2025 ஜூன் 24, செவ்வாய்க்கிழமை

வை.எம்.சி.ஏ.யின் இலங்கை பிரிவின் 50ஆவது ஆண்டு பிரதான நிகழ்வு ஆகஸ்ட் 11ஆம் திகதி கொழும்பில்

Super User   / 2012 மே 07 , பி.ப. 01:15 - 0     - {{hitsCtrl.values.hits}}


வை.எம்.சி.ஏ.யின் இலங்கை பிரிவின் தேசிய சபையின் 50ஆவது ஆண்டு நிறைவின் பிரதான நிகழ்வு எதிர்வரும் ஆகஸ்ட் 11ஆம் திகதி கொழும்பில் இடம்பெறவுள்ளது.

இந்நிகழ்வில் கட்சி தலைவர்கள், அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், ஆளுநர்கள், முதலமைச்சர்கள், மாகாண சபை உறுப்பினர்கள், உள்ளூராட்சி மன்ற தலைவர்கள், வெளிநாட்டு இராஜதந்திரிகள் மற்றும் வை.எம்.சி.ஏ.யின் வெளிநாட்டு கிளைகளின் பிரதிநிதிகள் என பலர் கலந்துகொள்ளவுள்ளனர்.

இந்த பொன் விழா கொண்டாட்ட நிகழ்வினையொட்டி வை.எம்.சி.ஏ.யின் இலங்கை பிரிவின் தேசிய சபையினால் 'வை.எம்.சி.ஏ.யின் வரலாற்று நூல்' இந்த வருட இறுதியில் வெளியிடப்படவுள்ளது.

அத்துடன், ஆகஸ்ட் மாதம் கொழும்பில் விளையாட்டு பயிற்சி முகாமொன்றையும் வை.எம்.சி.ஏ.யின் இலங்கை பிரிவின் தேசிய சபை ஏற்பாடு செய்துள்ளது. இந்த பயிற்சி முகாமில் கூடைப்பந்து, வலைப்பந்து, கால்பந்து, பட்மின்டன் மற்றும் மேசைப்பந்து ஆகிய விளையாட்டுக்களுக்கான பயிற்சிகள் வழங்கப்பட்டவுள்ளன.

இந்த விளையாட்டு பயிற்சி முகாமிற்கு பின்தங்கிய கிராமங்களிலுள்ள இளைஞர் யுவதிகள் கொழும்பிற்கு அழைத்து வரப்பட்டு பயிற்சி வழங்கப்படவுள்ளதாக வை.எம்.சி.ஏ.யின் இலங்கை பிரிவின் தேசிய சபை தெரிவித்தது. சிறந்த விளையாட்டு வீர, வீராங்கனைகளை உருவாக்குவதே இதன் பிரதான நோக்கம் என அவர்கள் குறிப்பிட்டனர்.

இதேவேளை, வை.எம்.சி.ஏ.யின் இலங்கை பிரிவின் தேசிய சபையின் 50ஆவது ஆண்டு நிறைவினை முன்னிட்டு நாடாளவிய ரீதியில் மர நடுகை நிகழ்வொன்றும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அத்துடன் வை.எம்.சி.ஏ.யின் இலங்கை பிரிவின் தேசிய சபையின் 50ஆவது ஆண்டு நிறைவிற்கு நன்றி செலுத்தும் விசேட பூஜை எதிர்வரும் ஜுன் 9ஆம் திகதி நாடளாவிய ரீதியில் இடம்பெறவுள்ளது.

வை.எம்.சி.ஏ.யின் இலங்கை பிரிவின் தேசிய சபையின் 50ஆவது ஆண்டு நிறைவின் நிகழ்வுகள் தொடர்பில் ஊடகங்களுக்கு விளக்கமளிக்கும் ஊடகவியலாளர் மாநாடொன்று அண்மையில் கொழும்பிலுள்ள தலைமை செயலகத்தில் இடம்பெற்றது.

1882ஆம் ஆண்டு இலங்கையில் ஆரம்பிக்கப்பட்ட வை.எம்.சி.ஏயிற்கு வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள் உட்பட நாடாளவிய ரீதியில் 38 கிளைகள் உள்ளன. இதில் சுமார் 15,000 பதிவு செய்யப்பட்ட உறுப்பினர்களும் 100,000 மேற்பட்ட நலன்விரும்பிகள் மற்றும் பயனாளிகளும் உள்ளமை குறிப்பிடத்தக்கது.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .