2025 மே 03, சனிக்கிழமை

‘சமூகத்தை அடகு வைக்கும் தலைமைகள்’

Gavitha   / 2020 டிசெம்பர் 20 , பி.ப. 03:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.கணேசன்

குறுகிய அரசியல் நோக்கங்களுக்காக, சமூகத்தை அடகு வைக்கும் அரசியல் தலைமைகளை, மலையக மக்கள் புறக்கணிக்கவேண்டும் என, தோட்ட தொழிலாளர்கள் மத்திய நிலையத்தின் இணை அமைப்பாளர் மாஸ்க் பிரபாகர் தெரிவித்தார்.

அத்துடன், எதிர்வரும் ஜனவரியில், தோட்டத் தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபாய் வழங்கப்படாவிட்டால், பாரிய போராட்டம் முன்னெடுக்கப்படும் என்றும் அவர் எச்சரிக்கை விடுத்தார்.

சமூக நீதிக்கான மலையக வெகுஜன அமைப்பு, தோட்ட தொழிலாளர்கள் மத்திய நிலையம் ஆகியன இணைந்து நுவரெலியாவில் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும் போ, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு 1,000 ரூபாய் வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை, 2014ஆம் ஆண்டு முன்வைக்கப்பட்டது என்றும் அன்று தொடக்கம் இன்று வரை, பல தேர்தல்கள் நடந்து முடிந்தும் தேர்தல் காலங்களில் திட்டமிட்ட அடிப்படையில் தோட்டத் தொழிலாளர்கள் ஏமாற்றப்பட்டனர் என்றும் அவர் கூறினார்.

ஆயிரம் ரூபாய் தொடர்பில் அரசாங்கம் அறிவிப்புகளை மட்டும் விடுத்து பயன் இல்லை என்று தெரிவித்த அவர், தோட்டத் தொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச வேதனைமாக, தொகையொன்றை நிர்ணயிக்கும் சட்டம் நாடாளுமன்றத்தில் இயற்றப்படவேண்டும் என்றும் தெரிவித்தார்.

அப்போதுதான் உரிய நடவடிக்கைகளை முன்னெடுக்கலாம் என்றும் அதைவிடுத்து ஊடக அறிவிப்புகளை விடுப்பதில் எவ்வித பலனும் இல்லை என்றும் அவர் கூறினார்.

அதேபோல் குறுகிய அரசியல் தேவைகளுக்காக, தோட்டத் தொழிலாளர்களை அடகுவைக்கும்,  காட்டுக்கொடுக்கும் தலைமைகளை மக்கள் புறக்கணிக்கவேண்டும் என்றும் கட்சி, தொழிற்சங்க பேதமின்றி சமூக நீதிக்காகவும், மக்களுக்காகவும் குரல் கொடுக்கும் எங்களுடன் இணையவேண்டும் என்றும் கூறிய அவர், அப்போதுதான் மாற்றத்தை நோக்கி பயணிக்கலாம் என்றும் தெரிவித்தார்.

கூட்டு ஒப்பந்தம் ஜனவரியில் கைச்சாத்திடப்படுமானால், அதற்கான பேச்சுவார்த்தை முன்கூட்டியே ஆரம்பித்திருக்கவேண்டும் என்றும் அவ்வாறு இன்னும் நடைபெறவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.

எது எப்படியிருந்தாலும் ஜனவரியில் 1,000 ரூபாய் வழங்கப்படாவிட்டால், இம்முறை பாரிய போராட்டங்கள் வெடிக்கும் என்றும் அதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாகவும் அவர் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X