2025 மே 09, வெள்ளிக்கிழமை

கிழக்கு மாகாணத்தில் அடை மழை; மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

Suganthini Ratnam   / 2016 ஜனவரி 06 , மு.ப. 07:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.பாக்கியநாதன், எம்.எஸ்.எம்.ஹனீபா, எப்.முபாரக்,அப்துல்சலாம் யாசீம்

மட்டக்களப்பு, அம்பாறை, திருகோணமலை ஆகிய  மாவட்டங்களில் பெய்துவரும் அடை மழை காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மட்டக்களப்பு

மட்டக்களப்பு மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை (05) காலை 8.30 மணி முதல் இன்று புதன்கிழமை காலை 8.30 மணிவரையான 24 மணித்தியாலங்களில் 58.8 மில்லிமீற்றர் மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட வானிலை அவதான  நிலையப் பொறுப்பதிகாரி கே.சூரியகுமாரன் தெரிவித்தார்.

இந்நிலையில், இருதயபுரம், மாமாங்கம், திஸவீரசிங்கம் சதுக்கம், ஊறணி உள்ளிட்ட தாழ்நிலப் பிரதேசங்களில் வெள்ள அபாயம் ஏற்பட்டுள்ளது.

அம்பாறை

அம்பாறை மாவட்டத்தில் கடந்த இரண்டு நாட்களாக தொடர்;ச்சியாகப் பெய்துவரும் மழை காரணமாக தாழ்நிலப் பிரதேசங்களில் வெள்ளம் அபாயம் ஏற்பட்டுள்ளது.

பொத்துவில், திருக்கோவில், லகுகல, பாணமை, அம்பாறை, அக்கரைப்பற்று, அட்டாளைச்சேனை, பாலமுனை, ஒலுவில், நிந்தவூர், சம்மாந்துறை, காரைதீவு, கல்முனை, நற்;பிட்டிமுனை, நாவிதன்வெளி, மருதமுனை ஆகிய தாழ்நிலப் பிரதேசங்களிலுள்ள மக்களின் குடியிருப்பு வீடுகள் நீரில் மூழ்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

மேலும் அநேகமான உள்வீதிகள் நீரில் மூழ்கியுள்ளதுடன்,  உள்ளூர்ப் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளது. தாம்போதிகளிலும் வாய்க்கால்களிலும் நீர் பெருக்கெடுத்துள்ளன.

கடல் கொந்தளிப்பாகக் காணப்படுவதினால் மீனவர்களில் பலர் கடலுக்குச் செல்வதைத் தவிர்த்துள்ளனர். இதனால் கடற்றொழில் நடவடிக்கை பாதிக்கப்பட்டுள்ளதாக பாலமுனை மீனவர் சங்கத் தலைவர் ஏ.எம்.எம்.நைய்ம் தெரிவித்தார்.  
திருகோணமலை மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை முதல் இன்று புதன்கிழமைவரை தொடர்ச்சியாக மழை பெய்வதினால் கந்தளாய், கிண்ணியா, தோப்பூர், திருகோணமலை நகரம், புல்மோட்டை, மூதூர் முள்ளிப்பொத்தானை போன்ற பகுதிகள் வெள்ளநீரில் மூழ்கி காணப்படுகின்றன.

திருகோணமலை

திருகோணமலை மாவட்டத்திலுள்ள கந்தளாய்க்குளம், பரவிப்பாஞ்சான் குளம், கல்மெட்டியாவ குளம், வான்எல குளம், அக்போபுர குளங்களின் நீர்மட்டம் வெகுவாக உயர்ந்துள்ளதாக நீர்ப்பாசன பொறியியலாளர்கள் தெரிவித்தனர். மேலும், தொடர்ச்சியான மழை காரணமாக கந்தளாய்க்குளத்தின் நீர்மட்டம் உயர்ந்துள்ளதால் கடந்த திங்கட்கிழமை (04) முதல் அரை அடிக்கு பத்து வான்கதவுகளும் திறந்துவிடப்பட்டுள்ளன.     

இந்த மழை காரணமாக பொதுமக்கள் சிரமத்தை எதிர்நோக்கி வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X