2025 மே 17, சனிக்கிழமை

'இயற்கை அனர்த்தங்களில் அதிகம் பாதிக்கப்படுவது சிறுவர்களே'

Gavitha   / 2015 மே 26 , பி.ப. 01:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வடிவேல் சக்திவேல்  

வெள்ளம், வரட்சி, சூறாவளி போன்ற இயற்கை அனர்த்தங்கள் எல்லோரையும் தாக்கினாலும் அதனால் மிக அதிகமாக பாதிக்கப்படுவோர் சிறுவர்களேயாகும், உடல், உளம், அறிவு, அனுபவம் என்பவற்றில் அவர்கள் பலவீனமானவர்கள் என்று இலங்கை செஞ்சிலுவைச் சங்க மட்டக்களப்புக் கிளைத் தலைவர் த.வசந்தராஜா தெரிவித்தார்.

இயற்கை அனர்த்தம் ஒன்றின் போது, கிராம மட்ட அனர்த்த முகாமைத்துவக் குழுவினர் சிறுவர்கள் மீது அதிக அக்கறை காட்டுதல் வேண்டும். அத்தோடு பெண்கள், வயோதிபர், நோயாளர், மாற்றுத்திறனாளிகள் முதலானோரும் இலகுவில் பாதிக்கப்படுபவர்கள். இவர்கள் மீதும் அனர்த்த முகாமைத்துவக் குழுவினர் அக்கறை காட்டுதல் வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.

வெல்லாவெளியிலுள்ள  கிராம மட்ட அனர்த்த முகாமைத்துவக் குழுக்களுக்கான முதலுதவிப் பயிற்சியை இன்று செவ்வாய்கிழமை (26) ஆரம்பித்து வைத்து உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்திருந்தார்.

அக்ரட் மற்றும் வேள்ட் விஷன் ஆகிய அரச சார்பற்ற அமைப்புக்களினால் மட்டக்களப்பு மாவட்டம், வெல்லாவெளி பிரதேச செயலகப்பிரிவில் நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் வாழ்வாதார செயற்பாட்டுக்கான அனர்த்த முகாமைத்துவ நிகழ்ச்சித் திட்டத்தினூடாக கிராம மட்ட அனர்த்த முனாமைத்துவ குழுக்களைப் பலப்படுத்தும் திட்டமே இன்று ஆரம்பிக்கப்பட்டது.

கிராம மட்ட அனர்த்த முகாமைத்துவக் குழுவின் முதலுதவிப் பிரிவினர் எப்போதும் தம்மைப் பயிற்றுவித்து எவ்வேளையிலும்; தயாராயிருத்தல் வேண்டும். அபாயம் எம்மை எவ்வேளையிலும்; தாக்கலாம். எதிர்பாராத வேளைகளில் நிகழுகின்ற அனர்த்தங்களின்போதுதான், பெரும் சேதமும் அழிவுகளும் இடம் பெறுகின்றன என்று அவர் குறிப்பிட்டார்.

சில அபாயங்கள் தாக்கப்போவதை நாம் முன்கூட்டியே அறிந்து கொள்கின்றோமாயின், அப்போது உயிரிழப்புக்களையும் பொருட்சேதங்களையும் நாம் குறைத்துக் கொள்ள முடிகின்றது. ஆனால் எதிர்பாராத நேரங்களில் நிகழ்கின்ற அனர்த்தங்களின் போது எம்மால் அழிவுகளைக் குறைத்துக் கொள்ள முடிவதில்லை. ஏனெனில் நாம் அனர்த்தங்களை எதிர்கொள்ளத் தயாராயிருப்பதில்லை. எனவே கிராம மட்ட அனர்த்த முனாமைத்துக் குழுவினர் எப்போதும் செயற்படக்கூடிய தயார் நிலையில் இருப்பதற்காகவே அரசும், அரச சார்பற்ற நிறுவனங்களும் அனர்த்த முகாமைத்துவக் குழுக்களின் இயலுமையை வளர்ப்பதற்காக தொடர் முயற்சிகளை மேற்கோண்டு வருகின்றன எனத் தெரிவித்தார்.

இந்நிகழ்வு அக்ரட் நிறுவனத்தின் மட்டக்களப்பு மாவட்ட நிகழ்ச்சித்திட்ட உத்தியோகஸ்தர் இ.கஜேந்திரனின் தலைமையில் இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தின் முதலுதவிப் பயிற்றுனர்களினால் நடாத்தப்பட்டது.

போரதீவுப்பற்று பிரதேசத்திலுள்ள காந்திபுரம், திக்கோடை, கழுமுந்தன்வெளி, வம்மியடி ஊத்து, தும்பங்கேணி, இளைஞர் விவசாயத்திட்டம் ஆகிய கிராம உத்தியோகஸ்தர் பிரிவுகளில் செயற்பட்டு வரும் அனர்த்த முகாமைத்துவக் குழுக்களோடு இயங்கி வரும் முதலுதவிக் குழுக்களுக்கே இப்பயிற்சி வழங்கப்பட்டது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .