Janu / 2026 ஏப்ரல் 27 , பி.ப. 04:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஹட்டன் – டிக்கோயா நகர சபையில் திங்கட்கிழமை (27) நடைபெற்ற மாதாந்த அமர்வு, கடுமையான பதற்ற நிலையை எட்டியது. கடந்த மாதம் 24ஆம் திகதி நடைபெற்ற கூட்டத்தின் சபை அறிக்கை (Minutes) தொடர்பான சர்ச்சை காரணமாக கூட்டம் ஒத்திவைக்கப்பட்டிருந்த நிலையில், அதன் தொடர்ச்சியான அமர்வே மீண்டும் நடத்தப்பட்டுள்ளது.
கூட்டம் தொடங்கியவுடன், ஆளும்கட்சி உறுப்பினர் வைத்தியர் தர்மபிரிய சபை அறிக்கை குறித்து எந்தக் கருத்தையும் தெரிவிக்காது, சபையின் அனுமதியைபெற்று வெளியேறினார். அதனைத் தொடர்ந்து, முன்னாள் நகர சபைத்தலைவரும் உறுப்பினருமான வைத்தியர் அழகமுத்து நந்தகுமார், சபை அறிக்கைக்குக் கடும் எதிர்ப்புத் தெரிவித்து வெளிநடப்பு செய்தார். அவரைத் தொடர்ந்து, சபை அறிக்கையை அங்கீகரிக்க மறுத்த மேலும் சில உறுப்பினர்களும் சபையிலிருந்து வெளியேறினர்.
இச்சம்பவம் குறித்துக் கருத்துத் தெரிவித்த உப தலைவர் சுரேந்திரன், “கடந்த கூட்டத்தின் அறிக்கையில் பல குறைபாடுகள் இருந்ததால் அதனை நாம் அங்கீகரிக்கவில்லை. வழக்கமாக இவ்வாறான சூழலில், மூன்று நாட்களுக்குள் திருத்தப்பட்ட அறிக்கையை வழங்கி மீண்டும் கூட்டத்திற்கு அழைக்க வேண்டும் என்றாலும், இன்று வரை அதனை திருத்தப்பட்ட அறிக்கை வழங்கப்படவில்லை .இதன் காரணமாகவே அந்த அறிக்கைக்கு ஆதரவு வழங்க முடியாது எனத் தெரிவித்து, நாம் 9 உறுப்பினர்கள் சபையிலிருந்து வெளியேறினோம்.” என்றார்.
இது குறித்து விளக்கமளித்த நகர சபை மேயர் அசோக கருணாரத்ன, “சபை அறிக்கை என்பது நடைபெற்ற விடயங்களின் சுருக்கமே அன்றி, ஒவ்வொரு சொல்லையும் உள்ளடக்கிய ஆவணம் அல்ல. அறிக்கையில் மூன்று விடயங்களை மாத்திரமே திருத்த வேண்டியிருந்தது. உறுப்பினர்கள் இவ்வாறு வெளியேறுவது பிரதேசத்தின் அபிவிருத்தி பணிகளை தாமதப்படுத்தும்,” எனத் தெரிவித்தார்.
எவ்வாறாயினும், 9 உறுப்பினர்கள் வெளியேறிய போதிலும், சபை நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு தேவையான கோரம் (நிறைவெண்) இருந்தமையால், நகர சபை மேயர் உட்பட ஆளும்கட்சியின் 4 உறுப்பினர்களுடன் சபை நடவடிக்கைகள் சட்டப்பூர்வமாக முன்னெடுக்கப்பட்டன.
இந்த இழுபறிக்கு மத்தியில், சுயேச்சைக் குழுவைச் சேர்ந்த நகர சபை உறுப்பினர் கேசவமூர்த்தி, நகர சபை மேயரின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்துத் தனது வாயில் பிளாஸ்டர் ஒட்டி, சபைக்குள் அமைதியான முறையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார். சபையில் தமக்கு கருத்து தெரிவிக்கும் உரிமை மறுக்கப்படுவதை அடையாளப்படுத்தும் விதமாக அவர் இந்த ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்தார்.
கூட்டம் நிறைவடையும் வரை சபையில் பெரும் பதற்றம் நிலவியதுடன், சபை அறிக்கை தொடர்பான சிக்கல் தீர்க்கப்படாமலேயே தொடர்கின்றமை குறிப்பிடத்தக்கது.
எஸ் சதீஸ்

31 minute ago
47 minute ago
59 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
31 minute ago
47 minute ago
59 minute ago