2026 மார்ச் 06, வெள்ளிக்கிழமை

’இந்தியாவை நாங்கள் முழுமையாக ஏற்க வேண்டும்’

Princiya Dixci   / 2021 மார்ச் 30 , பி.ப. 04:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

சகா, பாறுக் ஷிஹான்

இந்தப் பிராந்தியத்திலே இந்தியாவினது செல்வாக்கும் பலமும் எமக்கு அவசியம் எனத் தெரிவித்த இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா, இந்தியாவை நாங்கள் முழுமையாக ஏற்க வேண்டுமென்றார். 

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் அம்பாறை மாவட்ட புனரமைப்புக் கூட்டம், அவரது தலைமையில், திருக்கோவிலில் நேற்று (29) நடைபெற்ற போதே, மாவை சேனாதிராஜா இவ்வாறு தெரிவித்தார். 

அவர் அங்கு மேலும் கருத்துரைக்கையில், “ஐ.நாவில் நாங்கள் முழுமையாக எதிர்பார்த்த ஒரு பிரேரணையாக வரவில்லையே தவிர, அதை நோக்கிச் செல்வதற்கான நகர்வுகள் பல அத்தீர்மானத்தில் இருக்கின்றன. 

“தினேஸ் குணவர்த்தன சொல்வது போன்று நடுநிலைமை வகித்தவர்கள் எல்லோரும் இலங்கைக்கு ஆதரவானவர்கள் அல்லர். பிரேரணைக்கு ஆதரவளித்த 22 நாடுகள் எடுத்த தீர்மானத்தில் நடுநிலை வகித்த நாடுகளின் பங்களிப்பு மிகவும் முக்கியமானதாக இருந்திருக்கின்றது

“தற்போது ஜனாதிபதியாக வந்திருப்பவரின் நிர்வாக அலகுகளிலே இராணுவத்தில் இருந்தவர்கள் மற்றும் சர்வதேச ரீதியில் போர்க்குற்றம் சுமத்தப்பட்டவர்களே நாடு முழுவதும் தலைமைப் பொறுப்புகளிலே அமர்த்தப்பட்டிருக்கின்றார்கள். அதேபோலவே, போர்க்குற்றம் சுமத்தப்பட்ட ஜனாதிபதியும் ஜனநாயக ரீதியாகத் தெரிவு செய்யப்பட்டிருக்கின்றார்.

“தற்போது மியன்மாரில் நடக்கின்ற சம்பவங்களைப் பார்த்தால், எதிர்காலத்தில் எமது நாட்டிலும் என்ன நடக்கப் போகின்றது என்பதை மிகவும் அச்சத்தோடு எதிர்நோக்குகின்ற காலம் இது. எனவே, நாங்கள் மிகக் கவனமாக அவதானமாக எமது இளம் சமுதாயத்தை அணி திரட்ட வேண்டியதையும் கட்சிகளை அதற்கு ஆயத்தம் செய்ய வேண்டியதையும் பொறுப்புகளைக் கொண்டிருக்கின்றோம்.

“நிறைவேற்றப்பட்டள்ள பிரேரணையால் எதிர்காலத்தில் என்ன விளைவுகள், நலன்கள் ஏற்பட இருக்கின்றன என்பதைப் பொறுமையுடன் எதிர்பார்த்திருக்க வேண்டும். குற்றமிளைத்தவர்களுக்குத் தண்டனை என்பது ஒன்றாக இருந்தாலும் மறுபுறம் எமது இனப்பிரச்சினை தீர்க்கப்பட வேண்டியதற்கான திறவுகோள்கள் சர்வசேத்தின் சந்தர்ப்பம் என்பனவும் முக்கியம். இந்தியாவை நாங்கள் முழுமையாக ஏற்க வேண்டும். இந்தப் பிராந்தியத்திலே அவர்களது செல்வாக்கும் பலமும் எமக்கு அவசியம்” என்றார். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .