2025 டிசெம்பர் 24, புதன்கிழமை

குடிநீர் பிரச்சினையை தீர்க்குமாறு மகஜர் கையளிப்பு

Suganthini Ratnam   / 2014 ஜூலை 31 , மு.ப. 10:45 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.எம்.அனாம்


குழாய்நீர் வசதியை வந்தாறுமூலையிலிருந்து நாவலடிவரை விஸ்தரிப்பதற்காக அமைச்சரவை அனுமதியை பெற்று கல்குடாத்தொகுதி மக்களின் குடிநீர் பிரச்சினைக்கு நிரந்தரமாக தீர்வை பெற்றுத் தருமாறு  கூறி ஊக்குவிப்பு  உற்பத்தித்திறன் விருத்தி அமைச்சர் பசீர் சேகுதாவூத்திடம்  கல்குடா மஜ்லிஸ் ஸுரா சபை இன்று வியாழக்கிழமை மகஜர் கையளித்துள்ளது.

ஓட்டமாவடி தேசிய பாடசாலையில் அமைச்சரை சந்தித்தே இந்த மகஜர் கையளிக்கப்பட்டது.

இந்த மகஜரில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

'ஒரு மனிதனின் அடிப்படை வசதிகளுள் ஒன்றாக சுத்தமான குடிநீரை பெற்றுக்கொள்ளுதல் காணப்படுகிறது. ஜனாதிபதியின்; மஹிந்த சிந்தனை வேலைத்திட்டத்தின் கீழ் இதற்கான அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படுகிறது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் இவ்வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டு முதற்கட்டமாக மட்டக்களப்பிலிருந்து வந்தாறுமூலைவரை குழாய் மூலமாக  குடிநீர் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

இதன் இரண்டாம் கட்டம் வந்தாறுமூலையிலிருந்து நாவலடிவரை விஸ்தரிக்கப்பட இருந்தது. இத்திட்டத்தில் குறிப்பாக ஓட்டமாவடி, வாழைச்சேனை, நாவலடி, பாசிக்குடா சுற்றுலாபகுதி மற்றும் தமிழ் பிரதேசங்கள் பலவற்றை உள்ளடக்கி நீர் விநியோகம் செய்யப்படவிருந்தது.

குறிப்பாக ஓட்டமாவடி, வாழைச்சேனை, நாவலடி பகுதிகளின் நிலைமையை தாங்கள் நன்கு அறிந்துள்ளீர்கள். ஓட்டமாவடி, வாழைச்சேனை முஸ்லிம் பகுதிகளில் சனத்தொகை செறிவின் காரணமாக நிலக்கீழ் நீர் மாசடைந்துள்ளது. இந்த நீரைப் பயன்படுத்துவதால் மக்கள் புற்றுநோய் உட்பட பல்வேறு நோய் நிலைமைகளுக்கு ஆளாகின்றனர்.

அதேபோன்று நாவலடி பிரதேசம் எமது மக்கள் மீள்குடியேறிவரும் பகுதியாகும். இப்பகுதி நிலக்கீழ் பாறையாக காணப்படுவதால் குடிநீர் வசதிகளை ஏற்படுத்த முடியாதுள்ளது. இதனால் வறட்சியான காலங்களில் மக்கள் தமது இடங்களில் இருந்து வெளியேற வேண்டியுள்ளது.

அத்தோடு; குறித்த மக்கள் தங்களுக்குரிய நிரந்தர வசதிகளை ஏற்படுத்த முடியாதுள்ளது. மக்கள் அடிக்கடி இடம்பெயர்ந்து மீள வருவதால் இராணுவத் தரப்பினரின் கெடுபிடிகளுக்கும் ஆளாகின்றனர்.

அதேபோன்று, தற்போது பாசிக்குடா பகுதி சுற்றுலாத்துறையில் நன்கு அபிவிருத்தி செய்யப்பட்டுள்ளது. இப்பகுதிக்கான நீர் விநியோகம் வாகனேரி குளத்திலிருந்து மேற்கொள்ளப்படுகிறது. தற்போதைய நிலையில் சுமார் நாளொன்றுக்கு 15,000 லீற்றர் நீர் சுற்றுலாப்பகுதிக்கு விநியோகிக்கப்படுகிறது. இதனால் இக்குளத்தை நம்பி விவசாயச் செய்கையில் ஈடுபடும் விவசாயிகள் பயிர் செய்கைக் காலத்தில் பாரிய நீர் நெருக்கடியை எதிர்நோக்குகின்றனர். இதன் தாக்கம் 2014ஆம் ஆண்டு சிறுபோகத்தில் ஏற்பட்டதையும் தாங்கள் அறிந்திருப்பீர்கள்.

மேற்படி பிரச்சனைகள் அனைத்திற்கும் நிரந்தர தீர்வை தேடும் வழிமுறையாக வந்தாறுமூலையிலிருந்து நாவலடிவரை விஸ்தரிக்கப்பட இருக்கின்ற இத்திட்டத்தை சமூகத்தினதும் இப்பிரதேச மக்களினதும் நலன் கருதி உடனடியாக ஆரம்பிப்பதற்கு தங்களாலான முழு முயற்சியையும் மேற்கொள்ளுமாறு வேண்டி கல்குடா மஜ்லிஸ் ஸுரா இப்பிரதேச மக்கள் சார்பாக தங்களிடம் இவ்வேண்டுகோள் விடுக்கிறது.

இவ்வேலைத்திட்டத்தின் தற்போதைய முன்னெடுப்புநிலை தொடர்பாக நீர்விநியோக வடிகாலமைப்புச் சபையின் மாவட்ட காரியாலய அதிகாரிகளை தொடர்புகொண்டு விசாரித்தபோது இத்திட்டத்தை ஆரம்பிப்பதற்கான சகல முன்னாயத்த வேலைகளும் முடிவுறுத்தப்பட்டு ஒப்பந்தம் வழங்கும் நிலையில் உள்ளதாகவும் அதற்கான அமைச்சரவை அனுமதிக்கு சமர்ப்பிக்கப்படவுள்ளதாகவும் அமைச்சரவை அனுமதி கிடைத்தால் வேலைத்திட்டத்தை உடன் ஆரம்பிக்க முடியும் என்பதாக அறியக்கிடைத்தது.

இம்மாவட்டத்தின் அதிகாரத்திற்குரிய அமைச்சரவை அந்தஸ்து உள்ள அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி, பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் திட்டத்திற்கு பொறுப்பான அமைச்சர்களிடம் இத்திட்டத்தின் அவசியத்தை முன்வைத்து இத்திட்டத்தை ஆரம்பிப்பதற்கான அமைச்சரவை அனுமதியைப் பெற்று இக்குடிநீர் வசதியை எமது மக்களுக்கு பெற்றுத்தருமாறு தங்களை வேண்டிக்கொள்கிறோம்' என தெரிவிக்கப்பட்டுள்ளது.


  Comments - 0

  • வை.எல்.மன்சூர் Thursday, 31 July 2014 12:25 PM

    சூறா சபைக்கு வாழ்த்துக்கள்

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X