2025 ஜூன் 27, வெள்ளிக்கிழமை

மலையக மக்களுக்கு சுத்திகரிக்கப்பட்ட குடிநீரை பெற்றுகொடுக்க நடவடிக்கை

Administrator   / 2015 ஜூலை 01 , மு.ப. 07:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

மலையக மக்களுகு;கு சுத்திகரிக்கப்பட்ட குடிநீரை பெற்றுகொடுப்பதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அமைச்சர் பழனி திகாம்பரத்தின் இணைப்புச் செயலாளரும் தொழிலாளர் தேசிய முன்னணியின் பொதுச் செயலாளர் மயில்வாகனம் திலகராஜ் தெரிவித்தார்.

'மலையகப் பெருந்தோட்ட மக்கள் இதுவரைதானும் தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபையினால் முன்னெடுக்கப்படும் சுத்தகரிக்கப்பட்ட குடிநீரைப் பெற்றுக்கொண்ட வரலாறு இல்லை. பெருந்தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சின் ஏற்பாட்டில் இன்று தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபையின் அதிகாரிகள் அதற்கான திட்டங்களை வகுக்க முன்வந்திருப்பது வரவேற்கப்படக்கூடிய மாற்றமாகும்' என  அவர் மேலும் தெரிவித்தார்.

தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சின் ஏற்பாட்டில் உலக வங்கியின் நிதியீட்டத்துடன் முன்னெடுக்கப்படவிருக்கும் தோட்டப்பகுதி குடிநீர் மற்றும் கழிவறை அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்ட தயாரிப்புக்கான ஆரம்பகட்ட செயலமர்வு நேற்று (30) ஹட்டன், டிக்கோயா தரவளை கிரிக்கெட் கழக மண்டபத்தில் நடைபெற்றது.

இதில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனை தெரிவித்தார். இங்கு தொடர்ந்தும் தெரிவித்த அவர்,

'அமைச்சர் திகாம்பரத்தை போன்றே நானும் தோட்டச் சூழலில் பிறந்து வளர்ந்தவன். தோட்டச்சூழலின் வாழ்க்கை முறையை நாங்கள் அனுபவித்தவர்கள். மலையக தோட்ட மக்களின் வரலாற்றில் இதுவரைதானும் சுத்திகரிக்கப்பட்ட நீர் வழங்கல் முறைமை ஒன்று கிடையாது.
தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச்சபை இப்போதுதான் முதன்முறையாக தோட்டப்பகுதிகள் குறித்து தெரிந்துகொள்ள ஆரம்பித்திருக்கிறது. அதற்கு எமது அமைச்சின் ஊடாக உலக வங்கி நிதியீட்டத்துடன் முன்னெடுக்கப்படவிருக்கும் இந்த நிகழ்ச்சித்திட்டமே சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக்கொடுத்துள்ளது.

நாம் சுத்தமான குடிநீர் பற்றி பேசுகிறோம். தோட்ட மக்கள் தற்போது பெற்றுக்கொள்ளும் குடிநீர் யாரால் சுத்திகரிக்கப்படுகின்றது என்பது யாருக்காவது தெரியுமா?.

எந்த ஒரு விஞ்ஞான முறைமையும் குடிநீர் சுத்திகரிப்பு தொடர்பில் தோட்டப்பகுதிகளுக்கு அறிமுகப்படுத்தப்படாமை வேதனைக்குரியதாகும். இந்த நிகழ்ச்சித் திட்டத்தின் மூலம் தேசிய மட்டத்தில் நகர மற்றும் கிராம மக்கள் அனுபவிக்கும் அடிப்படை உரிமையான சுத்தமான குடிநீர் உரிமையை தோட்ட மக்களுக்கும் பெற்றுக் கொடுக்க பெருந்தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சு வழியேற்படுத்திக் கொடுத்துள்ளது.

சுமார் பத்து வருடங்களுக்கு முன்புவரை தோட்டப்பகுதிக்கு இலங்கை மின்சார சபையின் பணிகளும் கிடைக்கப்பெற்றிருக்கவில்லை. இப்போது 90வீதமான தோட்டப்பகுதிகள் அந்த வாய்ப்பைப் பெற்றுள்ளன. அதுபோல குடிநீர் வழங்கலிலும் மலையகப் பெருந்தோட்டங்கள் நன்மை பெறும் காலம் விரைவில் மலர வேண்டும். அதற்காக அமைச்சு அர்ப்பணிப்புடன் செயற்படும்' எனவும் தெரிவித்தார்.

செயலமர்வில் அமைச்சின் செயலாளர் வி.சிவஞானசோதி, ஆலோசகர் எம்.வாமதேவன் அமைச்சின் உயர் அதிகாரிகள், தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபை திட்டமிடல் பணிப்பாளர்கள், தொழிநுட்ப அதிகாரிகள், பெருந்தோட்ட மனிதவள அபிவிருத்தி நிதிய பிரதிநிதிகள் மற்றும் தோட்ட முகாமையாளர்கள் மற்றும் தோட்ட சேமநல உத்தியோகத்தர்கள் கலந்துகொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .