2025 ஜூன் 26, வியாழக்கிழமை

இரவுநேரத்தில் இறப்பர் தோட்டத்தில் அநாதரவான சடலம்

Editorial   / 2019 ஓகஸ்ட் 30 , மு.ப. 11:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

அஜித்லால் சாந்தஉதய

புற்றுநோயால் உயிரிழந்த 3 பிள்ளைகளின் தந்தையான தோட்டத் தொழிலாளி ஒருவரின் சடலத்தை  பொதுமக்களின் அஞ்சலிக்காக, அவருடைய வீட்டில் கூட வைப்பதற்கு, ​​குறித்த தோட்டத்தின் உரிமையாளர் இடம் வழங்க மறுத்தச் சம்பவமொன்று, இரத்தினபுரி- லெல்லோபிட்டிய தோட்டத்தில் இடம்பெற்றுள்ளது.

இதனால், குறித்த சடலம் இரவு முழுவதும், இறப்பர் தோட்டமொன்றில் மெழுகுவர்த்தி வெளிச்சத்தில் வைக்கப்பட்டிருந்ததாகத் தெரியவருகின்றது.

இது தொடர்பாகக் கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய, சம்பவ இடத்துக்கு, இரத்தினபுரி பொலிஸ் நிலையப் பொலிஸார், நேற்று முன்தினம் (28) இரவு சென்றுள்ளனர். எனினும், குறித்த தோட்டம் தனியார் ஒருவருக்குச்​ சொந்தமானது என்பதால், இந்த விடயத்தில், தலையிட முடியாது என்று, பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பாகத் தெரியவருவதாவது, 40 வயதுடைய சின்ன மாரியப்பன் என்பவர், லெல்லோபிட்டிய-ஹிரிலியத்த  பிரதேசத்திலுள்ள தனியார் தேயிலைத் தோட்டத்திலுள்ள வீடொன்றில் தங்கியிருந்து, 6 வருடங்களாகப் பணியாற்றி வந்துள்ளார்.

3 மாதங்களாகப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த அவர், கடந்த 26ஆம் திகதி, பதுளை பொது வைத்தியசாலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். அவருடைய சடலத்தை, அவர் தங்கியிருந்த வீட்டுக்குக் கொண்டு வரவேண்டாம் என்று தெரிவித்து, சடலத்தைத் தோட்டத்துக்குள் கொண்டு வருவதற்கு, தோட்ட உரிமையாளர்கள் கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர்.

இந்த நிலையில், இரவில் சடலம் வைக்கப்பட்டிருந்த இறப்பர் தோட்டத்திலேயே இறுதிக்கிரியைகள் செய்யப்பட்டு, மயானமொன்றில் சடலம் நேற்று (29) புதைக்கப்பட்டுள்ளது.

இவ்வாறானதொரு சம்பவமொன்று, மத்துகம பிரதேசத்தில் உள்ள தனியார் தோட்டமொன்றில் அண்மையில் இடம்பெற்றிருந்ததுடன், அதன்போது, பிரதியமைச்சர் பாலித தெவரப்பெருமவின் தலையீட்டில் அந்தத் தொழிலாளியின் சடலம், அதேதோட்டத்தில் புதைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .