2026 மே 09, சனிக்கிழமை

அபிவிருத்தியின் அவசியத்தை புதிய அமைச்சர்கள் உணர்த்தியுள்ளனர்

Kogilavani   / 2015 ஓகஸ்ட் 07 , மு.ப. 08:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

'கடந்தகால அமைச்சர்கள் போல் அல்லாது தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சர் பழனி திகாம்பரம் மற்றும் இராஜாங்க கல்வி அமைச்சர் வே.இராதாகிருஷ்ணன் ஆகியோர் அரசியல் உரிமைகளை வென்றெடுப்பதில் மட்டுமல்ல அபிவிருத்தி நடவடிக்கைகளை மலையக மக்கள் வாழும் பிரதேசங்கள் அனைத்திலும் ஏற்படுத்த வேண்டிய தேவையை உணர்த்தியுள்ளனர்' என ஐக்கிய தேசியக் கட்சியின் நுவரெலிய மாவட்ட வேட்பாளர் எம்.திலகராஜ் தெரிவித்தார்.

மஸ்கெலியா, மொக்கா, மோர்னிங்டன், மவுசாகலை, பிரவுன்ஸ்விக், பனியன் ஆகிய தோட்டங்களில் நேற்று புதன்கிழமை இடம்பெற்ற மக்கள் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார்.

'மலையக அரசியல் வரலாற்றில் தமிழ் முற்போக்கு கூட்டணி புதிய அலையை தோற்றுவித்துள்ளது. மக்கள் அணிதிரண்டு எமக்கு ஆதரவு வழங்கி வருகின்றனர்.  இம்மக்களுக்கு காணியுரிமையுடனான தனிவீடு எனும் உரிமை கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்பட்டு அதனை நடைமுறைப்படுத்த ஆரம்பித்தபோது, அரசு அனுமதித்த 300 வீடுகளையும் வாக்கு நோக்கம் கருதி நுவரெலியா மாவட்டத்துக்கு கொண்டு சேர்க்கப்பட்டது. அவ்வாறு நாம் செய்யவில்லை.  

எமது நாட்டில் எந்தெந்த பகுதிகளில் மலையக மக்கள் வாழ்கின்றார்களோ அங்கெல்லாம் இந்த திட்டம் அமுல்படுத்தப்பட வேண்டும் என்ற செய்தியை அரசாங்கத்துக்கு கூறவேண்டும் என்ற காரணத்துக்காக பதுளை (எல்ல, விஹாரகல), கண்டி (சோகம), மாத்தளை (பிட்டகந்த), இரத்தினபுரி (தொலஸ்வல), கேகாலை (அட்டால) மற்றும் நுவரெலியா (மஸ்கெலியா, சாமிமலை, நோர்வூட், கொட்டகலை, ஹொலிரூட், கொங்கோடியா, டயகம, (அக்கரப்பத்தனை) மாவட்டத்துக்கும் 300 வீடுகளை பகிர்ந்தளித்து எமது மக்களுக்கான வீடமைப்பின் அவசியத்தை அமைச்சர் நிரூபித்துள்ளார்.

இதேபோன்று எதிர்வரும் காலத்தில் மொனராகலை, களுத்துறை, காலி, மாத்தறை பிரதேசத்தில் வாழும் எமது மக்களுக்காக வீடமைப்பு திட்டத்தை நடைமுறைப்படுத்தவுள்ளோம்' என்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .