2025 மே 25, ஞாயிற்றுக்கிழமை

’நடைமுறையிலுள்ள யாப்பில் குறைபாடுகள் உள்ளன’

Editorial   / 2017 ஜூலை 08 , பி.ப. 12:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம். ஹனீபா

தற்போது நடைமுறையிலுள்ள யாப்பில் குறைபாடுகள் உள்ளமையினாலேயே மக்கள் புதியதொரு யாப்பைக் கோரி நிற்பதாக, கிழக்கு முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் தெரிவித்தார்.

புதிய அரசியலமைப்பு தொடர்பில் நாட்டில் உருவாகியுள்ள கருத்தாடல் தொடர்பில், நேற்று (07) ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில்,

“யாப்பில் சிறுபான்மையினரின் உரிமைகளுக்கு பாதகமான விடயங்கள் உள்ளமையினாலேயே பல்வேறு பிரச்சினைகள் ஏற்பட்டன என்ற யதார்த்தத்தை நாம் புரிந்த கொள்ள வேண்டும்.

“அதிகாரப் பகிர்வு தொடர்பான தவறான தோற்றப்பாடு நாட்டில் உருவாக்கப்பட்டுள்ளதுடன், அதிகாரம் பகிர்ந்தளிக்கப்படுவதால்  நாட்டின் அனைத்து மக்களும் அதில் நன்மையடைவார்கள்.

“அதிகாரப் பகிர்வின் ஊடாக இந்த நாட்டின் அபிவிருத்தி செயற்பாடுகளை துரிதப்படுத்தவும் நிர்வாகக் கட்டமைப்பை பலப்படுத்தவும் இலகுவாக  அமையும் என்பதை சுட்டிக்காட்ட வேண்டும்.

“இன்று, அதிகாரப் பகிர்வு நடைமுறைப்படுத்தப்படாமையினால், பல மாகாணங்களில் உள்ள வளங்கள் பயன்படுத்தப்படாமலே அழிந்து போகக்கூடிய நிலைமை உள்ளது என்பதுடன், குறித்த பகுதிகளில் உள்ள வளங்கள் தொடர்பில் அந்த மாகாணத்திலுள்ளவர்களுக்கே அதிகம் தெரியும் என்பதால் அவற்றை நிர்வகிக்கும் அதிகாரம் மாகாணங்களுக்கு வழங்கப்படும் பட்சத்தில் அவற்றினூடாக அதிக பலனை இந்த நாட்டு மக்கள் பெற்றுக் கொள்ளக் கூடியதாக இருக்கும்.

“அதிகாரம் பகிரப்படுவது என்பது நாட்டைப் பிரிப்பது என பொருள் கொள்ளலாகாது. அதிகாரப் பகிர்வின் ஊடாக, அனைத்து பகுதிகளிலுமுள்ள மக்களின் அபிலாஷைகளை இலகுவில் நிறைவேற்றிக் கொள்ளக் கூடிய சூழலை நம் நாட்டில் உருவாக்க முடியும்.

“அத்துடன், அதிகாரப் பகிர்வின் ஊடாக நாடு பிளவுபடும் என்ற கருத்து முட்டாள் தனமானது என்பதையும் நாம் குறிப்பிட்டாக வேண்டும்.

“அதிகாரம் வெறுமனே வடக்கு - கிழக்கு மாகாணங்களுக்கு மாத்திரம் வழங்கப்படப் போவதில்லை தெற்கு,மேற்கு மத்திய உள்ளிட்ட அனைத்து மாகாணங்களுக்கும் வழங்கப்படும்” என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X