2025 ஜூன் 29, ஞாயிற்றுக்கிழமை

ரொசிட்டா காணிப்பிரச்சினைக்கு 27 வருடங்களின் பின்னர் தீர்வு

Sudharshini   / 2015 ஒக்டோபர் 08 , பி.ப. 01:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

டி.ஷங்கீதன்
கொட்டகலை ரொசிட்டா வீடமைப்புத் திட்டத்தில் 27 வருடங்களாக நிலவிய காணி உறுதிப்பத்திரம் தொடர்பான பிரச்சினைக்கு  தீர்வு காணப்பட்டுள்ளது.

கொட்டகலை ரொசிட்டா வீடமைப்பு திட்டத்துக்கு உட்பட்ட 22 குடும்பங்களுக்கான காணி உறுதிப்பத்திரங்களை கல்வி இராஜாங்க அமைச்சர் வேலுசாமி இராதாகிருஸ்ணன், நுவரெலியா தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகாரசபையின் காரியாலயத்தில் வைத்து புதன்கிழமை(8) வழங்கி வைத்தார்.

இதுதொடர்பாக தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் முகாமையாளர் டபிள்யூ.ஏ.குலரத்ண பண்டார கருத்து தெரிவிக்கையில்,'1988ஆம் ஆண்டு அமைச்சராக இருந்த மறைந்த தலைவர் சௌமிய மூர்த்தி தொண்டமான், காணிகளை வழங்கி  இத்திட்டத்தை ஆரம்பித்து வைத்தார்;. இத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டாலும் இதற்கான காணி உறுதிப்பத்திரங்களை வழங்க முடியாத ஒரு நிலை ஏற்பட்டது.

வட்டி தொகை காரணமாக இத்திட்டத்தின் பயனாளிகள் எமது தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகாரசபைக்குச் செலுத்த வேண்டிய தொகையை செலுத்தவில்லை. இதற்காக வட்டித் தொகையை குறைத்து தருமாறு பயனாளிகள் கோரியிருந்தனர். இதனை சட்டரீதியாக செய்ய முடியாது. எனவே, இவ்விடயம் தொடர்பாக கடந்த 100 நாட்கள் வேலைத்திட்டத்தில் கல்வி இராஜாங்க அமைச்சர் வேலுசாமி இராதாகிருஸ்ணனின் கவனத்துக்கு கொண்டுச் செல்லப்பட்டது.

இது தொடர்பாக இராஜாங்க அமைச்சர் வேலுசாமி இராதாகிருஷ்ணன், எமது அமைச்சர் சஜித் பிரேமதாசவுடன் நடத்திய பேச்சுவார்த்தையின் பயனாக வட்டித் தொகையை அகற்றுவதற்கு இணக்கம் காணப்பட்டது. அதன் அடிப்படையில் மிகுதி தொகையை செலுத்தியவர்களுக்கு தற்பொழுது காணி உறுதிப்பத்திரம் வழங்கப்பட்டு வருகின்றது.

இதன் அடிப்படையில் 21 பேருக்கான உறுதிப்பத்திரம்  வழங்கப்பட்டுள்ளது. கொத்மலை பிரதேசத்தைச் சேர்ந்த இருவருக்கும் வலப்பனை, நில்தண்டாஹின்ன பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவருக்கும் கொட்டகலை, ரொசிட்டாவைச் சேர்ந்த 18 பேருக்கும் வழங்கப்பட்டது.

19 பேருக்கான உறுதிப்பத்திரம் விரைவில் வழங்கப்படும்.ஆனால், இந்த திட்டத்தில் மிகுதியாகவுள்ள 45 பேருக்கு உறுதிப்பத்திரங்கள் வழங்கப்பட முடியாத ஒரு நிலை ஏற்பட்டுள்ளது. காரணம் அவர்கள் இதுவரையில் எமக்கு செலுத்த வேண்டிய பணத்தொகையை செலுத்தாமல் உள்ளனர் என  குறிப்பிட்டார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .