2025 ஜூன் 26, வியாழக்கிழமை

16 ஆசிரியைகள் காரண​மின்றி இடமாற்றம்

ஆ.ரமேஸ்   / 2019 ஓகஸ்ட் 30 , மு.ப. 11:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

கண்டி, கம்பளை கல்வி வலயத்துக்கு உட்பட்ட இரண்டு பாடசாலைகளில், எந்த வித காரணமும் தெரிவிக்காமல், 16 ஆசிரியைகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர் என்று தெரியவருகின்றது.

இச்சம்பவம் தொடர்பாகத் தெரியவருவதாவது, புஸ்ஸலாவையிலுள்ள பிரபல பாடசாலையொன்றின் பெண் அதிபருக்கும் 5ஆம் ஆண்டு மாணவர்களுக்கான ஆசிரியைக்கும் இடையே ஏற்பட்ட கருத்து முரண்பாடு, கைகலப்பாக மாறி, குடுமிப்பிடி சண்டை இடம்பெற்றுள்ளது.

எனினும், இந்தச் சண்டை இடம்பெற்றதையடுத்து, அந்தப் பாடசாலையில் பணியாற்றி வந்த 8 ஆசிரியைகள், அதே கல்வி வலயத்துக்கு உட்பட்ட வேறொரு பாடசாலைக்கும் அந்தப் பாடசாலையிலிருந்து இந்தப் பாடசாலைக்கு 8 ஆசிரியைகள் என, மத்திய மாகாண கல்வித் திணைக்களத்தால், மொத்தம் 16 ஆசிரியைகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

அதாவது, இரண்டு பாடசாலைகளுக்கு இடையிலேயே, இந்த ஆசிரியைகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில், தாங்கள் 16 பேரும் எதற்காக இடமாற்றம் செய்யப்பட்டோம் என்பது பற்றி, இதுவரையில் தெரியவரவில்லை என, ஆசிரியைகள் தெரிவித்துள்ளனர்.

குறித்த ஆசிரியைகளுக்கு வழங்கப்பட்ட இடமாற்றக் கடிதத்தில், அதிபருக்கும் ஆசிரியைக்கும் ஏற்பட்ட சண்டை காரணமாக, முன்னெடுக்கப்பட்டுவரும் விசாரணையாலேயே, இந்த இடமாற்றம் இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகின்றது.

ஆனால், இந்தச் சண்டைக்கும் தங்களுக்கும் எந்தவொரு சம்பந்தமும் இல்லை என்றும் இது மனித உரிமை மீறல் என்றும் கூறி, மனித உரிமை மீறல் ஆணைக்குழுவில், குறித்த ஆசிரியைகள் முறைப்பாடொன்றை மேற்கொள்ளவுள்ளதாகத் தெரியவருகின்றது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .