2025 ஜூன் 25, புதன்கிழமை

மக்கள் குரலுக்கு மதிப்பளித்து மரண தண்டனை நிறுத்தப்பட வேண்டும்: மனோ

Menaka Mookandi   / 2011 ஓகஸ்ட் 30 , மு.ப. 08:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டுள்ள பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோர் தொடர்பில் இந்திய ஜனாதிபதி கருணை காட்ட வேண்டும். தமிழகம், இலங்கை மற்றும் உலகம் முழுவதிலுமிருந்து எழுந்துள்ள மக்கள் குரல்களுக்கு மதிப்பளித்து மரண தண்டனை என்ற சட்டப்பூர்வமான கொலை தடுத்து நிறுத்தப்படவேண்டும் என ஜனநாயக மக்கள் முன்னணி  தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

இவ்விவகாரம் தொடர்பில் இலங்கை வாழ் தமிழ் மக்களின் மன உணர்வுகளை இந்திய அரசாங்கத்திற்கு இலங்கையில் இருக்கின்ற இந்திய தூதுவர் தெரிவிக்க வேண்டும் என்ற கோரிக்கையுடன் மனோ கணேசன் மேலும் கூறியுள்ளதாவது,

'வன்முறை செயற்பாடுகளை நாம் ஒருபோதும் ஆதரிக்கமாட்டோம். ஆனால் குற்றவாளிகளாக தீர்ப்பளிக்கப்பட்டு மரண தண்டனையை எதிர்நோக்கும் மூவரும் உண்மையிலேயே குற்றம் புரிந்தவர்களா என்பது பற்றி பலத்த சந்தேகங்கள் இந்தியாவிலேயே எழுப்பப்பட்டுள்ளன. ராஜீவ் படுகொலை தொடர்பில் இந்திய அரசாங்கத்தால் நியமிக்கப்பட்ட வர்மா ஆணைக்குழு செயற்படவில்லை.

அதேபோல் ஜெயின் ஆணைக்குழு இடைநிறுத்தப்பட்டது. இந்தியாவின் பிரபல ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்ற நீதியரசர் கிருஷ;ண அய்யர், குற்றவாளிகளில் ஒருவரான பேரறிவாளனை நிரபராதியென அறிவித்துள்ளார். இந்த அடிப்படைகளிலேயே இந்திய அரசியல் தலைவர்கள் மரண தண்டனையை ரத்து செய்யுமாறு கோருகின்றார்கள்.

ராஜீவ் காந்தியின் படுகொலை ஒரு திட்டமிட்ட அரசியல் நடவடிக்கையாகும். இது இலங்கை இனப்பிரச்சினை ஆயுத போராட்ட வடிவம் பெற்றமையுடன் நேரடி தொடர்பு கொண்டதாகும். அப்படுகொலைக்கு முன்னர் இடம்பெற்ற அரசியல் செயற்பாடுகளுடன் அந்த படுகொலைக்கு தொடர்பு இருக்கின்றது.

அதேபோல் இன்றுவரை இலங்கை இனப்பிரச்சினையில் இந்திய அரசாங்கத்தின் கொள்கை நிலைப்பாட்டில் ராஜீவ் காந்தியின் படுகொலை செல்வாக்கு செலுத்தி வருகின்றது. இந்த கொள்கை நிலைப்பாட்டின் பின்னணியிலேயே இலங்கையில் இறுதிக்கட்ட யுத்தத்தை இலங்கை அரசாங்கம் முன்னெடுத்தது. இது வரலாறு ஆகும். எனவே மரண தண்டனை கைதிகள் விவகாரமும், இலங்கை இனப்பிரச்சினையுடன் தொடர்பு கொண்டதாகும்.

ராஜீவ் காந்தியின் மண்டையை உடைத்து அவரை கொலை செய்வதற்கு கொழும்பில் வைத்து 1987ஆம் ஆண்டு ஒரு முயற்சி நடைபெற்றது. அவரது பாதுகாப்பு அதிகாரியின் முயற்சியினால் பிரதமர் ராஜீவ் காந்தி அன்று பாதுகாக்கப்பட்டார். அந்த கொலை முயற்சியும் இலங்கை இனப்பிரச்சினையுடன் சம்பந்தப்பட்டதாகும்.

எனவே இலங்கை இனப்பிரச்சினையுடன் தொடர்புகொண்ட ஆயுதப்போராட்டம், யுத்தம் ஆகியவை தொடர்பில் படுகொலை செய்தவர்களையெல்லாம் தூக்கில் போடவேண்டும் என்றால், பெருந்தொகையானோரை தூக்கில் போடவேண்டும். அந்த தகுதியுடைய நிறையபேர் இந்தியாவிலும், இலங்கையிலும் இருக்கின்றார்கள்.

எனவே இது வெறும் சட்டப்பிரச்சினை அல்ல. இதுதொடர்பில் இந்திய அரசாங்கம் அரசியல் ரீதியாக முடிவெடுக்க வேண்டும். அதற்கான வழி இந்திய அரசியல் சட்டப்படி இருக்கின்றது.

அதனால்தான் இந்த பிரச்சினை இன்று இந்திய நீதி மன்றங்களிலிருந்து, இந்திய ஜனாதிபதியிடம் சென்றுள்ளது. பொது மன்னிப்பை வழங்கி மரண தண்டனையை ரத்து செய்யவேண்டும். அதன் மூலமாக இலங்கையின் இனப்பிரச்சினை தீர்வு தொடர்பிலே ஒரு சரியான சமிக்ஞையை இந்திய அரசாங்கம் அறிவிக்கவேண்டும்.'


You May Also Like

  Comments - 0

  • xlntgson Sunday, 04 September 2011 09:42 PM

    சம்பந்தப்பட்ட எல்லாரையும் தூக்கிலிட இயலாது என்றுதான் மூவரை தண்டிக்க உச்ச நீதிமன்று முடிவு செய்திருக்கிறது.
    மனோ, ஜூரி நீங்களா?
    கருத்துக்கணிப்பு எப்போது நடந்தது 'மக்கள் உணர்வு' என்று கூற, அகில இந்தியாவிலும் referendum வைத்துப் பார்த்தால் சதிகாரர்களை தண்டிக்கவே வேண்டும் என்று மக்கள் தீர்ப்பளிப்பார்கள்.
    கொலைவழக்குகள் அநேகம் சதிவழக்குகள் தாம் ஆனால் ராஜீவ் கொலை மாபெரும் சதி, இந்தியாவுக்கெதிரான சதி! இந்திய ஒருமைப்பாட்டுக்கு எதிரான சதி! காங்கிரஸ்கட்சியை அழிக்க சதி என்று சதி தொடர்கிறது! கருணையாம் கருணை.

    Reply : 0       0

    xlntgson Monday, 05 September 2011 09:16 PM

    கருணை காட்டவேண்டும் என்பாரில் காங்கிரசாரும் இருக்கின்றனர் மேதாவி மணிசங்கர ஐயர் அதில் ஒருவர். ஆனால் கருணை மனுவை அனுப்பிவிட்டு இவர்கள் அரசியல் புரிவது எதற்காக, நூல் வெளியீடு எதற்காக, ஆர்ப்பாட்டங்கள் தீக்குளிப்பு எதற்காக? நாங்கள் நியாயமான காரணங்களுக்காக கொலை செய்தோம் என்பது போல்! உயிர்ப்பிச்சை கேட்பவர்கள் போல் தெரியவில்லை. ஓர் உயிர் ராஜீவின் உயிர் என்றும் அதற்காக பல உயிர்கள் கொல்லப்பட்டுவிட்டதாகவும் கூறிக்கொண்டு தங்களது நியாயங்களை முன்னேடுக்கின்றனரே ஒழிய துன்பியல் நிகழ்ச்சி என மறந்தது ஒன்றும் இல்லை.

    Reply : 0       0

    xlntgson Tuesday, 06 September 2011 09:39 PM

    ராஜீவ் காந்தியுடன் இருந்து உடன் உயிரிழந்த பதினைந்து குடும்பத்தினரைச் சேர்ந்தவர்கள் உண்ணாவிரதம் இருக்கப்போகின்றனராம், ஜாவீத் இக்பால், காவல் அதிகாரியின் மகன் தலைமையில், அது ஏன் செய்தியாக தெரியவில்லை ஊடகங்களுக்கு, தீக்குளித்தால் தான் செய்தியோ?
    அவர்கள் எல்லாம் ஒரு கொள்கைக்காக சாகவில்லையோ தேசப் பாதுகாப்பு என்பது கொள்கை அல்லவா?
    பொதுவாக எதிர்த் தரப்பின் செய்திக்கு நல்ல விலை இருக்கிறது, உண்மையாக இருந்தாலும் அரசாதரவு பரபரப்பற்ற செய்திகளுக்கு இல்லை, என்ன?
    diabolical murders, character assassinations.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .