2025 ஜூன் 25, புதன்கிழமை

சோற்றுப்பானைக்குள் குண்டு தேடியமை மனிதாபிமானமற்ற செயலாகும்: திகாம்பரம்

Sudharshini   / 2015 செப்டெம்பர் 13 , பி.ப. 04:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

பா. திருஞானம்

குண்டு இருப்பதாகக் கூறி பொலிஸ் அதிரடி படையால் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கை சட்ட ரீதியானதாக இருந்தாலும், நள்ளிரவு 12 மணியளவில் வீடுகளில் சோதனை மேற்கொண்டதுடன் சோற்றுப்பானைக்குள் குண்டு தேடியமையானது மனிதாபிமானமற்ற செயலாகும் என, மலையக புதிய கிராம, உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் சமூக அபிவிருத்தி அமைச்சர் பழனி திகாம்பரம் தெரிவித்தார்.

கலஹா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புப்புரஸ்ஸ லெவலன் தோட்டம் மணிக்கட்டி பிரிவில் கடந்த 09ஆம் திகதி பொலிஸாரினால் தோட்டக் குடியிருப்புக்களில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கை தொடர்பில்; சனிக்கிழமை (12) அப்பகுதிக்குச் சென்று பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி மற்றும் மக்களுடன் அமைச்சர் கலந்துரையாடினார். இதன்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்து மக்களிடம் கருத்து தெரிவித்த அவர்,

'இச்செயற்பாடு மனிதாபிமானம் அற்ற செயலாகும். பொலிஸார் தேடுதலின் போது, குண்டை எடுக்கவும் இல்லை, யாரையும் கைது செய்யவும் இல்லை. இது மக்களை அச்சத்துக்குள்ளாக்கும் ஒரு செயலாகும்.

இப்பிரச்சினைக்கு, தோட்ட உதவி முகாமையாளரே முக்கிய காரணம் என மக்கள் தெரிவிக்கின்றனர். தோட்ட மக்களை நசுக்கும் வேலைத்திட்டங்களிலும் அவர் ஈடுபட்டுள்ளதாக அறிகின்றேன். இவரை உடனடியாக மாற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.

இந்தப் பிரச்சினைக்கு முழுக்காரணம் தோட்டத்தில் வேலை செய்யாதோரின் பிள்ளைகளுக்கென, பாலர் பாடசாலை ஆரம்பிக்கப்பட்டமையாகும். ஆரம்பப் பாடசாலையை ஆரம்பித்தவர்கள் குறித்து பொலிஸாருக்கு தவறான தகவல் வழங்கப்பட்டுள்ளது.

இந்த பாலர் பாடசாலை தான்  பிரச்சினைக்குக் காரணமாக இருக்கின்றது.  அதனால், ஒரு புதிய பாலர் பாடசாலை கட்டடத்தை அமைத்துக் கொடுக்கும் வரை, தோட்ட மக்கள் ஆரம்பித்த ஆரம்பப் பாடசாலையை நடத்துவதற்கு யாரும் தடையாக இருந்தால் அது குறித்து பொலிஸில் முறையிடவும், சட்டத்தின் பிரகாரம் நடவடிக்கை எடுக்கப்படும்'; என்று  குறிப்பிட்டார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .