Suganthini Ratnam / 2016 ஜூன் 13 , மு.ப. 05:35 - 0 - {{hitsCtrl.values.hits}}

-எம்.எம்.அஹமட் அனாம்
மட்டக்களப்பு மாவட்டத்தின் கல்குடாக் கல்வி வலயத்துக்கு உட்பட்ட வாழைச்சேனை இந்துக் கல்லூரியில் நிலவுகின்ற ஆசிரியர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்யுமாறு கோரி அப்பாடசாலைக்கு வெளியில் இன்று திங்கட்கிழமை மாணவர்களும் பெற்றோரும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இப்பாடசாலைக்கு 90 ஆசிரியர்கள் தேவைப்படுகின்றனர். ஆனால், தற்போது இப்பாடசாலையில் 64 ஆசிரியர்களே கடமையாற்றி வருகின்றனர்.
மேலும், இப்பாடசாலையில் க.பொ.த. உயர்தர வகுப்பில் கற்பித்த ஐந்து ஆசிரியர்கள் கடந்த ஏப்ரல் மாதம் இடமாற்றம் பெற்றுச் சென்றுள்ளனர். இவர்களுக்குப் பதிலீடாக இதுவரையில் ஆசிரியர்கள் எவரும் நியமிக்கப்படவில்லை எனவும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோர் தெரிவித்தனர்.
கணிதம், பௌதீகவியல், ஆங்கிலம், தமிழ் ஆகிய பாடங்களுக்கு ஆசிரியர்கள் அவசரமாகத் தேவைப்படுவதாகவும் இப்பாடங்களுக்கான ஆசிரியர்களை உடனடியாக நியமிக்கப்பட வேண்டும் எனவும் அவர்கள் கூறினர்.
இந்நிலையில், ஆர்ப்பாட்ட இடத்துக்கு வருகை தந்த கல்குடா வலயக் கல்விப் பணிப்பாளர் எஸ்.ஸ்ரீகிருஸ்ணராஜா, பெற்றோருடனும் மாணவர்களுடனும் கலந்துரையாடினார். இதன்போது, இப்பாடசாலைக்கு ஒரு வாரகாலத்துக்குள் ஆசிரியர்களை நியமிப்பதாக அவர் உறுதியளித்தார். இதனைத் தொடர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோர்; கலைந்து சென்றனர்.


2 hours ago
23 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
23 Dec 2025