2025 மே 05, திங்கட்கிழமை

‘உறவுகளின் போராட்டங்களுக்கு ஜனாதிபதி, பிரதமர் பதிலளிக்க வேண்டும்’

Princiya Dixci   / 2017 ஏப்ரல் 03 , மு.ப. 03:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

காணாமலாக்கப்பட்டவர்களின் உறவுகளால் வடக்கு, கிழக்கில் முன்னெடுத்து வரும் போராட்டங்களுக்கு ஜனாதிபதி மற்றும் பிரதமர் உடனடியாக உரிய பதிலளிக்க வேண்டுமென, ஐக்கிய தேசியக் கட்சியின் கொழும்பு மாவட்ட பிரதான அமைப்பாளர் சி.வை.பி.ராம் அவசர கோரிக்கை விடுத்துள்ளார். 

இவ்விடயம் தொடர்பில் அவர் தெரிவித்துள்ளதாவது, 

நாட்டில் நீடித்த அசாதாரண சூழலின் காரணமாகப் பலர் காணாமலாக்கப்பட்டதாக கூறப்படுகின்றது. குறிப்பாக இறுதி யுத்தத்தின் போது பலர் காணமலாக்கப்பட்டதாகவும் அவர்களின் உறவினர்களால் பல தடவைகள் கூறப்பட்டுள்ளன. 

கடந்த ஆட்சியாளர்களால் அமைக்கப்பட்ட பரணகம தலைமையிலான ஆணைக்குழுவின் முன்னாலும் இவ்வாறு ஆயிரக்கணக்கானவர்கள் முறைப்பாடுகளை அளித்துள்ளனர்.  

காணாமலாக்கப்பட்டவர்களின் பிரச்சினையைப் பொறுத்தவரையில் அது உணர்வு ரீதியான பிரச்சினையாகக் காணப்படுகின்றது. உண்மையில் அவர்களுக்கு என்ன நடந்தது என்பதையே அவர்களின் உறவினர்கள் கேட்கின்றார்கள். விசேடமாக இராணுவத்தினரிடத்தில் சரணடைந்தவர்கள் தொடர்பாகக் கேள்வியேழுப்புகின்றார்கள். 

இவ்வாறான விடயங்களுக்குப் பதில் கிடைக்காத நிலைமையே யுத்தம் நிறைவுக்கு வந்து எட்டு ஆண்டுகள் கடந்த பின்னரும் நீடிக்கின்றது.  

இந்நிலையில், வடக்கு, கிழக்கில் காணாமலாக்கப்பட்டவர்களின் உறவினர்கள் தொடர்ச்சியான போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றார்கள்.  இற்றைக்கு ஒரு மாத காலமாக அவர்கள் தொடர்ச்சியாக போராட்டங்களை முன்னெடுத்து வருகின்ற நிலையிலும் அவர்களின் போராட்டங்கள் குறித்துக் கூட கவனம் எடுக்கப்படாத துர்ப்பாக்கிய நிலைமையே நீடிக்கின்றது.  

தற்போது போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மக்கள் உட்பட அனைத்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவினர்களுக்கும் உரிய பதிலொன்றை வழங்குவதற்கான நடவடிக்கைகளை, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோர் விரைந்தெடுக்குமாறு கோருகின்றேன் என்றார்.  


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X