2026 ஜனவரி 21, புதன்கிழமை

போடைஸ் தோட்ட மக்கள் ஆர்ப்பாட்டம்

Kogilavani   / 2021 மே 12 , மு.ப. 11:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.சதீஸ்

கடந்த 11 தினங்களாக தனிமைப்படுத்தப்பட்டிருந்த டிக்கோயா போடைஸ் தோட்டப் பிரிவு,  இன்று நள்ளிரவுடன் (12) விடுவிக்கப்படவுள்ள நிலையில், அது தொடர்பில் தோட்ட மக்களுக்கு உத்தியோகப்பூர்வ அறிவிப்பு வழங்கப்படவில்லை என்று குற்றஞ்சாட்டப்படுகிறது.

அத்துடன் தோட்டம் முடக்கப்பட்ட நாளிலிருந்து தமக்கு  எவ்வித நிவாரணங்களும் வழங்கப்படவில்லை என்று தெரிவித்துள்ளத் தோட்ட மக்கள், மேற்படி இரு விடயங்களுக்கும் எதிர்ப்புத் தெரிவித்து,  டயகம பிரதான வீதியில், இன்று(12) காலை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தோட்டமானது முடக்கநிலையிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளதுடன் தோட்டத்தில் அமைக்கப்பட்டிருந்த பொலிஸ் சோதனைச் சாவடியும் நீக்கப்பட்டுள்ளதாக தோட்ட மக்கள் தெரிவித்தனர்.

எனினும் இது தொடர்பில் தமக்கு உத்தியோகப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை என்றும் இந்நிலையில் தோட்ட முகாமையாளர்  தொழிலாளர்களை பணிக்குத் திரும்புமாறு அழைப்புவிடுத்துள்ளார் என்றும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்துள்ளனர்.

முடக்கப்பட்ட நாளிலிருந்து இதுவரை, உணவுப்பொருட்கள், அத்தியாவசியப் பொருட்களின்றி பாரிய சிரமங்களை எதிர்கொண்டு வருவதாகவும், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் மேலும் தெரிவித்துள்ளனர்.

கிராம உத்தியோகத்தரை தொடர்புகொண்டு வினவ முயற்சித்தால், அவர் அலைபேசிக்கு பதிலளிக்கவில்லை என்றும் ஆர்ப்பாட்டக்காரர்கள் குற்றஞ்சாட்டினர்.

இந்நிலையில் ஆர்ப்பாட்ட இடத்துக்கு வருகைத்தந்த ஹட்டன் பொலிஸார்,  ஆர்ப்பாட்டக்காரர்களுடன் கலந்துரையாடியுள்ளனர்.

இவ்விடயம் தொடர்பில், பொகவந்தலாவ பொது சுகாதார வைத்திய அதிகாரி வை.பி.எல்.டி.பஸ்நாயக்கவை
தொடர்புகொண்டு வினவியபோது,  நோர்வுட் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட இன்ஜஸ்ரீ,  பிலிங்பொனி ஆகிய
பகுதிகள் தொடர்ந்தும் முடக்கப்பட்டுள்ளன என்றும் போடைஸ், பாத்போட்,
புளியாவத்தை ஆகிய பகுதிகள், முடக்க நிலையில் இருந்து, இன்று(12)  நள்ளிரவு 12 மணியோடு விடுவிக்கப்படவுள்ளன என்றும் தெரிவித்தார்.

இது தொடர்பில், அம்பகமுவ பிரதேச செயலகம், நோர்வுட், ஹட்டன் பொலிஸ் நிலையங்களுக்கு உத்தியோகபூர்வ  அறிவித்தல்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன என்றும் அவர் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X