2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

சொக்கலேட் கொடுத்து மாணவியை கடத்த முயற்சி

Editorial   / 2023 மே 21 , பி.ப. 02:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

பிரசித்திபெற்ற பாடசாலையில் தரம் 6இல் கல்விப்பயிலும் 10 வயது சிறுமியான மாணவியை, வானொன்றில் பலவந்தமாக ஏற்றி, கடத்திச்செல்வதற்கு முயன்ற சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபரை கைது செய்வதற்கான விசேட விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பண்டாவளை பொலிஸார் ஞாயிற்றுக்கிழமை (21) தெரிவித்தனர்.

பண்டாரவளை, துஹூல்கொல்ல பிரதேசத்தை வசிப்பிடமாகக் கொண்ட, பண்டாரவளை நகரில் பிரசித்தி பெற்ற பாடசாலையில் கல்விப்பயிலும் சிறுமியான மாணவியையே இவ்வாறு கடத்திச் செல்வதற்கு முயன்றுள்ளார்.

கடந்த வௌ்ளிக்கிழமை (19) பாடசாலை நிறைவடைந்ததும், பஸ்ஸூக்கு செல்வதற்காக தனியாக நடந்து சென்றுக்கொண்டிருந்த போதே, பாடசாலையில் இருந்து சுமார் 500 மீற்றர் தூரத்தில், வௌ்ளை வானொன்று வீதியோரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்துள்ளது.

முகத்துக்கு கறுப்புத் துணியை கண்டியிருந்த இளைஞன் ஒருவர், அந்த வானில் இருந்து இறங்கி, சிறுமியின் அருகில் வந்து, தாய்க்கு சுகமில்லை. அ​வரை வைத்தியசாலையில் அனுமதித்துள்ளோம். உன்னிடம் இந்த சொக்கலேட்டை கொடுத்து, வானில் ஏற்றிக்கொண்டு வரச்சொன்னார் என்று மாணவியிடம் அந்த நபர் தெரிவித்துள்ளார் என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளார்.

எனினும், தன்னுடைய அம்மா, தனது தம்பி கல்விப்பயிலும் பாடசாலைக்குச் செல்வதாக, வியாழக்கிழமை தன்னிடம்  தெரிவித்திருந்தமை மாணவிக்கு ஞாபகத்துக்கு வந்துள்ளது.

அதனையடுத்து அருகிலிருந்த படிக்கட்டுகளின் ஊடாக ஓடிச்சென்ற அந்த மாணவி, தனக்குத் தெரிந்த தங்க ஆபரண கடைக்குள் நுழைந்து தப்பித்துக்கொண்டார்.

அதன்பின்னர், தன்னுடைய தாயுடன் வந்தே மாணவி மேற்கண்டவாறு முறைப்பாடு செய்துள்ளார்.

அந்த சந்தேகநபரை கைது செய்வதற்கான விசேட நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

விசேடமாக பாடசாலைகளுக்கு அருகில், நகரில், வீதிகளில் வந்துகொண்டிருக்கும் போது பல்வேறான கதைகளை கூறும், இனந்தெரியாத நபர்களுடன் கதைக்க வேண்டாம் என்றும் அவ்வாறானவர்களால் வழங்கப்படும் சொக்கலேட், டொபி, பிஸ்கட் உள்ளிட்ட உணவுப்பொருட்களை சாப்பாட்டுக்கு எடுத்துக்கொள்ள வேண்டாம். அத்துடன், அவ்வாறானவர்களால் கொடுக்கப்படும் பானங்களை அருந்தவும் வேண்டாம் என்று பாடசாலை, மாணவிகள் மற்றும் மாணவர்களிடம் பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .