2025 ஜூன் 24, செவ்வாய்க்கிழமை

தமிழர்கள் என்பதால் உடனடி நடவடிக்கை எடுக்கப்படவில்லை என கருதுகிறேன்: பிரபா கணேசன் எம்.பி

Suganthini Ratnam   / 2012 ஏப்ரல் 09 , மு.ப. 08:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

கடந்த சில நாட்களாக கொட்டாஞ்சேனை பொலிஸ் பகுதிக்குட்பட்ட பிரதேசத்தில் இடம்பெற்றுவரும் கொள்ளை சம்பவங்கள் அதிகரித்திருப்பதாகவும் இது சம்பந்தமாக தகுந்த நடவடிக்கை எடுக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் ஜனநாயக மக்கள் காங்கிரஸ் தலைவரும் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான பிரபா கணேசன் தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

"கடந்த சில தினங்களுக்கு முன்பு கொட்டாஞ்சேனை கோயிலுக்கு அருகில் வங்கியிலிருந்து 10 இலட்ச ரூபா பணம் எடுத்து வந்த முதியவரை தாக்கி கொள்ளையிடப்பட்டுள்ளது. அதே போல் கடந்த வெள்ளிக்கிழமை விவேகானந்தா மேட்டில் ஆலயத்திற்கு சென்று திரும்பிய பெண்ணின் தாலிக் கொடி அபகரித்து செல்லப்பட்டுள்ளது.

இவ்வாறான பல சம்பவங்கள் கொட்டாஞ்சேனை பொலிஸ் பகுதியில் இடம்பெற்று வருகின்றன. அதுவும் குறிப்பாக தமிழ் மக்களிடமே இவ்வாறான கொள்ளை சம்பவங்கள் நடைபெற்றிருக்கின்றன. இது சம்பந்தமாக கொட்டாஞ்சேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சேனக்க ரத்வத்தயிடம் கடும் ஆட்சேபனையை தெரிவித்திருந்தேன்.

10 இலட்ச ரூபா பணத்தை அபகரித்துச் சென்ற வாகனத்தின் பதிவிலக்கத்தை தேடிய பொழுது அது கடவத்தை, சூரியவௌ என்ற பகுதியை சார்ந்த வாகனம் என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. வாகனத்தின் உரிமையாளரையும் கொள்ளையில் ஈடுபட்டவர்களையும் கண்டுபிடிப்பதற்கு விசேட பொலிஸ் படை அமைக்கப்பட்டிருப்பதாக பொலிஸ் பொறுப்பதிகாரி தெரிவித்துள்ளார்.

அதேபோல் வெள்ளிக்கிழமை இடம்பெற்ற வழிப்பறி சம்பவத்தின் சம்பந்தப்பட்ட மோட்டார் சைக்கிளின் பதிவு களுத்துரை மாவட்ட பயாகல பகுதியை சேர்ந்தவர் எனவும் உரிமையாளரை கைது செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் தெரிவித்தார். இருப்பினும் பாதிக்கப்பட்டவர்கள் தமிழர்கள் என்பதால் தான் உடனடி நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று கருதுகிறேன்.

இது சம்பந்தமாக பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் பொலிஸ் மா அதிபர் என்.கே.இளங்ககோன் ஆகியோருக்கு கடிதம் மூலம் எனது ஆட்சேபனை தெரிவித்துள்ளதுடன் உடனடி நடவடிக்கை எடுக்குமாறும் வேண்டியுள்ளேன். மேலும் இவ்வாறான சம்பவங்கள் எமது மக்கள் மத்தியில் இடம்பெறுவதற்கு அனுமதிக்க முடியாது" என்றார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .