2025 டிசெம்பர் 21, ஞாயிற்றுக்கிழமை

நிறைவேற்று அதிகாரம் கொண்ட எந்த ஜனாதிபதியும் தமிழர் பிரச்சினைக்கு தீர்வு காணவில்லை: அரியநேத்திரன்

Gavitha   / 2014 டிசெம்பர் 16 , பி.ப. 12:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வடிவேல் சக்திவேல் 

இலங்கையில் நிறைவேற்று அதிகரமுடைய ஐனாதிபதி எவரும் தமிழ் மக்களின் தீர்வுக்காக ஜனாதிபதியினுடைய அதிகாரத்தை பயன்படுத்தவில்லை. அதற்கு எதிராகவே பயன்படுத்தியுள்ளனர் என்று தமிழ்த் தேசியக் கூட்டைமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் பா. அரியநேத்திரன் தெரிவித்தார்.

ஐனாதிபதி தேர்தல் தொடர்பாக செவ்வாய்க்கிழமை (16) தொடர்புகொண்டு வினவிய போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்,

இம்முறை நடைபெறவுள்ள தேர்தலானது ஏழாவது ஐனாதிபதித் தேர்தலாகும். இதற்கு முன்னர் இலங்கையை ஆண்ட நிறைவேற்று அதிகார ஐனாதிபதிகளில் ஜே.ஆர்.ஜயவர்த்தனவாக இருக்கலாம் அல்லது சந்திரிக்காவாக இருக்கலாம் அதனையும் விட தற்போது இருக்கின்ற மஹிந்த ராஐபக்சஷவாக இருக்கலாம் இவர்கள் அனைவரும் இந்த நிறைவேற்று அதிகாரத்தை வைத்துக்கொண்டு தமிழ் மக்களுக்கு உரிய தீர்வினை பெற்றுத்தரவில்லை. மாறாக வடக்கு, கிழக்கில் வாழ்கின்ற தமிழ் மக்களுக்கு எதிராகவும் அவர்களது பதவியின் நலனுக்காகவே செயற்பட்டுள்ளனர்.

நடைபெறவிருக்கும் தேர்தலில் பல போர் போட்டியிட்டாலும் மஹிந்த அல்லது மைத்திரி ஆகிய இருவரில் ஒருவர்தான் வெற்றி பெறப்போகின்றார். இவர்களினால் வடக்கு, கிழக்கு வாழ் தமிழ் மக்களுக்கு எந்தவித தீர்வு கிடைக்கும் என எதிர்பார்த்து எவரும் வாக்களிக்க வேண்டாம்.

இதற்காக வாக்களிக்காமலும் இருக்ககூடாது. அனைவரும் ஒன்றிணைந்து வாக்களிக்க வேண்டிய தேவையும் உள்ளது. காரணம் வடக்கு கிழக்கில் வாழ்கின்ற தமிழ் மக்கள் தனித்துவமானர்கள் என்பதனையும் 65 வருடகாலமாக இன விடுதலைக்கான போராடி வருகின்ற இனம் என்பதனை நாங்கள் ஒற்றுமையாக வாக்களிப்பதன் மூலம் பறைசாற்ற வேண்டும். எனவே, இம் முறைத்தேர்தலில் யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்பதில் அக்கறை காட்டுவதை விட யாருக்கு வாக்களிக்கக் கூடாது என்பதில் அக்கறையாக இருக்க வேண்டும்.

குறிப்பாக, எமது மாட்டத்தை பொறுத்தளவில் மஹிந்த ராஐபக்ஷவை ஆதரிக்கின்ற அமைச்சர்கள், பிரதியமைச்சர்கள், அமைப்பாளர்கள் அனைவரும் தற்பொழுது கூறிவருவது என்ன வென்றால், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவு தேவையில்லை, தமிழ் மக்களின் ஆதரவும் தேவையில்லை, எவ்வாறியினும் எமது ஐனாதிபதி  வெற்றி பெறுவார் என்பதே ஆகும்.

இதில் பார்க்க வேண்டியது என்னவென்றால், இந்த அரசாங்கம் தமிழ் மக்களுக்கு நன்மை செய்யவில்லை. மாறாக கெடுதலையே செய்துள்ளது என்பதனை உணர்ந்து கூறுகின்றதா அல்லது வடக்கு கிழக்கு மக்களின் ஆதரவு தேவையில்லை என்பதனூடாக நாங்கள் சிங்கள மக்களின் தலைவர் என்பதனை காட்ட வெளிக்கிடுகின்றார்களா என்று தெரியவில்லை.

இவ்வாறு தமிழ் மக்களை செல்லாக் காசாக நினைக்கும் இந்த மஹிந்த அரசுக்கு மக்கள் வாக்களிக்கத் தேவையில்லை. தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவு தேவையில்லை எனக் கூறுவது வடக்கு, கிழக்கு மக்களின் ஆதரவு தேவையில்லை என்பதற்கு சமனாகும். அப்படியாக இருந்தால் வடக்கு கிழக்கில் தேர்தல் பிரசாரம் செய்யத் தேவையில்லை. ஏன் பிரசாரம் செய்வதற்காக ஆங்காங்கே திருவிழாக் காலங்களில் மிட்டாய் கடை போடுவது போன்று பிரதியமைச்சர்கள், அமைப்பாளர்கள் தேர்தல் அலுவலகங்களை திறந்து வைத்து பிரசாரம் செய்வது தேவையற்ற விடயமாகும்.

இதே நேரத்தில் கடந்தகால தேர்தல் வரலாறு என்பது விடுதலைப் புலிகள் மௌனித்த காலப் பகுதிக்குப் பின்னர் ஏறக்குறைய 6 தேர்தல்களை சந்தித்துள்ளோம். இதனை பிரதேச சபை, மகாணசபை, நாடாளுமன்ற தேர்தல் என கட்டம் கட்டமாக சந்தித்துள்ளோம்.

இதில் எமது பலத்தை நிருபித்துக் காட்டியிருக்கின்றோம். இதில் எமது மக்கள் கட்சி காரியாலங்களையும் ஒட்டுகின்ற சுவரொட்டிகளையும் பார்த்து வாக்களிக்கவில்லை. தமிழ் தேசியக் கூட்மைப்பின் விருப்பத்துக்கு அமைவாகவே வாக்களித்துள்ளனர். இதன் பிரகாரம் ஐனாதிபதித் தேர்தலில் யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்பதனை எமது தலைவர் சம்மந்தன் ஜயா முடிவெடுப்பார் என்பதனை தெரிவித்துக் கொள்ள விரும்புகின்றேன் என அவர் தெரிவித்தார்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X