2025 டிசெம்பர் 29, திங்கட்கிழமை

சடலங்களை அடையாளமிட்டு புதைக்கவும்: உத்தரவு

Editorial   / 2023 ஓகஸ்ட் 09 , மு.ப. 10:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஆ.ரமேஸ்

நுவரெலியாவில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் உயிரிழந்த கணவன் மனைவியின் உடலங்கள் பாதுகாப்பான இடத்தில் அடையாளமிட்டு புதைக்கப்பட வேண்டும் என விசேட உத்தரவு பிறப்பித்த நுவரெலியா மாவட்ட நீதவான் நாலக்க சஞ்சீவ வீரசிங்க  சடலங்கள் புதைக்கப்படும் இடத்திற்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என பொலிஸாருக்கு உத்தரவு பிறப்பித்தார்.

அத்துடன் இந்த துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் பிரேத பரிசோதணை சட்ட வைத்தியர் ஒருவரின் ஊடாக மேற்கொண்ட பின் சடலங்கள் உறவினர்களிடம் கையளிக்க வேண்டும் எனவும் தெரிவித்த நீதவான் இச் சம்பவம் தொடர்பான அறிக்கை மற்றும் சட்டவைத்தியரின் அறிக்கையை சம்பவம் தொடர்பான வழக்கில் நுவரெலியா மாவட்ட நீதவான் நீதிமன்றில் பொலிஸார் சமர்பிக்க வேண்டும் எனவும் சம்பவ இடத்திற்கு வருகை தந்து மரண விசாரணை நடத்திய நீதவான்  உத்தரவிட்டுள்ளார்.

நுவரெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட  நுவரெலியா  நுழைவாயில் பகுதியான டொப்பாஸ் கிராமத்தில் உள்ளூர் தயாரிப்பான "கல்கட்டஸ்"துப்பாக்கி வெடித்து கணவன் மற்றும் மனைவி ஒரே வீட்டில் உயிரிழந்த சம்பவம் (07) இரவு 10.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

இச் சம்பவத்தில்  நுவரெலியா டொப்பாஸ் கிராமத்தில் இலக்கம் (05) வீட்டில் வசித்து வந்த எண்டன் தாஸ் (வயது 31) மற்றும் நாதன் ரீட்டா (வயது 31) ஆகிய கணவன் மனைவி  உயிரிழந்துள்ளவர்கள் என  அடையாளம் காணப்பட்டுள்ளது.

மேலும் சம்பவம் தொடர்பான விசாரணையை நுவரெலியா குற்றத்தடுப்பு பொலிஸார் மேற் கொண்டு வருகின்றனர்.

இந்த நிலையில் இச் சம்பவம் இடம்பெற்ற வேளையில் வீட்டில் இருந்த (சம்பவத்தி்ல் உயிரிழந்த)

எண்டன் தாஸ் என்பவரின் தாய் (வயது 54) இவரிடம் விசாரணை செய்த பொலிஸார் அவரின் வாக்கு மூலத்தை பதிவு செய்தனர்.

இதில் சம்பவம் இடம்பெற்ற வீட்டில் எனது மகனும் மருமகளும் வசித்து வந்தனர். எனது மகன் தாஸ் தின கூலிக்கு மரக்கறி தோட்டத்தில் வேளை செய்கிறார். எனது மருமகள் ரீட்டா வீட்டு மனைவியாக இருந்து வருகிறார். நான் கொழும்பில் வீடொன்றில் பணியாளராக

தொழில் செய்து வருகிறேன்.என தெரிவித்த அவர் மகனின் வீட்டுக்கு வருகை (05.08.2023) அன்று கொழும்பில் இருந்து வருகை தந்தேன் எனவும் தெரிவித்தார்.

 அதேநேரம் சம்பவ தினமான (07.08.2023) இரவு நான் வீட்டில் தனியறையில் டிவியில் படம் பார்த்துகொண்டிருந்தேன்.மகனும் மருமளும் வீட்டு முன் அறையில் இருந்தார்கள்.இவர்கள் ஏதோ கதைத்து கொண்டு சந்தோஷமாக இருந்தார்கள் நேரம் செல்ல இவர்களிடத்தில் சத்தம் அதிகமானது அதை இவர்கள் சண்டையிடுகின்றார்களோ என உணர்ந்தேன்.

இரவு 10.30 மணியலவில் வெடி சத்தம் கேட்டது ஒடிபோய் பார்த்தேன் எனது மருமகள் தரையில் தலை தொடங்கிய நிலையில் கிடந்தாள் அவரின் வயிற்று பகுதியிலிருந்து அதிகமாக இரத்தம் வெளியாகியிருந்தது.

அப்போது மகன் சாரத்தை மடித்து கட்டிக் கொண்டு அதிர்ச்சிகரமான நிலையில் தரையில் அமர்ந்திருந்தார்.என்ன வெடித்தது என்ன நடந்தது என கேட்டேன் இல்லை இவளை மின்சாரம் தாக்கிவிட்டது யாரையாவது கூப்பிடு ஆஸ்பத்திரிக்கு போகனும் என்றார்.

உடனே நான் வேளியில் வந்து அயலவர்களை அழைத்தேன் மீண்டும் வெடி சத்தம் கேட்டது ஒடி பார்த்தேன் மகன் தலையில் இருந்து அதிக இரத்தம் வந்த நிலையில் தரையில் கிடந்தான்.

அருகில் துவக்கும் ரத்தத்தில் கிடந்தது பின் பதற்றமான நான் இந்த சம்பவம் தொடர்பில் அயலவர்கள் உதவியுடன் 119க்கு அழைத்து சொல்ல நுவரெலியா பொலிஸார் சம்பவ இடத்திற்கு வந்தனர் என வாக்குமூலத்தில் தெரிவித்தார்.

அதேநேரம் தாயின் வாக்குமூலத்தை அடிப்படையாக கொண்டு எண்டன் தாஸ்க்கு உள்ளூர் துப்பாக்கி எவ்வாறு கிடைத்தது? ,மகனுக்கும் மருமகளுக்கும் வாய்தர்க்கம் ஏன் ஏற்பட்டது?  துப்பாக்கி எவ்வாறு வெடித்தது? என்ற மூன்று கேள்விக்கு விடை காணும் வகையில் நுவரெலியா குற்றத்தடுப்பு பொலிஸார் மேலதிக விசாரணைகளை செய்து வருகின்றனர்.

இந்த நிலையில்  இந்த உயிரிழப்பு சம்பவம் நுவரெலியாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதுடன் பல்வேறு சந்தேகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. 

மேலும் இந்த சம்பவம் தொடர்பாக பொலிஸார் நுவரெலியா மாவட்ட நீதிமன்றத்தின் கவனத்திற்கு கொண்டு வந்ததையடுத்து சம்பவ இடத்திற்கு வருகை தந்த  நீதவான் நாலக்க சஞ்சீவ வீரசிங்க மற்றும் சட்ட வைத்தியர் எம்.எம்.குணத்திலக்க ஆகியோர் விசாரணைகளை செய்த பின் நீதிபதி பிறப்பிக்கப்பட்ட உத்தரவுக்கு அமைய சடலங்கள் மீட்கப்பட்டு மாவட்ட வைத்தியசாலைக்கு பிரேத பரிசோதணைக்காக கொண்டு செல்லப்பட்டது.

அத்துடன் சடலங்கள் தொடர்பான பிரேத பரிசோதணை சட்ட வைத்தியர் எம்.எம்.குணத்திலக்க முன்னிலையில் (09.08.2023) காலை 9.30 மணிக்கு நுவரெலியா மாவட்ட வைத்தியசாலை பிரேத அறையில் ஆரம்பிக்கப்பவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X