2025 மே 02, வெள்ளிக்கிழமை

ஆறுமாதத்திற்குள் ஏறாவூரில் பாரிய ஒரு ஆடைத்தொழிற்சாலை உருவாகும்: நஸீர்

Kogilavani   / 2014 ஜனவரி 30 , மு.ப. 05:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ. ஹுஸைன்

'அடுத்து வரும் ஆறு மாதங்களுக்குள் ஏறாவூரில் பாரிய ஒரு ஆடைத்தொழிற்சாலை உருவாகிவிடும். அது 50 இயந்திரங்களை கொண்டு வேலைகளைத் துவங்கும். அதன் மூலம் இந்தப் பிரதேசத்திலுள்ள ஏராளமான தமிழ்,முஸ்லிம்,சிங்கள இளைஞர் யுவதிகளுக்கு  நேரடியாகவும் மறைமுகமாகவும் வேலை வாய்ப்புக் கிட்டும். இதற்கான சகல ஏற்பாடுகளும் முற்றுப்பெற்று விட்டன' என கிழக்கு மாகாண கால்நடை உற்பத்தி அபிவிருத்தி,  அமைச்சர் நஸீர் அஹமட் புதன்கிழமை(29) தெரிவித்தார்.

'இந்த ஆடைத் தொழிற்சாலையை ஆயிரக்கணக்கானோர் ஆடை உற்பத்தித் தொழிலில் ஈடுபடுகின்ற ஒரு உற்பத்தி வேலைக்களமாக மாற்றுவதற்கு உங்களது ஒத்துழைப்புத் தேவை' என்றும் அவர் தெரிவித்தார்.

ஏறாவூரில் தெரிவு செய்யப்பட்ட 10 வறிய குடும்பங்களுக்கு கூரைத் தகடுகளும் வாழ்வாதார உதவிகளும் வழங்கும் நிகழ்வு  அமைச்சர் நஸீர் அஹமட்டின் அமைச்சரின் இணைப்புச் செயலாளர் எம்.எஸ்.அபுல்ஹஸன் தலைமையில் ஏறாவூர் சிறுகைத்தொழில் பேட்டையில் புதன்கிழமை (29) இடம்பெற்றது.

இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனை தெரிவித்தார். இங்கு தொடர்;;ந்தும் உரையாற்றிய அவர்,
 'நாம் எதிர்பார்ப்புக்களோடு சொந்தக் காலில் நிற்பதற்கு கிழக்கு மாகாணத்தில் இருக்கின்ற வளங்கள் தாராளாகப் போதுமானது. இந்த வளங்களை நாம் சரியான நுணுக்கத்துடன் பயன்படுத்தினால் நாம் அனைவரும் தொழில் வல்லுநர்களாக மாற முடியும்.

இங்கிருக்கின்ற ஆற்றல் மிக்க ஒவ்வொரு பெண்ணும் ஒரு ஆடைத்தொழிற்சாலையை நடத்திச் செல்கின்ற தொழிலதிபர்களாக மாறலாம்.
வெறுமனே செயலற்று எதிர்பார்ப்புக்களோடு இருந்தால் ஒன்றுமே நடந்துவிடாது. அதற்கு விடாமுயற்சியும் நம்பிக்கையும் ஆற்றலும் வேண்டும். இதனை நீங்கள் வளர்த்துக்கொள்ளுங்கள். இங்கே இந்தத் தொழில் பேட்டையில் செயற்படுத்தப்படுகின்ற 11 வகையான தொழிற்துறைகளையும் நடத்திச் செல்கின்ற தொழிலதிபர்களாக நீங்கள் மாறுவதற்கு திடசங்கற்பம் கொள்ள வேண்டும்.

வெறுமனே பயிற்சியையும் கொடுப்பனவுகளையும் பெறும் ஒருவராக மட்டும் நீங்கள் இருந்து விட்டுப் போகக்கூடாது.

வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு முதலீட்டாளர்கள் இந்த ஆடைத் தொழிற்சாலையில் முதலீடு செய்யவிருக்கின்றார்கள்' என்றார்.
உணவு பதனிடல் உபகரணம் சூரிய சக்தி உபகரணமும் என்பன இதன்போது வழங்கப்பட்டன.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .