2025 மே 04, ஞாயிற்றுக்கிழமை

பீட்ரூட்டில் கொரோனா

Gavitha   / 2020 டிசெம்பர் 03 , பி.ப. 01:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஆ.ரமேஸ்

நுவரெலியா மாவட்டத்தின் பீட்ரூ தோட்டப் பிரிவுக்குட்பட்ட லவர்சிலிப் தோட்டத்தில், விவசாயி ஒருவருக்கு, நேற்று (02) மாலை கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என, பிரதேசத்துக்குப் பொறுப்பான பொது சுகாதார பரிசோதகர் தெரிவித்தார்.

குறித்த விவசாயிக்கு, முதலில் நெஞ்சு வலி ஏற்பட்டது என்றும் சாதாரணக் காய்ச்சல் காணப்பட்டமையால், அவர் நுவரெலியா மாவட்ட வைத்தியசாலைக்கு, கடந்த இரண்டு தினங்களுக்கு முன்னர் வைத்தியம் பெற்றுக்கொள்வதற்காக சென்றுள்ளார் என்றும் இதன்போது, அவரிடம் இரத்தமாதிரிகள் பெறப்பட்டதோடு, பிசிஆர் பரிசோதனையும் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், பிசிஆர் பரிசோதனை முடிவுகள், நேற்று (02) வெளியானபோதே, அவருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.

இந்நிலையில், குறித்த தோட்டத்திலுள்ள 50 குடும்பங்கள் சுயதனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

இந்த விவசாயிக்கு தொற்று ஏற்பட்டுள்ளது என்று உறுதி செய்யப்பட்ட போதிலும், அவர் சமீபத்தில் கொழும்புக்கு செல்லவில்லை என்றும் கொழும்பில் இருந்து வந்தவருடன் தொடர்புபடவில்லை என்றும் தெரிவிக்கப்படுகின்றது.

அவ்வாறாயின், இவருக்கு எவ்வாறு கொரோனா ரைவஸ் தொற்று ஏற்பட்டது என்பது தொடர்பில் விசாரணை நடத்தப்படுவதாகவும் குறித்த நபருக்கு இரண்டாவது தடவையாக பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இவர் நுவரெலியா மாவட்ட வைத்தியசாலையில் தனியறையில் வைக்கப்பட்டுள்ளார் என்றும் இவரிடம் இரண்டாவது பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட பின்னர், தொற்று உறுதியாகும் பட்சத்தில, ஹம்பாந்தோட்டையிலுள்ள கொரோனா சிகிச்சை மய்யத்துக்கு அனுப்பி வைக்கப்படுவர் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.

அத்துடன், இந்நபரின் மனைவி மற்றும் பிள்ளைகளும் பிசிஆர் பரிசோதனை மேற்கொள்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X