Kogilavani / 2017 ஜூன் 20 , மு.ப. 11:45 - 0 - {{hitsCtrl.values.hits}}

டி.மோகன்
“நுவரெலியா தபால் நிலையத்தை உடைப்பதற்கு, நாம் ஒருபோதும் அனுமதிக்கபோவதில்லை. நுவரெலியாவின் அபிவிருத்தியின் நிமித்தமே, இக்கட்டடத்தை வழங்கவுள்ளோம். தபால் நிலையத்துக்கென, புதிதாக ஒரு கட்டடம் அமைக்கப்படும்” என்று, பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சர் நவீன் திசாநாயக்க தெரிவித்தார்.
“நுவரெலியா நகரத்தில் என்ன செய்யவேண்டும் என்பது எங்களுக்குத் தெரியும். மற்றவர்கள் கூறி நாங்கள் செயற்படுவதற்கு, நுவரெலியா வாழும் மக்கள் முட்டாள்கள் அல்லர். எனவே, இத்தபால் நிலையக் கட்டடத்தை உடைப்பதற்கு அனுமதிக்காமல், நுவரெலியா நகரை அபிவிருத்திச் செய்வதற்காகவே வழங்கவுள்ளோம்” என்றும் அவர் கூறினார்.
இதனைக் கேள்வியுற்ற அமைச்சர் நவீன் திசாநாயக்க, நுவரெலியா தபால் நிலையக் கட்டடத்தை விற்பனை செய்வதற்கு ஆதரவுத் தெரிவித்து, ஆர்ப்பாட்டப் பேரிணியொன்றை, நுவரெலியா தபால் நிலையத்துக்கு முன்பாக, திங்கட்கிழமை மாலை முன்னெடுத்தார். இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே, அவர் இவ்வாறு கூறினார்.
நுவரெலியா தபால் நிலையக் கட்டடத்தை, வெளிநாட்டவருக்கு விற்பனை செய்வதற்கு எதிராக, பல மட்டங்களிலும் எதிர்ப்புகள் தெரிவிக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், நுவரெலியா மாவட்ட அபிவிருத்திக் குழுவின் கூட்டத்தின்போதும், எதிர்ப்புகள் தெரிவிக்கப்பட்டன.
நுவரெலியா மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் கலந்துகொண்ட மத்திய மாகாண சபை உறுப்பினர் ஆர்.ராஜாராம், நுவரெலியா தபால் நிலையம் விற்பனை செய்யப்படுவதற்கு தமது எதிர்ப்பை வெளியிட்டதுடன், அதனைத் தடுத்து நிறுத்துவதற்கு உரிய அதிகாரிகள் முன்வரவேண்டுமென்றும் கோரினார்.
இக்கூட்டத்தில் கலந்துகொண்ட அமைச்சர் பழனி திகாம்பரம், இராஜாங்க கல்வி அமைச்சர் வே.இராதாகிருஷ்ணன், நாடாளுமன்ற உறுப்பினர் முத்து சிவலிங்கம், மத்திய மாகாண சபை அமைச்சர் எம்.ரமேஸ் மற்றும் மத்திய மாகாண சபை உறுப்பினர்களான பிலிப், கணபதி கனகராஜ், பி.சத்திவேல் ஆகியோரும், மாகாண சபை உறுப்பினர் ராஜாராமின் கருத்துக்கு ஆதரவைத் தெரிவித்தனர்.
இந்நிலையில், நுவரெலியா மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டம் முடிவுற்றதன் பின்னர், அவசரஅவசரமாக இந்த ஆர்ப்பாட்டப் பேரணி ஏற்பாடு செய்யப்பட்டதாக, தெரியவருகிறது. இந்த ஆர்ப்பாட்டத்தில் சுமார் 12 பேர் கலந்துகொண்டனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .