Freelancer / 2025 ஜனவரி 25 , பி.ப. 05:23 - 0 - {{hitsCtrl.values.hits}}



-டி.சந்ரு, செ.திவாகரன்
நுவரெலியா - உடப்புசல்லாவ குறுக்கு வீதியில் சமூர்த்தி வங்கிக்கு அருகில் நேற்று (24) இரவு இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
நுவரெலியா மாநகரசபையில் தொழில் புரிந்து வரும் நுவரெலியா - ஹாவாஎலிய பிரதேசத்தை சேர்ந்த 41 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தந்தையான செல்வராஜ் நடராஜ் என்ற நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
நுவரெலியா - உடப்புசல்லாவ குறுக்கு வீதியில் சமூர்த்தி வங்கிக்கு அருகில் இவர் பயணித்த மோட்டார் சைக்கிள் விபத்துக்குள்ளான நிலையில் கிடந்ததை அவதானித்தவர்கள் நுவரெலியா பொலிஸ் நிலையத்துக்கு அறிவித்துள்ளனர்.
இதனைத் தொடர்ந்து பொலிஸார் விபத்து சம்பவித்த இடத்துக்குச் சென்று போது மோட்டார் சைக்கிளும் அணிந்திருந்த தலைக்கவசமும் மாத்திரம் கிடந்ததாகவும் அதனைத் தொடர்ந்து நுவரெலியா மாநகரசபையின் தீயணைப்பு பிரிவினருக்கு அறிவித்து நீண்ட நேரம் தேடி கிடைக்காமையால் மோட்டார் சைக்கிளை மாத்திரம் பொலிஸ் நிலையத்துக்கு எடுத்துச் சென்றுள்ளனர்.
பின்னர் இன்றைய (25) தினம் விபத்து இடம்பெற்ற இடத்தில் உறவினர்கள் மற்றும் பிரதேச மக்கள் இணைந்து தேடுதல் நடத்திய போது நுவரெலியா கிரகறி வாவிக்குச் செல்லும் தலகல ஓயா ஆற்றில், குறித்த நபர் சடலமாக மிதந்துள்ளார்.
இதனை தொடர்ந்து பொலிஸாருக்கு அறிவித்ததை அடுத்து, ஸ்தலதலத்துக்கு விரைந்த பொலிஸார் மற்றும் தடயவியல் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டனர்.
நுவரெலியா மாவட்ட நீதிமன்ற நீதவான் பார்வையிட்டு பின்னர் சடலத்தை மீட்டு சட்ட வைத்திய பரிசோதனைக்காக நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.
பிரேத பரிசோதனைகளின் பின் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படும்.
நுவரெலியா பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.AN
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .