2025 ஜூன் 23, திங்கட்கிழமை

15,000 பேரின் தொழில்வாய்ப்பை அழித்துவிட்டனர்: மஹிந்த

Sudharshini   / 2015 ஓகஸ்ட் 01 , பி.ப. 10:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.செல்வராஜா

15,000 பேரின் தொழில் வாய்ப்புக்களை ஐக்கிய தேசியக் கட்சியினர் இல்லாமல் செய்துவிட்டனர் என்று ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் குருநாகல் மாவட்ட வேட்பாளர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.

'பலாத்காரமாக இந்நாட்டை கைப்பற்றிய ஐ.தே.க, குறுகிய காலம் ஆட்சி செய்ததுடன் அவ்வாட்சியில் இந்நாட்டை அழிவுப்பாதைக்குள் இட்டுச்சென்றுள்ளது.  எமது ஆட்சியில் மேற்கொள்ளப்பட்ட அபிவிருத்தி பணிகளையும் இடைநிறுத்தியதால் 15,000 பேரின் வேலை வாய்ப்புகள் இல்லாமல் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

பதுளையில், புதன்கிழமை (29) இடம்பெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர், 'எமது ஆட்சியில், நாட்டில் துரித அபிவிருத்திகள் இடம்பெற்றுக்கொண்டிருந்த போதும், பொருளாதாரத்தில் எவ்வித பின்னடைவும் ஏற்படவில்லை. அன்றைய காலக்கட்டத்தில் பொருளாதாரத்துறை சக்தி மயமானதாவே இருந்தது. அதனாலேயே, சர்வதே நாடுகள் எமது நாட்டுக்கு பெரும் நிதியை கடனாகவும் மானியமாகவும் வழங்கின' என்றார்.

'தற்போதைய  ஆட்சியில் அரச சேவைகள் மிகவும் பின்தங்கியுள்ளன.  அச்சேவைக்குரிய கௌரவம் வழங்கப்படுவதில்லை. நிதி மோசடி என்ற பெயரில் விசாரணைக்கு உட்படுத்தப்படுகிறார். நாம் ஆட்சி அமைத்ததும் அரச சேவையாளர்களை சக்திமயப்படுத்தும் வேலைத்திட்டத்தை முன்னெடுப்போம். அவர்களின் அடிப்படை சம்பளத்தை 25,000 ரூபாய் வரை அதிகரிக்க துரித நடவடிக்கை எடுப்போம்' என்றும் அவர் கூறினார்.

'புதிய அரசின் வேலைத்திட்டத்தில், எமது மக்களையும் எம்மையும் வஞ்சம் தீர்த்தமையை மட்டுமே குறிப்பிட்டு கூற முடியும். நாட்டினதும் மக்களினதும் நன்மைக்காக அவர்கள் எதையும் செய்யவில்லை.

நாட்டின் கல்வித்துறை படும் பாதாளத்தை நோக்கிச் சென்றுக்கொண்டிருக்கின்றது. அதை தடுத்து நிறுத்தி, கல்வித்துறையின் எதிர்க்காலத்தை வளமாக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்வோம்.

மேலும்,  நாட்டு மக்கள் அனைவரினதும் வாழ்விலும் ஒளிமயமானதும் வளமானதுமான எதிர்காலத்தை உருவாக்குவோம். மேலும், பெருந்தோட்ட தொழிலாளர்களின் வாழ்க்கையிலும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு மாற்றத்தை ஏற்படுத்தும்' என்று மஹிந்த ராஜபக்ஷ மேலும் கூறினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .