2025 ஜூன் 23, திங்கட்கிழமை

தேர்தலின் பின்பே சம்பள பேச்சு: ரணில்

Kogilavani   / 2015 ஜூலை 28 , மு.ப. 05:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

-டி.ஷங்கீதன்

'நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலின் பின்பு பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கான  சம்பள பேச்சுவார்த்தையை முன்னெடுக்க எமது அரசாங்கம் தீர்மானித்துள்ளது. அதேநேரம் பெருந்தோட்ட மக்களுக்கான வீடு, காணி பிரச்சனையை நிரந்தரமாக தீர்த்து வைக்கவும் நான் நடவடிக்கை எடுப்பேன்' என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

நுவரெலியாவில் ஞாயிற்றுக்கிழமை (26) நடைபெற்ற ஐக்கிய தேசியக் கட்சியின் தேர்தல் பிரசார கூட்டத்தில் கலந்துக்கொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

'இந்த நாட்டில் சுமுகமான ஒரு தேர்தல் நடைபெறவுள்ளது. தற்போது பட்டாசு சத்தங்கள் மட்டுமே கேட்கின்றன.  இவ்வாறான அமைதியான தேர்தலை சந்திப்போமென்று நாங்கள் நினைக்கவில்லை. தேர்தல்கள் ஆணையாளரின் கட்டளைக்கு ஏற்ப, பொலிஸார் தமது கடமைகளை செய்கின்றனர்.

'நுவரெலியாவின் காலநிலை இங்கிலாந்து காலநிலைக்கு ஒப்பானதாக உள்ளது. அதுமட்டுமல்ல, தேர்தலும் கூட இங்கிலாந்தில் நடைபெறுவது போலுள்ளது. இதனை நாம் நல்லாட்சியினூடாக ஏற்படுத்தினோம். நல்லாட்சியின் முக்கிய குறிக்கோள், முறையான தேர்தலை நடாத்துவதாகும். அது தற்போது நடைபெறுகின்றது.

எனவே, புதிய ஒரு நாட்டை உருவாக்கவும் எதிர்காலத்தை சுபீட்சமடைய செய்யவும் எதிர்வரும் 17ஆம் திகதி ஐக்கிய தேசியக் கட்சிக்கு வாக்களியுங்கள்' என்றார்.

நீண்ட இடைவேளைக்கு பின்பு ஐக்கிய அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையில் இருந்த பிரச்சினை தீர்க்கப்பட்டு, தற்போது இலங்கை தேயிலை ஈரானுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகின்றது.

அதில் சேவையாற்றுகின்ற எமது தொழிலாளர்களுக்கு நல்ல ஊதியம் பெற்றுக்கொடுக்க வேண்டும். பெருந்தோட்டத்துறை தொழிலாளர்களின் சம்பள உயர்வு தொடர்பாக தேர்தலின் பின்பு பேச்சு வார்த்தைகளை ஆரம்பிக்க உள்ளோம்.

இன்று இந்த நாட்டில் அரசாங்க காணிகளில் வசிக்கின்றவர்களுக்கு அவர்களுக்கான உறுதிப்பத்திரம் வழங்கப்படவில்லை. இதனை எமது அரசாங்கத்தின் ஊடாக தீர்த்து வைப்போம். 10 வருடங்களுக்கு மேல் வசிப்பவர்களுக்கு அவர்களது உரிமைகளை பெற்றுக்கொடுக்க முதலாம் வருடத்திலேயே நடவடிக்கை எடுக்கப்படும்' என்றார்.

எமது நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதற்கு வெளிநாட்டு முதலீடுகள் அவசியம். ஸ்திரமான அரசு இருந்தாலே வெளிநாடுகள் உதவிகளை செய்ய முன்வரும்.  சிங்களவர்கள், முஸ்லிம்கள், தமிழர்கள் யாராக இருந்தாலும் அரசாங்கம் முன்னோக்கி செல்ல வேண்டுமானால் அதனை ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கத்தினால் மட்டுமே முன்னெடுக்க முடியும்' என அவர் மேலும் தெரிவித்தார்.

 

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .