2025 டிசெம்பர் 22, திங்கட்கிழமை

தமிழர்கள் ஏன் அரசியல் கட்சிகளில் அங்கத்தவர்களாக இருக்க வேண்டும்: அருண்

Gavitha   / 2014 நவம்பர் 08 , பி.ப. 12:31 - 0     - {{hitsCtrl.values.hits}}


-வடிவேல் சக்திவேல்

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, ஐக்கிய தேசியக் கட்சி, ஏன் தமிழ் தேசியக் கூட்டமைப்பு போன்ற அரசியற் கட்சிகளில் அங்கத்தவர்களாக தமிழர்கள் ஏன் இருக்க வேண்டும். அவ்வாறு இருந்தால் தான் எமது சமூகத்தால் எதையும் சாத்திக்க முடியும்.
எது எவ்வாறு இருந்தாலும், தேசிய அரசியற் கட்சிகளில் எமது அங்கத்துவம் இல்லை என்றால் தமிழர்கள்; வெறும் பார்வையாளர்களாகத்தான் இருக்க முடியும் என ஜனாதிபதியின் மட்டக்களப்பு மாவட்ட இணைப்பாளர் அருண் தம்பிமுத்து தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு மாவட்டம் பெரியகல்லாறு மத்திய கல்லூரியில் இன்று சனிக்கிழமை (08) பெரியகல்லாறு பிரதேசத்தின் அபிவிருத்தி தொடர்பாக நடைபெற்ற கூட்டத்தில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.
இதன்போது அவர் மேலும் உரையாற்றுகையில்,

எனது பின்னணி எல்லாம் தமிழ் தேசியத்தைத்தான் கொண்டமைந்தது. நான் வெளிநாட்டிலிருந்து இலங்கைக்கு வந்தபோது, தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் என்னைச் சந்தித்து, நீங்கள் படித்தவர் நன்கு விடையமறிந்தவர். நீங்கள் தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் இணைந்து செயற்பட வேண்டும் என என்னிடம் கூறினார். அப்போது எனக்கு அரசியலில் இருக்க வேண்டும் என்ற எண்ணம் இருக்கவில்லை.
ஆனால் ஒரு சந்தர்ப்பத்தில் நான் ஜனாதிபதியைச் சந்தித்தேன். அப்போது என்னை ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியில் சேரும்படி கேட்டார். நான் அதனையும் மறுத்துவிட்டேன். ஆனால் சில மாதங்களுக்குப்பின்  மட்டக்களப்பு மாவட்டத்தில் என்ன நடைபெறுகின்றது என அக்கறை கொண்ட பின்புதான் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியில் இணைந்து கொண்டேன்.

தமிழ் தேசியக் கூட்டமைப்புக் கோரும் தமிழ் தேசியத்துக்கு என்னிடம் எந்த விதமான மாற்றுக் கருத்துக்களும் இல்லை. ஆனால் அதனை நாங்கள் எப்படி அடையப்போகின்றோம் என்ற சிந்தனை எழுந்துள்ளது.

நான் தற்போது ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் மட்டக்களப்பு தொகுதியின் அமைப்பாளராகவும் ஜனாதிபதியின் மட்டக்களப்பு மாவட்ட இணைப்பாளராகவும் ஜனாதிபதியின் ஆலோசகராகவும் இருக்கின்றேன்.

இலங்கையில் சுமூகமான நிலை தோன்ற வேண்டும் என்ற நோக்குடன் நானும் எனது பங்களிப்பக்களை வெளிவிவார அமைச்சினூடாக பல வேலைகளை மேற்கொண்டேன். அதன் மூலமாக எனக்கு ஒவ்வொரு வாரமும் ஜனாதிபதியியைச் சந்திக்கும் வாய்ப்புக் கிடைத்தது.
கடந்த 4 வருடகாலத்தில் வெளிவிவகார அமைச்சிலும், ஜனாதிபதி செயலகத்திலும் தான் எனது நேரம் செலவளிக்கப்பட்டது. தற்போது மட்டக்களப்பு மாவட்டத்தில் காரியாலயம் அமைத்து எனது அரசியல் பணியினை முன்னெடுத்து வருகின்றேன்.

கிழக்கு மாகாணசபை கோரும் காணி பொலிஸ் அதிகாரங்களை கடந்த 4 வருட காலமாக எதிர்த்து வரும் ஒரே ஒரு அரசியல் நான் மட்டும்தான். கிழக்கு மாகாணத்தில் தமிழர்கள் தற்போது 34 வீதமாகவுள்ளோம். ஆனாலும் கிழக்கு மாகாணத்தை தமிழர்கள் ஆழவில்லை. கிழக்கில் தமிழர்கள் பெரும்பான்மையாக வாழும் காணிகளை எங்களால் பாதுகாக்க முடியாது.

இது வடமாகாணத்துக்குப் பொருந்தும். ஆனால் கிழக்குக்குப் பொருந்தாது. ஆனால் கிழக்கு மாகாணத் தமிழர்களுக்கான தீர்வை முன்வைத்து விட்டு நாங்கள் எந்த அதிகாரத்தையும் பரவலாக்கலாம். கிழக்குத் தமிழர்களின் நிலை கேள்விக் குறியாக்கப்பட்டிருக்கும். இந்நிலையில் எந்த விதத்தில் காணி பொலிஸ் அதிகாரத்தைக் கோர முடியும்.

யாழ். மாவட்டதில் பல தொழிற்சாலைகளும் தொழிற்போட்டைகளும் உருவாக்கப்பட்டுள்ளன. ஆனால் மட்டக்களப்பு மாவட்டத்தில் இதுவரையில் எந்த விதமான தொழிற்சாலைகளும் உருவாக்கப்பட்டவில்லை. 1950இல் நல்லையா என்பவர் அமைச்சராக இருந்த காலத்தில் உருவாக்கப்பட்ட வாழைச்சேனை காகித ஆலைகூட, தற்போது மூடப்பட்டுள்ளது. எனவே, எதிர் காலத்தில் மட்டக்களப்பில் பாரிய அபிவிருத்திகளும் தொழிற்போட்டைகளும் நிறுவப்பட வேண்டுமாக இருந்தால் நாம் எவ்வாறு செயற்பட வேண்டும் என்பது பற்றிச் சிந்திக்க வேண்டும்.

பெரியகல்லாறு மத்திய கல்லூரிக்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வரவேண்டும். இங்கு வந்து இந்தக் கல்லுரியைப் பார்க்க வேண்டும் பல வளங்கள் அற்ற நிலையில், இலங்கையில் இந்தக் கல்லூரி இயங்குகின்றது என்பன இருந்த போதிலும் இந்தப் பிரதேசத்தில் உள்ள பிரச்சனைகளுக்கு எவ்வாறு தீர்வு காணப்போகின்றோம் என்பது பற்றியும் சிந்திக்க வேண்டும்.

பட்டிருப்புத் தொகுதியில் அமைந்துள்ள மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலகம் மற்றும் போரதீவுப்பற்று பிரதே செயலகம் ஆகிய 2 பிரதேச செயலகங்களையும் 4 பிரதேச செயலகங்களாகப் பிரிக்க வேண்டும். அவ்வாறு அமையும் பட்சத்தில் அபிவிருத்திகளும் நிதி ஒதுக்கீடுகளும் பாரியளவில் ஏற்படுத்தப்படும் என்பதில் எதுவித சந்தேகங்களுமில்லை.

இதனைவிட களுதாவளையினை மையமாக வைத்து ஒரு நகரசபையும், பெரியகல்லாற்றை மையமாக வைத்து ஒரு பிரதேச சபையும் அமையப்பெறல் வேண்டும். நாங்கள் இனிவரும் காலங்களில் உள்ளூராட்சி சபைகளை சரியான முறையில் அமைத்தால்தான் எமது உரிமைகளும் பலப்படுத்தப்படும் என்பதில் எந்தவிதமான மாற்றுக் கருத்துக்களும் கிடையாது. மட்டக்களப்பு மாவட்டதிலுள்ள பிரதேச சபைகளின் எல்லைகள் மாற்றியமைக்கப்பட வேண்டும் என்பது பற்றி விரிவாக ஜனாதிபதியிடம் எடுத்துரைத்துள்ளேன்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் கரையோரப் பிரதேசத்தில் இதுவரையில மீன் பிடித்துறைமுகம் எதுவும் அமைக்கப்படவில்லை என மட்டக்களப்பு மாவட்டத்தில் பால்ச்சேனை, களுவன்கேணி, பெரியகல்லாறு ஆகிய மூன்று இடங்களிலும் இந்த மீன் பிடித்துறைமுகங்கள் அமையப் பெறவேண்டும் என்ற கோரிக்கையினை ஜனாதிபதியிடம் கடந்த ஒன்றரை வருடங்களுக்கு முன்னர் வைத்துள்ளேன். எனவே எமது தமிழ் சமூகம் பொருளாதாரத்தைத் தக்க வைத்துக்கொள்ள வேண்டும் அவ்வாறெனில்தான் மாற்று சமூகங்களைப்போல் முன்னேற்றமடையலாம்.

