2025 ஜூன் 20, வெள்ளிக்கிழமை

’ஆணைக்குழுவின் அறிவிப்பாலேயே விலகினேன்’

Editorial   / 2018 ஓகஸ்ட் 31 , பி.ப. 01:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.சதீஸ், எஸ்.கணேசன்

ஒரு கட்சியைச் சேர்ந்த உறுப்பினர் ஒருவர், தலைவர், பொதுச் செயலாளர் பதவிகளை வகிக்க முடியாது என்று, தேர்தல் ஆணைக்குழு அறிவித்ததையடுத்தே, கட்சியின் பொதுச் செயலாளர் பதவியை இராஜினாமா செய்ததாக, நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தலைவருமான ஆறுமுகன் தொண்டமான் தெரிவித்தார்.

கொட்டகலையில் நிர்மாணிக்கப்படவுள்ள தேசிய உணவு உற்பத்தி நிலையத்துக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வில் கலந்துகொண்டு கருத்துரைக்கும் போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இ.தொ.காவின் ஸ்தாபகரும் மறைந்த தலைவருமான அமரர் சௌமியமூர்த்தி தொண்டமானின் 105ஆவது ஜனன தினமான நேற்று (30), தான் வகித்த பொதுச் செயலாளர் பதவியை இராஜனாமா செய்ததாகக் குறிப்பிட்ட அவர், கட்சியின் தேசிய சபையை உடனடியாகக் கூட்டி, காங்கிரஸின் பொதுச் செயலாளர் பதவியை, நீண்ட நாள் உறுப்பினரான திருமதி அனுஷியாவுக்கு வழங்கியதாகவும் தெரிவித்தார்.

செயலாளர் பதவிக்கு, திறமைசாலிகள் பலர் உள்ளனர் எனத் தெரிவித்த அவர், அந்தவகையில் இ.தொ.காவில் நீண்டகால அபிமானியும் ஐயாவின் காலத்தில், நிதிக் காரியதரிசியாகச் செயற்பட்டவருமான அனுஷியா சிவராஜாவின் தந்தையைக் கருத்திற்கொண்டு, திருமதி அனுஷியாவுக்கு இந்தப் பதவி வழங்கப்பட்டுள்ளதெனவும் தெரிவித்தார்.

இதேவேளை, பிரதிப் பொது செயலாளர் பதவியை, ஜீவன் தொண்டமானுக்கு வழங்கியதாகக் கூறிய அவர், ஜீவன் தொண்டமானுக்கு இந்தப் பதவி வழங்கியதை, சிலர், "குடும்பத்தாரைக் காங்கிரஸுக்குள் கொண்டு வந்துவிட்டார்" எனக் குற்றஞ்சாட்டுவார்கள் என்றும் தெரிவித்தார். “ஆமாம் பதவியை வழங்கிவிட்டேன். தற்போது என்ன செய்ய முடியும்?" என, அவர் கேள்வி எழுப்பினார்.

காங்கிரஸை வழிநடத்துவதற்கும் அதன் சேவையை முன்னெடுப்பதற்கும் திறமையானவர்கள் முன்வரும் போது, அவர்களுக்குப் பதவி வழங்குவது காங்கிரஸின் கொள்கையாகும் எனத் தெரிவித்த அவர், அந்தவகையில், மஸ்கெலியா பிரதேச சபையின் தவிசாளர், பெண் தொழிலாளியொருவரின் பிள்ளை என்று நினைவூட்டிய அவர், இவர்களுக்குத் திறமை இருப்பதால்தான், காங்கிரஸின் ஊடாக இப்பதவி வழங்கப்பட்டதெனவும் தெரிவித்தார்.

மக்களுக்கு யார் சிறந்த சேவையை வழங்குகின்றார்களோ, அவர்களுக்கே, இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் முன்னுரிமை வழங்கும் என்று தெரிவித்த அவர், இதனடிப்படையிலேயே, இ.தொ.காவின் பொதுச் செயலாளர் பதவி, அனுஷியா சிவாராஜாவுக்கு வழங்கப்பட்டுள்ளதெனவும் தெரிவித்தார்.

"இ.தெ.காவையும் அதன் தலைவராகிய என்னையும், பலவாறு விமர்சித்து, இன்று பலர் உயர்வடையலாம். எனினும் அந்த உயர்வு, தற்காலிகமானதே" என்றும் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .