2025 ஜூலை 01, செவ்வாய்க்கிழமை

மனைவியை மீட்டுத்தாருங்கள்: 4 பிள்ளைகளின் தந்தை மன்றாட்டம்

Kogilavani   / 2015 ஒக்டோபர் 19 , மு.ப. 09:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

காஞ்சன குமார ஆரியதாஸ

சுற்றுலா விசாவில் குவைத் நாட்டுக்குச் சென்ற தனது மனைவியை, மீட்டுத்தருவதற்கு உரியவர்கள் முன்வர வேண்டுமென நான்கு பிள்ளைகளின் தந்தையொருவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

கலேவெல்ல, கொஸ்கஹஹின்ன பிரதேசத்தைச் சேர்ந்த ஆர்.எம்.லொக்குபண்டா (வயது 40) என்ற நான்கு பிள்ளைகளின் தந்தையே இக்கோரிக்கையை முன்வைத்துள்ளார்.

குவைத் நாட்டுக்கு சுற்றுலா விசாவில் சென்ற தனது மனைவி, அங்குள்ள வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தில் தடுத்து வைக்கப்பட்டு எவ்வித ஊதியமும் வழங்கப்படாத நிலையில் வீட்டுப் பணிபெண் வேலைக்கு அமர்த்தப்படுவதாக லொக்குபண்டா கூறியுள்ளார்.

அப்பணியகத்திலுள்ள ஒருவரின் தொலைபேசி மூலம் தொடர்புகொண்ட மனைவி, தன்னை எப்படியாவது மீட்குமாறு கோரியதாக அவர் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.

இந்நிலையில், சுற்றுலா விசாவில் சென்றபடியால் இதற்கு நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியாதென பொலிஸார் மறுத்துள்ளதாக தெரியவருகிறது.

நான்கு பிள்ளைகளின் தந்தையான லொக்கு பண்டா,  தேங்காய் பறித்து கொடுப்பதை தமது ஜுவனோபாய தொழிலாக கொண்டுள்ளார். இவ்வாறு தென்னை மரம் ஏறியபோது காலிடறி விழுந்ததால் இவரது கை ஒன்று முறிந்துள்ளது.

குடும்ப வறுமைக் காரணமாக தனது இரண்டு மகன்களை விகாரையில் ஒப்படைத்துள்ள இவர், தரம் 9 இல் கல்வி கற்று வரும் தனது மகளையும் எதிர்வரும் ஜனவரி மாதம் பாடசாலைக்கு சேர்க்க வேண்டிய தனது இளைய மகனையும் கரை சேர்ப்பதற்காகவே தனது மனைவி வெளிநாட்டு வேலைவாய்ப்பை தேடியதாக கூறினார்.

பொருளாதார நெருக்கடிக்காரணமாக பிள்ளைகளை முறையாக கவனிக்க முடியாது அல்லறும் இக்குடும்பத்தை முன்னேற்றுவதற்கு வெளிநாட்டு பணிப்பெண் வேலைவாய்ப்பு உறுதுணையாக அமையும் என முகவரொருவர் கூறிய கதையை கேட்டு இவரது மனைவி இந்திராணி குமாரியும் வெளிநாடு செல்வதற்கு ஆயத்தமானார்.

இந்நிலையில,  இந்திராணி குமாரியை மேற்படி முகவர், வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணி விசாவில் அனுப்பாது சுற்றுலா விசாவில் குவைத் நாட்டுக்கு அனுப்பியுள்ளார். தான் சுற்றுலா விசாவில்தான் செல்கிறேன்  என அறியாத அவர், தற்போது குவைத் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தில் தடுத்து வைக்கப்பட்டு பல்வேறு சித்திரவதைகளுக்கு உட்படுத்தப்படுவதாக தெரியவருகிறது. எனவே, இவரை மீட்பதற்கு உரியவர்கள் முன்வரவேண்டுமென லொக்கு பண்டா கோரிக்கை விடுத்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X