2025 மே 22, வியாழக்கிழமை

ஏறாவூர் இரட்டைப் படுகொலை: விளக்கமறியல் நீடிப்பு

ஏ.எச்.ஏ. ஹுஸைன்   / 2017 செப்டெம்பர் 20 , பி.ப. 04:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ. ஹுஸைன்

ஏறாவூரில் தாய் மற்றும் மகள் இரட்டைப் படுகொலைச் சந்தேகநபர்களில் ஐவரையும் தொடர்ந்தும் எதிர்வரும் 04ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு, மேலதிக நீதவானும் மேலதிக மாவட்ட நீதிபதியுமாகிய மொஹமட் இஸ்மாயில் மொஹமட் றிஷ்வி  வழக்கை அன்றைய தினத்துக்கு ஒத்தி வைத்து உத்தரவிட்டார்.

ஏறாவூர் நகர பிரதேசத்தில் முகாந்திரம் வீதி முதலாவது குறுக்கு ஒழுங்கையிலுள்ள வீட்டில் வசித்து வந்த தாயான நூர்முஹம்மது உஸைரா (வயது 56) அவரது திருமணமான மகளான ஜெனீராபானு மாஹிர் (வயது 32) ஆகியோர் கடந்த செப்டெம்ர் 11ஆம் திகதி படுகொலை செய்யப்பட்டிருந்தனர்.

சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட 6 சந்தேக நபர்களும் கடந்த செப்டெம்பர் மாதத்திலிருந்து தொடர்ச்சியாக விளக்கமறியல் உத்தரவில் இருந்து வந்த நிலையில் தமக்குப் பிணை வழங்குமாறு கேட்டு சந்தேக நபர்களில் இருவரால்  தாக்கல் செய்யப்பட்ட மனுமீதான விசாரணை, கடந்த 12ஆம் திகதி மட்டக்களப்பு மேல் நீதிமன்ற நீதிபதி எம்.வை.எம். இர்ஸதீன் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, சந்தேக நபர்களைப் பிணையில் செல்ல அனுமதி வழங்கப்பட்டது.

ஏறாவூர் ஆதார வைத்தியசாலை பின் ஒழுங்கையைச் சேர்ந்த இஸ்மாயில் மொஹமட் பாஹிர் (வயது 25) மற்றும் ஏறாவூர் காட்டுப்பள்ளி வீதியைச் சேர்ந்த அபூபக்கர் மொஹமட் பிலால் (வயது 50) ஆகியோர் தலா இரண்டரை இலட்ச ரூபாய் ரொக்கப் பிணையிலும் தலா 5 இலட்ச ரூபாய் கொண்ட இரண்டு சரீரப் பிணைகளிலும் செல்ல அனுமதிக்கப்பட்டனர்.

சந்தேக நபர்களில் அபூபக்கர் மொஹமட் பிலால் என்பவர், கடந்த வியாழக்கிழமை  பிணை நிபந்தனைகளைப் பூர்த்தி செய்து வெளியே வந்திருந்தார்.

ஆயினும், பிணை வழங்கப்பட்ட மற்றைய சந்தேக நபரான இஸ்மாயில் மொஹமட் பாஹிர் (வயது 25) என்பவர் பிணைத் தொகையான இரண்டரை இலட்ச ரூபா ரொக்கப் பணத்தை செலுத்தத் தவறியதனாலும், விலாசம் குறிப்பிடப்பட்டதில் வேறுபாடு காணப்பட்டதாலும் விடுவிக்கப்படாது தொடர்ந்தும் சிறையில் உள்ளார்.

ஏறாவூர் காட்டுப்பள்ளி வீதியைச் சேர்ந்த அபூபக்கர் மொஹமட் பிலால் (வயது 50), ஆதார வைத்தியசாலை பின் ஒழுங்கையைச் சேர்ந்த இஸ்மாயில் மொஹமட் பாஹிர் (வயது 24- கொல்லப்பட்ட பெண்ணின் கணவனுடைய சகோதரன்), அப்துல் மஜீத் மாவத்தை ஐயங்கேணியைச் சேர்ந்த வசம்பு என்றழைக்கப்படும் உஸனார் மொஹமட் தில்ஷான் (வயது 29),  பாடசாலை வீதி - மீராகேணியைச் சேர்ந்த கலீலுர் ரஹ்மான் அஹமட் றாசிம் (வயது 23), பள்ளியடி வீதி, காவத்தமுனை, ஓட்டமாவடியைச் சேர்ந்த புஹாரி மொஹமட் அஸ்ஹர் (வயது 23), ஏறாவூர் நகர் - போக்கர் வீதியைச் சேர்ந்த  இஸ்மாயில் சப்ரின் (வயது 30) ஆகியோரே இரட்டைப் படுகொலையுடன் சம்பந்தமான வழக்கை எதிர்கொள்ளும் சந்தேகநபர்களாவர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .