2025 மே 16, வெள்ளிக்கிழமை

அரந்தலாவ துப்பாக்கி சூட்டு சம்பவம் தொடர்பில் இருவர் கைது

Suganthini Ratnam   / 2015 ஜூன் 24 , மு.ப. 09:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ. ஹுஸைன்

மட்டக்களப்பு - அம்பாறை மாவட்டங்களின் எல்லைப் பிரதேசமான மஹாஓயா, அரந்தலாவையில் நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பில் சந்தேக நபர்கள் இருவரை அன்றையதினம் மாலை கைதுசெய்ததாக மங்களகம பொலிஸார் தெரிவித்தனர்.

சமிக்ஞையை மீறி நிறுத்தாமல் சென்ற லொறி மீது பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் அம்பலாங்கொட மீகஹவனகந்தர, போகஹவௌ, கரமிட்டியார பகுதியை சேர்ந்த சமரரத்ன முகாம்திரம்லாகே அனுர சமீர (32 வயது) என்பவரே மரணமடைந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

அம்பாறை - மஹாஓயா வீதியில் பயணித்துக்கொண்டிருந்த லொறியை சோதனைக்காக  நிறுத்துமாறு மங்களம பொலிஸார் சமிக்ஞை காட்டினர்.  எனினும், இந்த  உத்தரவையும் மீறி மிக  வேகமாக  பொலிஸ் சாவடியை லொறி கடந்து செல்லவே, அடுத்ததாகவுள்ள அரந்தலாவ பொலிஸ் நிலையத்துக்கு  நிறுத்தாமல் சென்ற லொறி  தொடர்பில் பொலிஸார் தகவல் வழங்கியிருந்தனர்

அரந்தலாவ பொலிஸாரும் லொறியை நிறுத்துமாறு கூறவே அங்கும் லொறி நிறுத்தப்படவில்லை. உடனடியாக லொறி மீது பொலிஸார் துப்பாக்கிச் சூடு நடத்தினர். அப்போதும் லொறி நிறுத்தாமல் சென்றது.

பின்னர் பொலிஸார் தேடுதல் நடத்தியபொழுது,  அம்பாறை பொறகொல்ல விகாரைக்கு அருகில் கைவிடப்பட்ட நிலையில் லொறி காணப்பட்டதுடன், லொறியினுள் துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுடன் சடலமும் காணப்பட்டது.

அவ்வேளையில் அந்தப் பிரதேசத்தில் சந்தேகத்துக்கிடமான முறையில் பயணித்துக்கொண்டிருந்த  கார் ஒன்றை வழிமறித்து சோதனையிட்டு, காரிலிருந்த இருவரை விசாரணைக்குட்படுத்தியபோது, காரிலிருந்தவர்கள் மாடுகள் ஏற்றிச்செல்லும் லொறிக்கு பாதுகாப்பு வழங்கி வந்தார்கள் எனத் தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து இந்த சந்தேக நபர்கள் இருவரும் கைதுசெய்யப்பட்டனர்.

இவர்கள் தொடர்பில் மேலும் விசாரணைகளை மேற்கொண்டபோது,  தென்பகுதியைச் சேர்ந்த 05 பேர்   மாடுகள் ஏற்றிவந்த லொறியிருந்து தப்பியோடியிருப்பதாகத் தெரியவந்துள்ளது. மேற்படி குழுவினர் அப்பகுதியிலுள்ள மாடுகளை களவாகப் பிடித்து சட்டவிரோதமாக விற்பனை செய்து வருவதாகவும் விசாரணையிலிருந்து தெரியவந்துள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

இச்சம்பவம் குறித்து பொலிஸார் தொடர்ந்தும்  விசாரணைகளில் ஈடுபட்டுள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .