2025 டிசெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

முஸ்லிம் சமூகம் அஞ்சியும் கெஞ்சியும்; வாழவில்லை: ஹமீட்

Gavitha   / 2014 செப்டெம்பர் 30 , பி.ப. 12:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்

'பொதுபல சேனா, முஸ்லிம்கள் மீதும் முஸ்லிம் சமய ஸ்தாபனங்கள் மீதும் விடுத்திருக்கின்ற அச்சுறுத்தல்களை வன்மையாக கண்டிப்பதோடு, முஸ்லிம் சமூகம் அஞ்சியும் கெஞ்சியும் ஒரு போதும் வாழவுமில்லை,  வாழப்போவதுமில்லை என்பதை மிகத்தெளிவாக தெரிவிக்க விரும்புகின்றோம்' என்று அகில மக்கள் காங்கிரஸ் இன்று (30) விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக அகில மக்கள் காங்கிரஸின் செயலாளர் வை.எல்.எஸ்.ஹமீட் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
யுத்தம் நடைபெற்ற காலங்களில் எங்கே இருந்தார்கள் என்றே தெரியாத ஒரு கூட்டம் யுத்தம் நிறைவடைந்ததும் ஏதோ வீராதி வீரர்கள் போன்று வெளியில் வந்து, கடந்த 02 வருடங்களாக முஸ்லிம்களின் உணர்வுகளை புண்படுத்திக்கொண்டு இருக்கின்றார்கள்.

நாட்டின் அமைதியின்மையில் ஆதாயம் தேடும் சில சக்திகளின் கைகூலிகளாக, மீண்டும் அமைதியின்மையை ஏற்படுத்துவதற்காக, ஆரம்பத்தில் அடையாளம் தெரியாதவர்களாக பள்ளிவாசல்களுக்கு கல்லெறிந்து தமது அடாவடித்தனத்தை ஆரம்பித்தார்கள்.

முஸ்லிம்களின் உணர்வுகளை தூண்டி அவர்களை களத்தில் இறக்கி  பயங்கரவாதிகளாக காட்டி, தம் இலக்கை நோக்கி பயணிப்பதற்காக 11,000 முஸ்லிம் வாலிபர்கள் பாகிஸ்தானில் ஆயுதப்பயிற்சி பெற்று வந்திருப்பதாகவும் மறைந்த தலைவர் அஷ்ரப் இரண்டு கொள்கலன்களின் ஆயுதம் கொண்டு வந்திருந்ததாகவும் பொய்களை கட்டவழித்தார்கள்.

ஏனெனில் எப்படியாவது முஸ்லிம் வாலிபர்களை விரக்தியின் விளிம்புக்கு தள்ளி, அவர்களை ஆயுதம் ஏந்த வைத்து இதைதான் நாம் முன்கூட்டியே கூறினோம், என்று ஒரு படம் காட்ட நினைத்தார்கள். ஆனாலும் முஸ்லிம்கள் சமாதானத்தை நேசிக்கின்ற சமூகம் என்ற வகையில் பொறுமையாக நிதானமாக விடயங்களை அணுகினார்கள்.
 
இதனால் விரக்தியடைந்த பொதுபல சேனா முஸ்லிம்களின் உணர்வுகளை மீண்டும் தூண்டுவதற்கு புனித அல்குர்-ஆனை பற்றியே பொய்களை இட்டுக்கட்டினார்கள். மேலும் பெண்களின் கௌரவமான ஆடைகளை விமர்சித்தார்கள். பெண்களின் ஆடைகளை விமர்சிக்கும் துறவிகளை முதல் தடவையாக இலங்கையில் கண்டோம். இவையனைத்தின் மூலமாக இலக்கை அடையமுடியாமல் போன பொதுபல சேனா, அளுத்கமை பேருவளை போன்ற பிரதேசங்களில் அவர்களுடைய அடாவடித்தனங்களை அரங்கேற்றினார்கள்.

இதனால் முழுநாடும் சர்வதேசத்தின் முன் தலை குனிந்து நிற்கிறது. இருப்பினும் பொது பல சேனாவுக்கு எதைபற்றியும் கவலையில்லை. பொய்யை முதலீடாகக் கொண்டு தன் இலக்கை அடைவதில் மாத்திரம் குறியாக இருக்கிறது.

இந்த பின்னணியில் தான் தனக்கு வலு சேர்ப்பதற்காக மியன்மாரில் நூற்றுக்கணக்கான முஸ்லிம்கள் கொல்லப்படுவதற்கு காரணகர்த்தாவாக முழு சர்வதேசத்தாலும் அடையாளங்காணப்பட்ட அசின் விராது தேருடன் கைகோர்த்து இருக்கின்றார்கள். இரு நாடுகளதும் முஸ்லிம்களின் கொலைகளின் காரணகரத்தாக்கள் கைக்கோர்த்திருப்பது ஆச்சரியமான விடயமல்ல.

அன்று வடகிழக்கு முஸ்லிம்கள் நாட்டின் ஒருமைப்பாட்டை மதித்து பிரபாகரனுடன் ஒத்துழைக்க மறுத்ததனால், பல உயிர்களையும் சொத்துக்களையும் வாழ்விடங்களையும் இழந்தார்கள். அவ்வாறான சமுதாயத்துக்கு நன்றி கடனாக யுத்தம் முடிந்ததும் அதன் உணர்வுகளை குத்தி குதறிக்கொண்டு இருக்கின்றார்கள்.

அநீதியையும் அக்கிறமத்தையும் தடுத்து, நீதியையும் சமாதானத்தையும் போதித்த புத்தரின் பெயரை கூறிக்கொண்டு இந்த கூட்டம் அநியாயத்தையும் அக்கிரமத்தையும் அரங்கேற்றிக் கொண்டிருக்கிறது. ஆனால் 'அதர்மம் என்றும் அழிந்தே தீரும்' என்பதை இவர்கள் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும் என்று அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X