2025 ஜூலை 07, திங்கட்கிழமை

பெட்டிக்கடைகள் விவகாரம்: அகற்றுவதற்காக காலக்கெடு விதிப்பு

Princiya Dixci   / 2015 நவம்பர் 12 , மு.ப. 04:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஆ.ரமேஷ்

தலவாக்கலை பிரதான பஸ் தரிப்பு நிலையத்தை அண்மித்த இடங்களில் பெட்டிக்கடைகள் சில, நகரசபையின் அனுமதி இல்லாமல் அமைக்கப்பட்டமைக்கு நடவடிக்கை எடுக்கப்போவதாக தலவாக்கலை, லிந்துலை நகரசபை செயலாளர் அஜித் புஷ்பகுமார தெரிவித்தார். 

இந்த கடைகள், செவ்வாய்க்கிழமை இரவு 10 மணியளவிலேயே அமைக்கப்பட்டுள்ளன. 

வறுமையானவர்கள் சிறு வியாபாரங்களை மேற்கொள்வதற்கென நகர சபையினால் இந்தப் பெட்டிக்கடைகள் அமைத்துக் கொடுக்கப்பட்டன.

இவர்கள் வியாபாரம் செய்வதற்கு நகரின் ஒரு பகுதியில் இடம் வழங்கப்பட்டது என்றும் அவர் மேலும் கூறினார்.

எனினும், நீண்ட காலமாக வியாபாரம் மேற்கொண்டுவந்த சிலர், நகரசபையின் சட்ட விதிகளை மீறி புதிய பஸ் தரிப்பு நிலையத்தின் முன்பாக இப்பெட்டிக் கடைகளை அமைத்துள்ளனர். 

இது, பஸ் தரிப்பு நிலையத்தின் அழகைக் கெடுப்பதாகவும் சட்டத்தை மீறும் செயலாகவும் அமைந்துள்ளது என்றார். 

இது தொடர்பாக அந்த வியாபாரிகளிடம் கேட்டபோது, புதிய பஸ் தரிப்பு நிலையம் ஆரம்பிப்பதற்கு முன் நகருக்கு சற்றுத் தொலைவில் தற்காலிக பஸ் நிறுத்தும் இடத்தில் எமக்கு இப்பெட்டிக் கடைகள் அமைத்துக்கொடுக்கப்பட்டன. அப்போது மக்கள் நடமாட்டம் அதிகமாகக் காணப்பட்டதால் வியாபாரம் காணப்பட்டது. இப்போது புதிய பஸ்தரிப்பு நிலையம் ஆரம்பிக்கப்பட்டதும், பழைய இடத்தில் மக்கள் நடமாட்டம் இல்லாமல்போய்விட்டது. இதனால் தாங்கள் பெரும் நட்டத்தை அனுபவிப்பதாகத் தெரிவித்தனர். எனவே, மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள இடத்தில் வியாபார நடவடிக்கையை மேற்கொள்ள தலவாக்கலை நகரசபை இடம் ஒதுக்கித்தரும் வரை கடைகளை அகற்றப்போவதில்லை என வியாபாரிகள் மேலும் தெரிவித்தனர். 

இது தொடர்பாக தலவாக்கலை பொலிஸ் நிலையத்தில் எந்தவொரு முறைப்பாடும் வியாபாரிகளுக்கு எதிராக பதிவுசெய்யப்படவில்லை. மேற்படி வியாபாரிகளிடம் பணம் அறவிட்டே இக்கடைகள் அமைத்துக் கொடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

இதேவேளை, இந்த பெட்டிக் கடைகளை அகற்றுவதற்காக நேற்று புதன்கிழமை மாலை 6 மணிவரையிலும் காலக்கெடு விதிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .