Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 23, வெள்ளிக்கிழமை
Editorial / 2017 செப்டெம்பர் 02 , பி.ப. 04:14 - 0 - {{hitsCtrl.values.hits}}
பேரின்பராஜா சபேஷ், கே.எல்.ரி.யுதாஜித்
பகிடிவதை மற்றும் ஒழுக்கயீன நடவடிக்கைகளுக்காக கிழக்குப் பல்கலைக்கழகப் பேரவையால் விசாரணை நடத்தப்பட்டு வழங்கப்பட்ட வகுப்புத் தடைகளை நீக்குவதே, மாணவர்களின் பிரதான நோக்கமாகக் காணப்படுகின்றது என்று கிழக்குப் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது.
கிழக்குப் பல்கலைக்கழகத்தின் தற்போதைய சூழ்நிலை தொடர்பாக கிழக்குப் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தால் நேற்று (01) வெளியிடப்பட்ட அறிக்கையிலேயே, இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது,
“கிழக்குப் பல்கலைக்கழகத்தில் ஒரு சிறு பகுதி மாணவர்களால் 08.08.2017 தொடக்கம் கிழக்குப் பல்கலைக்கழக பேரவைக் கட்டடத்தை சட்டவிரோதமாக ஆக்கிரமித்து நிர்வாகச் செயற்பாடுகளையும் கல்வி நடவடிக்கைகளையும் சீர்குலைத்து மேற்கொள்ளப்பட்டுவரும் பிரச்சினையால், பல்கலைக்கழகத்தின் அனைத்து கல்வி நடவடிக்கைகளும் நிறுத்தப்பட்டுள்ளன.
இது தொடர்பாக ஆசிரியர் சங்கம், தங்களது ஆழ்ந்த கவலையை இத்தால் வெளிப்படுத்துகிறது.
இது ஒரு சிறு பகுதி மாணவர்களால் மேற்கொள்ளப்படுகின்ற ஒழுக்கமற்ற நடவடிக்கையாகும். பகிடிவதை மற்றும் ஒழுக்கயீன நடவடிக்கைகளுக்காக கிழக்குப் பல்கலைக்கழக பேரவையால் விசாரணை நடத்தப்பட்டு, வழங்கப்பட்ட வகுப்புத்தடைகளை நீக்குவதே மாணவர்களின் பிரதான நோக்கமாகக் காணப்படுகின்றது.
அத்துடன், இரண்டாம் வருட மாணவர்களுக்கு விடுதி வசதியை பல்கலைக்கழக வளாகத்தினுள்ளே வழங்கக் கோருவது, மாணவர்களின் அடுத்த நோக்கமாக உள்ளது.
பொதுவாக இலங்கையிலுள்ள எந்தவொரு பல்கலைக்கழகங்களிலும் இரண்டாம் வருட மாணவர்களுக்கு விடுதி வசதி வழங்கப்படுவதில்லை. இருப்பினும், சில பல்கலைகழகங்களில் இரண்டாம் வருட மாணவர்களுக்கு விடுதி வசதி வழங்கபடுகிறது. இது மாணவர்களின் அனுமதியின் போது தெரிவிக்கப்பட்டு, பெற்றோர் மற்றும் மாணவர்கள் எழுத்து மூல உடன்படிக்கையில் கைச்சாத்திட்டும் உள்ளனர்.
எனினும், இட நெருக்கடிக்கு மத்தியில் கடந்த காலங்களில் இரண்டாம் வருட மாணவர்களுக்கும் விடுதி வசதிகளை கிழக்குப் பல்கலைக்கழகம் வழங்கியிருந்தது.
அதனால் ஏற்பட்ட சுகாதார, சுற்றாடல் சீர்கேடுகளால் பல்கலைக்கழகம் மூடப்பட்டு, கல்வி நடவடிக்கைகள் சீர்குலைந்திருந்தன.
கிழக்குப் பல்கலைக்கழக வளாகத்தினுள் போதிய விடுதி வசதிகள் இல்லாமையால் தகுந்த வெளியிடங்களில் இரண்டாம் வருட மாணவர்களுக்கு விடுதி வசதிகளை வழங்குவதற்கு ஏற்பாடுகளை கிழக்குப் பல்கலைக்கழகம் செய்துள்ள போதிலும் மாணவர்கள் அதனைப் புறக்கணித்து வருகின்றனர்.
இந்நிலையில், சுமூகமான முறையில் தீர்வுக்கு வருவதற்காகக் கிழக்குப் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கமாகிய நாங்கள், மாணவர்களை பேரவைக் கட்டடத்தை விட்டு வெளியேறுமாறு வேண்டுகோள் விடுத்தும் மாணவர்கள் அதனைச் செவிசாய்க்காமல் உள்ளனர்.
மாணவர்களின் இந்த நடவடிக்கைகளால் அனைத்து ஊழியர்களும் தங்களது கடமைகளை மேற்கொள்ள முடியாமலிருப்பது, ஊழியர்களது அடிப்படை உரிமையை மறுக்கும் செயலாகும்.
அத்துடன், மாணவர்களின் இச்செயற்பாடானது செப்டெம்பர் மாதம் திட்டமிடப்பட்டிருக்கும் கிழக்குப் பல்கலைக்கழகத்தின் பொதுபட்டமளிப்பு விழாவின் ஏற்பாட்டு நடவடிக்கைக்குப் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது மிகவும் வருந்தக் கூடிய செயலாகும்.
மேலும், இவ்வாறான செயற்பாடுகள் குறிப்பாக முதலாம் வருட மாணவர்களை பலாத்காரமாகப் பயன்படுத்தி மேற்கொள்ளப்படும் செயற்பாடானது பகடிவதைக்கு எதிரான சட்டத்தையும் மீறுவதாக அமைகின்றது.
இவ்வாறான சிறுதொகை மாணவர்களால் மேற்கொள்ளப்படும் ஒழுக்கமற்ற நடவடிக்கைகளையும் மாணவர்களின் நியாயமற்ற கோரிக்கைகளையும் கிழக்குப் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கமானது வன்மையாகக் கண்டிப்பதுடன், நிர்வாகக் கட்டடத்தையும் விட்டு உடனடியாக மாணவர்களை வெளியேறுமாறு பணிப்பதோடு, பல்கலைக்கழகத்தின் கல்வி நடவடிக்கைகள் நிறுத்தப்பட்டுள்ளதால் மாணவர்களின் பெற்றோர் தமது பிள்ளைகளை தங்கள் வீட்டுக்கு உடனடியாக அழைத்துச் செல்லுமாறும் கேட்டுக்கொள்கின்றது” என அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
29 minute ago
33 minute ago
9 hours ago