2025 டிசெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

மட்டு. அபிவிருத்திக்குழுக் கூட்டத்தில் அமளிதுமளி

Suganthini Ratnam   / 2014 செப்டெம்பர் 30 , மு.ப. 06:29 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ஏ.எச்.ஏ.ஹுஸைன்,எஸ்.பாக்கியநாதன்


மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக்குழுக் கூட்டத்தில்  தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட  நாடாளுமன்ற உறுப்பினர் பொன். செல்வராசாவை 'வாயை மூடுமாறு'  காத்தான்குடி நகரசபைத் தலைவர் எஸ்.எச்.எம்.அஸ்பர் கூறியதால்  அங்கு பெரும் அமளிதுமளி ஏற்பட்டது.

மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக்குழுக் கூட்டம் மாவட்ட அபிவிருத்திக்குழுத் தலைவரும் பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சருமான எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் தலைமையில் நேற்று திங்கட்கிழமை (29) நடைபெற்றது.

இக்கூட்டத்தில் மீள்குடியேற்றப் பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன், கிழக்கு மாகாணசபை உறுப்பினரும் ஜனாதிபதியின் ஆலோசகருமான சிவநேசத்துரை சந்திரகாந்தன்,  தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான பொன். செல்வராசா, பி.அரியநேத்திரன், எஸ்.யோகேஸ்வரன், மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸ்,  மேலதிக அரசாங்க அதிபர் எஸ்.கிரிதரன், மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் ஆர்.நெடுஞ்செழியன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

இக்கூட்டத்தில், மட்டக்களப்பு மாவட்டத்தில் இவ்வருடம் மேற்கொள்ளப்படுகின்ற அபிவிருத்தித்திட்டங்களின் முன்னேற்றங்கள் பற்றி ஆராயப்பட்டன.

'வாழ்வின் எழுச்சி' மற்றும்  பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் நிதியொதுக்கீட்டிலான அபிவிருத்தித்திட்டங்கள் உள்ளிட்டவை தொடர்பில் கலந்துரையாடப்பட்டன.

மட்டக்களப்பு மாவட்டத்தில் இவ்வருடம் 14,261 திட்டங்களுக்காக 7,812 மில்லியன் ரூபாய் நிதியொதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதில் 2,121 அபிவிருத்தித்திட்டங்கள் முடிவடைந்துள்ளன.

இந்த நிலையில் வாவி மற்றும் நீரியல்வளம் தொடர்பான கலந்துரையாடலின்போது, காத்தான்குடி நகரசபைத் தவிசாளர் எஸ்.எச்.எம்.அஸ்பர்; மற்றும் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பொன். செல்வராசாவுக்கும் இடையில் கடும் வாய்த்தர்க்கம் ஏற்பட்டது.

காத்தான்குடி நகரசபையால், மட்டக்களப்பு வாவியில் கொட்டப்படும் குப்பைகளால் முழு மாவட்டமுமே பாதிக்கப்படுவதாக  கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூறினர்.

இங்கு, நாடாளுமன்ற உறுப்பினர் பொன். செல்வராசாவை 'வாயை மூடுமாறு' காத்தான்குடி நகரசபைத் தவிசாளர் எஸ்.எச்.எம்.அஸ்பர்; கூறியபோது, அதற்கு  கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள், கிழக்கு மாகாணசபை உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

காத்தான்குடி நகரசபைத் தவிசாளர் எஸ்.எச்.எம்.அஸ்பர் தனது கூற்றை வாபஸ் பெறாவிட்டால், அபிவிருத்திக்குழுக் கூட்டத்தை நடத்தமுடியாத நிலையேற்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்ட நிலையில், கடும் வாய்த்தர்க்கம் ஏற்பட்டது.

இதன்போது  பிரதியமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ், 'வாயை மூடுமாறு' கூறுவதை ஏற்றுக்கொள்ளமுடியாது. ஒரு நாடாளுமன்ற உறுப்பினரை அவ்வாறு நீங்கள் கூறமுடியாது. இதை  உடனடியாக வாபஸ் பெறுமாறு கோரியதற்கிணங்க, காத்தான்குடி நகரசபைத் தவிசாளர் எஸ்.எச்.எம்.அஸ்பரினால் அக்கூற்று வாபஸ் பெறப்பட்டது. இதை அடுத்து கூட்டம் தொடர்ந்து நடைபெற்றது.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X