2025 டிசெம்பர் 22, திங்கட்கிழமை

சமாதானத்தை ஏற்படுத்தி மனித உரிமைகளை மதித்தல் வேண்டும்: மிச்சல்

Gavitha   / 2014 நவம்பர் 08 , மு.ப. 09:12 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.எஸ்.எம்.நூர்தீன்,எஸ். பாக்கியநாதன்,கே.எல்.ரி.யுதஜித்

சமாதானத்தை ஏற்படுத்தி வன்முறையற்ற விடயங்களை வலுப்படுத்தி, மனித உரிமைகளை மதித்தல் வேண்டும். மற்றவர்களின் சிந்தனைகளுக்கும் இடம்கொடுக்க வேண்டும் என இலங்கையிலுள்ள அமெரிக்கத் தூதுவர் திருமதி. மிச்சல் செஸன் தெரிவித்தார்.

மட்டக்களப்பில் சனிக்கிழமை (08) நடைபெற்ற சமாதானமும் நல்லிணக்கமும் எனும் தலைப்பில் நடைபெற்ற கலந்துரையாடலில் உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

மட்டக்களப்பு சார்ள்ஸ் மண்டபத்தில், தேசிய சமாதானப் பேரவையின் ஏற்பாட்டில் நடைபெற்ற இக்கலந்துரையாடலில் தொடர்ந்துரையாற்றிய அவர்,

இலங்கையிலுள்ள அமெரிக்கத் தூதுவர் திருமதி. மிச்சல் செஸன் கற்றுக்கொண்ட பாடங்கள் நல்லிணக்க ஆணைக்குழுவினால் முன் வைக்கப்பட்டுள்ள பரிந்துரைகளில் கல்வியை மேம்படுத்துதல், சமூக நல்லிணக்கத்தை உருவாக்குதல், சிவில் சமூக அமைப்புக்களின் நடவடிக்கைகளுக்கு உதவுதல், கலாசாரம் மற்றும் விளையாட்டு இளைஞர்களை வலுப்படுத்துதல் போன்ற விடயங்களை மேற்கொள்ள வேண்டும்.

இளைஞர்களை வலுப்படுத்துவதுடன், இளைஞர்களின் முறன்பாடுகளை உரிய முறையில் தீர்த்தல், சிவில் செயற்றிட்டங்களில் பங்கு பற்றுதல், பால் நிலை சமத்துவம், வன்முறையற்ற தொடர்பாடலை தூண்டுதல் போன்ற செயற்றிட்டங்களை தேசிய சமாதானப் பேரவை செய்து வருவது இங்கு பாராட்டத்தக்கதாகும்.

தேசிய சமாதானப் பேரவையின் செயற்திட்டங்களில் பெரும் மகிழ்ச்சியடைகின்றேன். சுதந்திரமாகவும் முக்கியத்துவம் வாய்ந்த செயற்றிட்டங்களை தேசிய சமாதானப் பேரவை நடாத்திக் கொண்டிருக்கின்றது.

கடந்த இரண்டு வருடங்களாக தேசிய சமாதானப் பேரவையின் வேலைத்திட்டங்களை கவனித்து வருகின்றேன். தேசிய சமாதானப் பேரவையின் ரசிகையாக இருந்து வருகின்றேன்.

அதேபோன்று சமாதானப் பேரவையின் நடவடிக்கையின் மூலம் விழிப்புணர்வுகளை ஏற்படுத்துதல், மற்றவர்களின் கருத்துக்களையும் செவிமடுத்தல் போன்ற செயற்றிட்டங்களில் ஆர்வங்காட்டுவது மகிழ்ச்சியளிக்கின்றது.

கலாசாரத்தை வலுப்படுத்துதல், சமாதானத்தை வலுப்படுத்தல் அதே போன்று வன்முறையற்ற விடயங்களை வலுப்படுத்துதல், மனித உரிமைகளை மதித்தல் மற்றும் மற்றவர்களின் சிந்தனைகளுக்கு இடம் கொடுக்க வேண்டும்.

அமெரிக்க ராஜாங்க செயலாளர் ஜோன் ஹெரி இன்று அதிகாலை என்னுடன் தொடர்பு கொண்டு பேசியபோது, ஐக்கிய அமெரிக்கா இலங்கையிலுள்ள அனைத்து மக்களின் தேவைகளில் பங்களிப்பு செய்வதுடன், அனைத்து நேரங்களிலும் இலங்கை மக்களுடன் கை கோர்த்து நிற்பதற்கு தயாராக இருப்பதாகவும் இலங்கை மக்களின் வெற்றிகளிலும் பங்களிப்பு செய்வதாகவும் கூறினார்.

இலங்கையில் மத நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் மத தலைவர்கள் சிவில் சமூக அமைப்புக்களின் தலைவர்கள், நல்லெண்ணத்துடன் செயற்படும் சிவில் அமைப்புக்கள,; அதேபோன்று நல்லிணக்கத்தை வலுப்படுத்தும் அனைத்து தரப்பினருக்கும் பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்கின்றேன்.

நான் மட்டக்களப்பு வருகை தந்திருப்பது நான்காவது தடவையாகும். எனது தந்தை 1955 காலபப்குதியில் மட்டக்களப்புக்கு வருகை தந்துள்ளார். இது மறக்க முடியாத சம்பவமாகும்.

மட்டக்களப்பில் பாடுமீன் கதையொன்றுள்ளது. பாடுமீன்களை காண்பதற்காக காலையிலும் மாலையிலும் மட்டக்களப்பு வாவிகளுக்கு செல்வேன். ஆனால் இதுவரையில் பாடுமீன்களை நான் கண்டதில்லை.

கிழக்கு மாகாண அபிவிருத்தி செயற்பாடுகள் குறித்து மகிழச்சியடைகின்றேன் என அவர் மேலும் தெரிவித்தார்.

இக்கலந்துரையாடலில், தேசிய சமாதானப் பேரவையின் தலைவர் ஜஹான் பெரேரா மற்றும் முக்கியஸ்தர்கள், மத தலைவர்கள், சிவில் சமூக அமைப்புக்களின் தலைவர்கள் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.





  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X