அம்பாறையிலிருக்கின்ற வட்டமடு மேச்சல் தரைப் பிரச்சனைகளைப் பார்ப்பதற்கு, மட்டக்களப்பிலுள்ள நான் செல்ல வேண்டியுள்ளது. கல்முனை தமிழ் பிரதேச செயலகத்தைத் தரமுயர்த்துவதற்கு முஸ்லிம் சமூகத்தைச் சார்ந்த 4 கபிநெட் அமைச்சர்கள் அமைச்சரவைக் கூட்டத்தில் எழுந்து நின்று எதிர்ப்புத் தெரிவிக்கின்றார்கள். இந்த விதத்தில் அவர்களுக்கு இருக்கும் ஒற்றுமை நமது தமிழ் சமூகத்தில் இல்லை இதனை நாங்கள் நன்கு உணர வேண்டும்.

தமிழர்கள் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, ஐக்கிய தேசியக் கட்சி, ஏன் தமிழ் தேசியக் கூட்டமைப்பு போன்ற அரசியற் கட்சிகளில் அங்கத்தவர்களாக இருக்க வேண்டும். அவ்வாறு இருந்தால்தான் எமது சமூகத்தினாலும் எதையும் சாத்திக்க முடியும். எது எவ்வாறு இருந்தாலும், தேசிய அரசியற் கட்சிகளில் எமது அங்கத்துவம் இல்லை என்றால் தமிழர்கள்; வெறும் பார்வையாளர்களாகத்தான் இருக்க முடியும்.

அரசாங்கத்தில் அம்பாறை மாவட்டத்தைச் சேர்ந்த பியசேன என்ற நாடாளுன்ற உறுப்பினர் இருக்கின்றார். அவர்; தமிழ் தேசியத்தால் உருவாக்கப்பட்டவர். அவருக்கு எந்த விதமான எண்ணங்களும் கிடையாது அவர் தற்போது அரசாங்கத்தால் பாதுகாக்கப்பட்டு வருகின்றார். அம்பாறை மாவட்டத்தில் தமிழ் மக்களுக்கு பல பிரச்சனைகள் இருக்கின்றது என அவரை நான் சந்தித்துக் கேட்போது அவர் உரிய பதில வழங்கவில்லை.

ஜனாதிபதித் தேர்தல் வரப்போவது உண்மை. ஆனால் நமது மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள மக்கள் இடும் வாக்குகளால் மாத்திரம் ஒரு ஜனாதிபதி தெரிவு செய்யப்படுவதில்லை இதனை நாம் நன்கு உணர வேண்டும்.
கடந்த ஜனாதிபதித் தேர்தல்களில் தேல்வியடைந்த ஜனாதிபதி வேட்பாளர்களுக்குத்தான் எமது மட்டக்களப்பு மக்கள் வாக்களித்துள்ளார்கள். இதன் மூலமாக எந்த மாற்றமும் உருவாகவில்லை என அவர் மேலும் தெரிவித்தார்.
 
இந்நிகழ்வில், பெரியகல்லாறு சர்வாத்த சித்தி விநாயகர் ஆலயத்தின் தலைவர் க.சீவரெட்ணம் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், துறைநீலாவணை, கோட்டடைக் கல்லாறு, பெரியகல்லாறு போன்ற பல பிரதேசங்களில் அமைந்துள்ள கிராம மட்ட அமைப்புக்களின் பிரதிநிதிகள், பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டிருந்தனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X