Kogilavani / 2021 பெப்ரவரி 01 , பி.ப. 03:29 - 0 - {{hitsCtrl.values.hits}}
டி.ஷங்கீதன்
'இந்திய அரசாங்கம் இலவசமாக வழங்குகின்ற தடுப்பூசியை எந்த எதிர்ப்பும் இல்லாமல் பெற்றுக்கொள்ள முடியும். ஆனால், அங்கிருந்து வருகின்ற முதலீட்டாளர்களை அனுமதிக்கக் கூடாது என எதிர்ப்பு தெரிவிப்பது எந்தவிதத்தில் நியாயமானது' என்று, நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் தமிழ் முற்போக்குக் கூட்டணியின் பிரதித்தலைவருமான வேலுசாமி இராதாகிருஷ்ணன் கேள்வி எழுப்பியுள்ளார்.
கொழும்பு துறைமுகத்தின் ஒரு பகுதியை இந்தியாவுக்கு வழங்குவதுத் தொடர்பில் முரண்பாடுகள் எழுந்துள்ள நிலையில், இது தொடர்பில் மேலும் கருத்துரைத்துள்ள இராதாகிருஷ்ணன் எம்.பி, இந்திய முதலீட்டாளர்களை இலங்கையில் அனுமதிக்கக்கூடாது என எதிர்ப்பு தெரிவித்து வருகின்றவர்கள் ஏன் அங்கிருந்து வந்த கொரோனா தடுப்பூசியை திருப்பி அனுப்பவில்லை என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.
இந்தியாவின் முதலீட்டாளர்களுக்கு துறைமுகத்தின் ஒரு பகுதியை நிர்வகிப்பதற்கு எதிராக கோஷமிடுவது எமது பொருளாதாரத்துக்கு அடிக்கப்படும் சாவுமணியாகும் என்று தெரிவித்துள்ள அவர், ஏனெனில் எதிர்காலத்தில் இன்னும் பல இந்திய முதலீட்டாளர்கள், இலங்கையில் தங்களுடைய முதலீடுகளை செய்வதற்குத் தயாராக உள்ளனர் என்றும் இந்நிலையில் அவர்களுக்குப் பாதுகாப்பற்ற ஒரு நிலைமை ஏற்படுமாக இருந்தால் அவர்கள் எவ்வாறு முதலீடுகளை இலங்கையில் செய்வார்கள் என்றும் கேள்வி எழுப்பினார்.
'நாட்டின் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்ப வேண்டுமாக இருந்தால், நிச்சயமாக ஏனைய நாடுகளுடன் இணைந்து செயற்பட வேண்டும். தனியே நாங்கள் மாத்திரம் இந்தப் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்ப முடியாது. மேலும் இந்தியா என்பது எங்களுடைய அயல்நாடு. அவர்களுடன் எங்களுக்குக் கடந்த பல தசாப்தங்களாக நெருங்கிய உறவு அனைத்து வழிகளிலும் உள்ளது' என்றார்.
'நாங்கள் எல்லாவற்றையும் சீனாவுக்கு மாத்திரம் வழங்குவதால் மாத்திரம் இந்த நாட்டைக் கட்டியெழுப்ப முடியாது. இந்தியா - சீனா உட்பட ஏனைய நாடுகளுடனும் இணைந்து செயற்படுவதற்கு நாம் தயாராக வேண்டும். இன்று தேசப்பற்றாளர்கள் என கூறிக் கொள்கின்றவர்கள், எந்தவிதமான கொள்கையும் இல்லாதவர்கள் என்பதை நாங்கள் கடந்த கால அனுபவத்தின் மூலம் அறிந்துகொள்ள முடியும்.
'இன்று இந்த எதிர்ப்பு காரணமாக எங்களுடைய பொருளாதாரம் இன்னும் பின்னடைவை சந்திக்குமே தவிர் முன்னேற்றம் ஏற்படாது. அதனை அரசாங்கமும் தற்பொழுது நன்கு உணர்ந்துள்ளது. எனவே, வீனாக எதிர்ப்பை காட்டுவதை விட்டுவிட்டு வருகின்ற முதலீட்டாளர்களுக்குத் தேவையான வசதிகளை பெற்றுக்கொடுத்து எங்களுடைய நாட்டின் தனித்தன்மையை விட்டுக்கொடுக்காமல் செயற்படுவதற்கு அனைவரும் முயற்சிசெய்ய வேண்டும்.
'இன்று எதிர்ப்பு கோசம் எழுப்புகின்ற பலரும் பொருளாதார பின்னடைவு ஏற்பட்டால் பாதிக்கப்படுகின்றவர்கள் அல்ல. அந்தப் பாதிப்புக்கு உள்ளாகின்றவர்கள் பொதுமக்களே. எனவே, நாட்டு மக்களின் நன்மை கருதியே நாங்கள் செயற்பட வேண்டுமே தவிர. வெறுமனே எதிர்ப்பு கோஷமிடுவதால் எதனையும் சாதிக்க முடியாது' என்றார்.
24 minute ago
32 minute ago
53 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
24 minute ago
32 minute ago
53 minute ago