற்ற மதங்களையும் மதித்து நடக்கின்ற மனப்பாங்கு வரவேண்டும். அப்போதுதான் சமயங்களுக்கிடையில் இனங்களுக்கிடையில் ஐக்கியத்தையும் ஒற்றுமையையும் ஏற்படுத்த முடியும்.

ஒவ்வொரு சமயத்தவர்களும் தமது சமயத்தை நேசிப்பது போன்று அடுத்த சமயத்தவர்களுக்கும் மதிப்புக்கொடுத்து அவர்களையும் கௌரவிக்கின்ற நிலைமையை நாங்கள் வளர்க்க வேண்டும்.

இந்தப்பொறுப்பு சமயத்தலைவர்களிடம் அதிகமுண்டு. நமது நாட்டில் எந்தவொரு நிகழ்வினை ஆரம்பிக்கும் போதும் சமயத்தலைவர்களின் ஆசியுடன் சமய வணக்க வழிபாடுகளுடன் ஆரம்பிக்கின்றோம். இது சிறந்த வழிகாட்டலாகும்.

கடந்த முப்பது வருடகால யுத்தத்தில் நமது உறவுகளை இழந்திருக்கின்றோம். அதேபோன்று இயற்கை அழிவுகளினாலும் நமது உறவுகளை இழந்துள்ளோம்.

இந்த நிலையில் நமது நாட்டிற்கு இன்று ஒரு நிரந்தரமான சுமூகமான நிலைமை ஏற்பட்டுள்ளது. அனைவரும் சுதந்திரமாக வாழும் நிலை உருவாகியுள்ளது. இந்த நிலையை நாங்கள் மேலும் வளர்த்தெடுக்க வேண்டும்.

இன்றுள்ள இளைஞர்களுக்கு ஆத்மீக ரீதியாக சமயத்தலைவர்கள் வழிகாட்ட வேண்டும்.  இணையத்தளங்களினாலும் கையடக்கத் தொலைபேசிகளினாலும் நமது இளைஞர்கள் சமூகச் சீரழிவுக்குள் தள்ளப்படுகின்ற ஒரு நிலைமையை நாங்கள் பார்க்கின்றோம்.

இந்த இளைஞர்களை நல்வழிப்படுத்த ஆத்மீக ரீதியாக அவர்களை பக்குவப்படுத்த வேண்டிய மிகப்பெரிய பொறுப்பு சமயத் தலைவர்களுக்கு உண்டு. இது மிகப்பொறுப்புமிக்க சவாலாகும். இந்த சவாலை நாம் எதிர்கொள்ள வேண்டும். அவ்வாறான இளைஞர்களை கெட்ட வழியில் செல்லாமல் பாதுகாத்துக்கொள்ள வேண்டும்.

தம்புள்ள பள்ளிவாயல் பிரச்சினையின் போது மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள முஸ்லிம் பிரதேசங்களில் சில இளைஞர்கள் கையடக்கத் தொலைபேசிகளின் மூலம் பிழையான குறுந்தகவல்களைஅனுப்பி உணர்வுகளை தூண்டி வீணான பிரச்சினைகளை தோற்றுவிக்க முற்பட்டனர்.

அப்போது மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள உலமா சபை சிறப்பாக செயற்பட்டு இங்கு எவ்வித பிரச்சினைகளையும் ஏற்பட்டுவிடாமல் பார்த்துக் கொண்டனர். உலமா சபை சிறந்த வழிகாட்டலை அதன்போது மேற்கொண்டிருந்தது. தம்புள்ள பள்ளிவாயல் பிரச்சினையின் போது சிலர் பொய்யான பிரச்சினைகளை மேற் கொண்டிருந்தனர். அப்போது இங்குள்ள உலமாக்களை தம்புள்ளைக்கு சென்று அந்த பள்ளிவாயலில் தொழுது விட்டு வருமாறு நான் கேட்டேன். அதற்கான போக்குவரத்து ஒழுங்குகளையும் நான் செய்துதருவதாக கூறியிருந்தேன்.

எனவே, நமது நாட்டில் சமயங்களுக்கிடையில் மதங்களுக்கிடையில் பிரச்சினைகள் ஏற்படாதவாறு சமயத்தலைவர்கள் பார்த்துக்கொள்ள வேண்டும். இன ஐக்கியத்தையும் நல்லுறவையும் சமூக ஒற்றுமையையும் வளர்க்க சமயத்தலைவர்கள் வழிகாட்டல்களை மேற்கொள்ள வேண்டும்.

கிழக்கு மாகாணத்திலுள்ள சமயத்தலைவர்கள் முழு நாட்டிற்கும் சிறந்த முன்மாதிரியானவர்களாக திகழ வேண்டும். அதற்கான வேலைத்திட்ட ஆண்டாக இவ் ஆண்டை நாம் பார்க்கவேண்டும்.

பண்பாடுள்ள ஒரு சமுதாயத்தை கட்டியெழுப்ப நாம் அனைவரும் முயற்சிக்க வேண்டும்' என்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .