2025 ஜூலை 16, புதன்கிழமை

தாய்க்கு சமமான அன்பை கொடுக்கும் அடுத்த உறவு முன்பள்ளி ஆசிரியை

Janu   / 2023 ஜூலை 19 , பி.ப. 02:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

அன்னையின் அரவணைப்பில் வளரும் ஒரு பிள்ளை, தனது கல்விப் பயணத்தில் காலடி எடுத்து வைக்கும் போது தாய்க்கு சமமான அன்பை பெறும் அடுத்த உறவாக முன்பள்ளி ஆசிரியையே காணப்படுகின்றார் என பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் கல்வி இராஜாங்க அமைச்சருமான அ.அரவிந்குமார் தெரிவித்தார். 

பிள்ளையின் வளர்ச்சியில் தாய்க்கு நிகரான சுமையை முன்பள்ளி ஆசிரியர் சுமக்கின்றார் என்றும் அவர் தெரிவித்தார்.

பதுளை மாவட்டத்தில் உள்ள  முன்பள்ளி ஆசிரியர்களுக்கு மாதாந்த ஊக்குவிப்பு கொடுப்பனவு வழங்கும் ஆரம்ப நிகழ்வு ஊவா மாகாண சபை கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற வேளையில்  பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு மேலும் கருத்து தெரிவித்த அவர்;

பாடசாலை கல்வியை ஆரம்பிக்கயிருக்கும்  பிள்ளைகளுக்கு தேவையான முன் அனுபவத்தை பெற்றுத் தரும்  நிலையங்களாக முன்பள்ளிகள் இருந்து வருகின்றன. இங்கு கடமையாற்றும் ஆசிரியர்கள் ஆற்றும் சேவைக்குரிய நிரந்தர சம்பளம் கிடைப்பதில்லை. அதிகமான முன்பள்ளி ஆசிரயர்கள் சிறந்த கல்வித் தகைமைகளை கொண்டிருந்தாலும் குடும்ப சூழ்நிலை, வாழ்வாதாரம் என்பவற்றை கருத்திற் கொண்டு இத்தொழில் ஈடுபட்டு வருகின்றனர். 

சமூகத்தில் ஒரு ஆசிரியருக்குரிய அங்கிகாரம் இவர்களுக்கு கிடைக்கின்றது. எனினும் இவர்களுடைய பொருளாதாரம் ஆரோக்கியமானதாக இல்லை என்றார்.

மலையகத்தில் உள்ள அதிகமான பெற்றோர் தொழிலாளர்களாக உள்ளனர். இவர்களின் வேலை நேரம் எட்டு மணித்தியாலங்களாக உள்ளது. இவ்வாறான சூழ்நிலையில் அவர்களின் பிள்ளைகளை பாதுகாப்பாகபராமரித்து, எதிர்காலத்திற்கு வழிகாட்டும் பொறுப்பை முன்பள்ளி ஆசிரியர்கள் செய்து வருகின்றனர் என்றார்.. 

அவர்களின் பணிக்கு ஊக்கமளிக்கும் வகையில் 116 முன்பள்ளி ஆசிரியர்களுக்கு மாதாந்தம் 2ஆயிரம் ரூபாய் அவர்களது வங்கி கணக்கில் வைப்பில்   இடப்படவுள்ளது. இன்றைய நிலைமையில் இது அவர்களது பொருளாதாரத்திற்கு எவ்வாறு வலு சேர்க்கும் என்பது கேள்விக் குறியே, எனினும் அவர்களின் பணியை தொடர்ந்து சிறப்பாக முன்னெடுக்க ஒரு உந்து சக்தியாக இது அமையும் என நம்புகிறேன் என்றார்.

அவுஸ்திரேலியாவில் இருக்கும் எனது புதல்வன் பிரவின், சுவிஸ் நாட்டில் இயங்கும் தியாகி அறக்கொடை நிறுவனத்துடன் தொடர்பு கொண்டு மாதாந்தம் இந்நிதி உதவியை வழங்கும் முயற்சிக்கு எனக்கு ஒத்துழைப்பு வழங்கியுள்ளார் என்றார். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .