2026 மே 02, சனிக்கிழமை

’வியாபாரிகளின் களஞ்சியசாலைகளை சோதனையிடுங்கள்’

Editorial   / 2020 ஏப்ரல் 16 , பி.ப. 03:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

அரிசி, பருப்பு, டின்மீன் போன்ற பொருள்களுக்கு, அரசாங்கம் கட்டுப்பாட்டு விலையை அறிவித்ததைத் தொடர்ந்து, மேற்படி  பொருள்களை பதுக்கும் நடவடிக்கையில் வியாபாரிகள் பரவலாக ஈடுபட்டு வருவதால், நுவரெலியா உள்ளிட்ட பிரதான நகரங்களில், மேற்படிப் பொருள்களுக்கு பாரிய தட்டுப்பாடு நிலவி வருவதாக நுகர்வோர் தெரிவித்துள்ளனர்.

எனவே மேற்படி பொருள்களைப் பதுக்கி வைத்துக்கொண்டு, விற்பனை செய்ய மருத்துவரும் வியாபாரிகளின் களஞ்சியசாலைகளை, நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபை, விலை கட்டுப்பாட்டுப் பிரிவினர் சோதனையிட்டு, அப்பொருள்களை கிரமமாக, மக்களுக்கு பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று, நுகர்வோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

நுவரெலியா மாவட்டத்தில், இன்று (16) காலை 6 மணிக்கு, ஊரடங்குச்சட்டம் தளர்த்தப்பட்டதால், பொதுமக்கள் ஆரவாரத்துடன் பொருள்கொள்வனவில் ஈடுபட்டனர்.

இதனால் நுவரெலியா உள்ளிட்ட பிரதான நகரங்களில், நேற்று (16) சனநெரிசல் அதிகரித்துக் காணப்பட்டது. பொதுமக்கள், நீண்ட வரிசையில் காத்திருந்து பொருள்கொள்வனவில் ஈடுபட்ட போதிலும், அரிசி, பருப்பு உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்களைப் பெற்றுக்கொள்ள முடியாது ஏமாற்றத்துடன் வீடு திரும்பினர்.

அரிசி, பருப்பு, டின்மீன் போன்ற அரசாங்கத்தால் விலை நிர்ணயிக்கப்பட்ட பொருள்களுக்கே, தட்டுப்பாடு நிலவியதாகவும் குறித்த பொருள்களை களஞ்சியசாலைகளில் வைத்துக்கொண்டே விற்பனைக்கு இல்லை என்று வியாபாரிகள் கூறியதாகவும் சுட்டிக்காட்டப்படுகிறது.

நுவரெலியா மாவட்டத்தில், திங்கட்கிழமையே (20) ஊரடங்குச்சட்டம் மீண்டும் தளர்த்தப்படும் என்பதால், நான்கு நாள்களுக்கு, அத்தியாவசியப் பொருள்களின்றி சிரமங்களை எதிர்கொள்ள வேண்டி ஏற்பட்டுள்ளதாக, நுகர்வோர் தெரிவித்துள்ளனர்.

திங்கட்கிழமையேனும் குறித்த பொருள்களைக் கொள்வனவு செய்வதற்கு, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் வழிவகுக்க வேண்டும் என்றும் நுகர்வோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .