2025 ஜூன் 19, வியாழக்கிழமை

மஸ்கெலியாவிலுள்ள ’குப்பைப் பிரச்சினைக்கு தீர்வு வேண்டும்’

Editorial   / 2018 ஓகஸ்ட் 27 , பி.ப. 03:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.சதீஸ்

மஸ்கெலியா நகரில் தற்போது ஏற்பட்டுள்ள குப்பைப் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வைப் பெற்றுக்கொடுப்பதற்கு, மஸ்கெலியா பிரதேச சபை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று, ஐக்கிய தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் மைத்திரி குணவர்தன வலியுறுத்தியுள்ளார்.

இந்தப் பிரச்சினைக்கு, நிரந்தரத் தீர்வுப் பெற்றுக் கொடுக்கப்படாவிட்டால், மஸ்கெலியா நகரில் சேகரிக்கப்படுகின்ற குப்பைகள் அனைத்தையும், மஸ்கெலியா பிரதேச சபைக்கு முன்பாகக் கொட்ட நேரிடும் என்றும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

மஸ்கெலியா றோயல் மண்டபத்தில், சனிக்கிழமை (25) நடைபெற்ற மக்கள் சந்திப்பின்போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.

மஸ்கெலியா நகரின் கழிவுகள், மவுசாகலை நீர்த்தேக்கத்தில் கலப்பதை அவதானிக்கக்கூடியதாக உள்ளதெனக் குறிப்பிட்ட அவர், இதனால் மவுசாகலை நீர்த்தேக்கத்தைப் பயன்படுத்தும் மக்களுக்கே, பாரிய இன்னல்களை எதிர்கொள்ள நேரிடும் என்றும் அவர் எச்சரித்தார்.

இங்கு தொடர்ந்துரையாற்றிய அவர், மஸ்கெலியா நகரமானது, குப்பைகள் மட்டுமே குவிந்துக்கிடக்கும் நகரமாக இன்று காட்சியளிக்கிறதெனச் சாடினார்.

தொடர்ந்துரையாற்றிய அவர், "மக்களின் வாக்குகளைப் பெற்று, எமது கட்சியிலிருந்து உள்ளூராட்சி மன்றங்களுக்குத் தெரிவான உறுப்பினர்கள், மக்களுக்கான சேவைகளைச் செய்ய வேண்டும். அதனைவிடுத்து, சபைகளின் தவிசாளர்களின் பேச்சைக் கேட்டுக்கொண்டும் ஊதியத்தை மட்டும் பெற்றுக்கொண்டு இருந்தால், அதில் எவ்விதப் பயனும் இல்லை" என்று குறிப்பிட்டார்.
தொடர்ந்து அவர், “ஐக்கிய தேசிய சுதந்திர முன்னணியிலிருந்து, மஸ்கெலியா பிரதேச சபைக்குத் தெரிவான உறுப்பினருக்கு, ஒன்றைத் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன். ஓரிரு மாதங்களில், டிரக்டர் வண்டியைப் பெற்று, மஸ்கெலியா நகரிலுள்ளக் குப்பைகளை அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு, மக்கள் பணி செய்தால் மட்டுமே, மஸ்கெலியா பிரதேச மக்கள், அடுத்த தேர்தலில் எமக்கான அங்கிகாரத்தை வழங்குவர்” என்றும் அவர் அறிவுறுத்தினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .