Gavitha / 2015 ஏப்ரல் 11 , மு.ப. 06:26 - 0 - {{hitsCtrl.values.hits}}

-டி.ஷங்கீதன்
நுவரெலியா வசந்த காலத்தை ஏற்பாடு செய்கின்ற முழு பொறுப்பும் நுவரெலியா மாநகர சபைக்கே உள்ளது. அதைவிடுத்து இங்கு யாரும் அவர்கள் நினைத்த மாதிரி அல்லது தனிப்பட்ட நபர்களின் விருப்பு வெருப்புக்காக வசந்த கால நிகழ்வுகளை மாற்றி அமைக்க முடியாது என நுவரெலியா மாநகரசபை முதல்வர் மஹிந்த தொடம்பே கமகே தெரிவித்துள்ளார்.
நுவரெலியாவில் தற்பொழுது வசந்தகாலம் ஆரம்பமாகி நிகழ்வுகள் இடம்பெற்றுக் கொண்டிருக்கின்ற நிலையில், இது தொடர்பான முக்கிய கலந்துரையால் கூட்டம் வெள்ளிக்கிழமை (10) நுவரெலியா மாநகர சபையில் முதல்வர் மஹிந்த தொடம்பே கமகே தலைமையில் நடைபெற்றது.
இதன்போது வீதி ஒழுங்கு முறை தொடர்பாக விளக்கமளித்த பிரதி பொலிஸ் அதிபர் ஜி.விமலதாச,
வெள்ளிக்கிழமை (10) முதல் நடைமுறைக்கு வரும் வகையில் புதிய போக்குவரத்து விதிமுறைகள் நுவரெலியா நகர மத்தியிலும் நகரை சூழவுள்ள பகுதிகளிலும் நடைமுறைக்கு வருவதாக தெரிவித்தார். எதிர்வரும் நாட்களில் 25,000 வாகனங்கள் நுவரெலியாவுக்கு வரலாம் என தாம் எதிர்பார்ப்பதாகவும் அவற்றுக்கான வாகன தரிப்பிட வசதிகள் யாவும் முறையாக ஏற்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
போக்குவரத்து வசதிகள், சூழல், பாதுகாப்பு, நீர் வழங்கல், உணவு பாதுகாப்பு ஆகியன தொடர்பாக தாம் சம்பந்தப்பட்ட திணைக்களங்களுடன் இணைந்து முறையான திட்டங்களை நடைமுறைபடுத்தியுள்ளதாகவும் குறிப்பாக கிரகரிவாவியில் படகு சவாரிகளில் பயணிக்கும் நன்மை கருதியும் பாதுகாப்பு கருதியும் படகுகளில் பயணிக்கும் அனைவருக்கு பாதுகாப்பு கவசம் அணியப்படவேண்டியது கட்டாயப்படுத்தப்பட்டுள்ளதோடு, திடீர் சம்பவங்கள் நடைபெறும் சந்தர்ப்பங்களில் பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்காக 15 நீச்சல் தெரிந்த பொலிஸ் வீரர்களும் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
இவை தவிர குதிரை சவாரி செய்யும் உல்லாச பிரயாணிகளின் நன்மை கருதி குறித்த தொகைக்கு மேல் அறவிடாத வண்ணம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாகவும் சாதாரண விலைக்கு கிடைக்ககூடிய வகையில் உணவுப்பண்டங்கள் மற்றும் தங்குமிட வசதிகள் தொடர்பாகவும் முறையான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.
சூழல் பாதுகாப்பு தொடர்பாக முக்கிய கவனம் செலுத்தபடவுள்ளதோடு சூழலை மாசுபடுத்தும் யாராக இருந்தாலும் அவர்களுக்கு கடும் நடவடிக்கை எடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் சில வேளைகளில் சட்டத்தை மீறுபவர்களை நீதிமன்றம் கொண்டு செல்லவும் நடவடிக்கை எடுக்கவிருப்பதால் சூழல் பாதுகாப்பு தொடர்பாக உல்லாச பிரயாணிகள் முக்கிய கவனம் செலுத்த வேண்டும் எனவும் அவர் கேட்டுக் கொண்டார்.
அனைவருக்கும் பொருந்தக்கூடிய பொழுது போக்கு இடமாக நுவரெலியா தயார் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்ததோடு பாதுகாப்பு தொடர்பாகவும் 24 மணி நேர பொலிஸ் ரோந்து சேவைகளும் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இங்கு கருத்து தெரிவித்த நுவரெலியா மாநகர சபை முதல்வர் மஹிந்த தொடம்பே கமகே,
நுவரெலியா வசந்த காலத்தை வடிவமைப்பது நடைமுறைப்படுத்துவது நிகழ்ச்சிகளை ஒருங்கமைப்பு செய்வது அனைத்து விடயங்களும் நுவரெலியா மாநகர சபையின் எனது தலைமையிலேயே நடைபெறும். இங்கு தனிப்பட்ட யாருடைய விருப்பு வெறுப்புக்காக நிகழ்ச்சி நிரல்களை மாற்றவோ அல்லது புதிய விடயங்களை புகுத்தவோ அனுமதிக்க முடியாது.
எந்த விடயமாக இருந்தாலும் அது மாநகரசபை மூலமாகவே முன்னெடுக்கப்பட வேண்டும். மேலும் ஒரு சிலர் வசந்த கால நிகழ்வுகளை குழப்பும் முகமாக செயற்படுகின்றார்கள். அதற்கு இடமளிக்க முடியாது. வசந்த கால நிகழ்வு என்பது எனது தனிப்பட்ட விடயம் அல்ல. இது பொதுவான ஒரு செயற்பாடு. இதில் தனிப்பட்டவர்களுக்கு முக்கியத்துவம் அளிக்க முடியாது.
கடந்த பல வருடங்களால வசந்த கால நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த போதிலும் இதற்கென ஒரு முறையான சட்டங்கள் இல்லை. எனவே அடுத்த வருடம் வசந்த கால நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்படும் பொழுது அதற்கென சில வரைமுறைகளையும் சட்ட திட்டங்களையும் மாநகரசபை ஊடாக அறிமுகம் செய்யப்படவுள்ளது எனவும் அவர் அங்கு குறிப்பிட்டார்.

36 minute ago
45 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
36 minute ago
45 minute ago
1 hours ago