2025 ஜூன் 24, செவ்வாய்க்கிழமை

முஸ்லிம் காங்கிரஸ் - ஜனநாயக ஐக்கிய முன்னணி இணைந்ததால் பேரம் பேசும் பலம் அதிகரிப்பு: ஹக்கீம்

Menaka Mookandi   / 2012 மே 10 , பி.ப. 04:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸும், ஜனநாயக ஐக்கிய முன்னணியும் ஒன்றிணைந்ததன் மூலம் பேரம் பேசும் பலம் அதிகரித்துள்ளதோடு கட்சி நடவடிக்கைகளை முன்னெடுப்பதுவும்  இலகுவாக்கப்பட்டுள்ளது' என்று முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும், நீதியமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸும், ஜனநாயக ஐக்கிய முன்னணியும் அண்மையில் ஒன்றிணைந்ததையடுத்து நேற்று புதன்கிழமை மாலை 'தாருஸ்ஸலாம்' தலைமையகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் உரையாற்றும் பொழுதே அமைச்சர் ஹக்கீம் மேற்கண்டவாறு கூறினார். இக் கூட்டத்தில் ஜனநாயக தேசிய முன்னணி தலைவர் ஹாபிஸ் நஸீர் அஹமதுவும் கலந்து கொண்டார்.

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ், ஜனநாயக ஐக்கிய முன்னணி ஆகியவற்றின் மேல்மாகாண சபை, கொழும்பு மாநகர சபை உறுப்பினர்களும் இவ்விரு கட்சிகளையும் சேர்ந்த உறுப்பினர்களும் பெருந்தொகையான ஆதரவாளர்களும் இக் கூட்டத்திற்கு சமூகமளித்திருந்தனர்.

அமைச்சர் ஹக்கீம் உரையாற்றுகையில் மேலும் தெரிவித்ததாவது, 'நாம் இனிமேல் கட்சி நடவடிக்கைகளை ஒன்றுபட்டு முன்னெடுக்க இருக்கிறோம். எமது கொழும்பு மாவட்ட அமைப்பாளரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான சபீக் ரஜாப்தீன் நாடு திரும்பியதும், அவருடன் கலந்தாலோசித்த பின்னர் கொழும்பு மாநகரத்திற்கான எமது பணிகள் தொடரவுள்ளன.

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸிற்கும், ஜனாநாயக ஐக்கிய முன்னணிக்கும் இடையிலான முரண்பாடுகள் முற்றாக கலையப்பட்டுள்ளதோடு சட்ட ரீதியான சர்ச்சைகளுக்கும் நீதிமன்றத்திற்கு வெளியில் சுமூகமாக தீர்வு காணப்பட்டுள்ளது. எமது கட்சிகளின் இணைவை ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் அதியுயர் பீடம் அங்கீகரித்தது.

சிறு பலவீனங்களைப் போக்கி பலமான கட்டமைப்பை ஏற்படுத்த தீர்மானித்துள்ளோம். ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சிக்குள் அரசியல் உள் முரண்பாடுகள் அவ்வப்பொழுது தோற்றம் பெற்றதுண்டு. ஒற்றுமையின் வலிமையை நாங்கள் நன்கு உணர்ந்துள்ளோம்.

கொழும்பு மாவட்ட மத்திய குழு தனது செயல்பாடுகளை துரிதமாக முன்னெடுக்கும். கட்சிகளின் இரண்டினதும் இணைவைத் தொடர்ந்து மேல் மாகாண சபையில் எமக்கு உறுப்பினர்கள் மூவரும், கொழும்பு மாநகர சபையில் உறுப்பினர்கள் நால்வரும் உள்ளனர். இவர்கள் ஒன்றுபட்டு செயலாற்ற முன்வந்துள்ளனர்.

கட்சியைப் பொறுத்தவரை அடிமட்ட வலைப்பின்னல் மிகவும் முக்கியமானது. கொழும்பு மாநகர சபை எல்லையைப் பொறுத்தவரை ஒவ்வொரு வட்டாரத்திலும் கூட்டங்களை நடாத்துவதோடு மக்கள் நலன்புரி நடவடிக்கைகளிலும் ஒன்றிணைந்த கட்சிகள் இரண்டினதும் உறுப்பினர்களும், ஆதரவாளர்களும் கூட்டாக  ஈடுபட தீர்மானித்துள்ளோம்.

கொழும்பு மாநகரத்திலும் அண்டிய பிரதேசங்களிலும் வாழும் கணிசமான எண்ணிக்கையிலான சிங்கள, தமிழ் சகோதர, சகோதரிகளும் ஒன்றுபட்டு ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸை இனவாதமற்ற கட்சி என்ற காரணத்தினால் பலப்படுத்துவதற்கு சாரிசாரியாக முன்வருகின்றனர் என்றார். 

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தலைவராக தெரிவு செய்யப்பட்டுள்ள 'துஆ' கட்சியின் தலைவர் ஹாபிஸ் நஸீர் அஹமத் உரையாற்றுகையில், 'அண்மையில் அமைச்சர் ஹக்கீமுடன் நான் கட்டார் நாட்டுக்குச் சென்றிருந்த போது தலைசிறந்த இஸ்லாமிய அறிஞர் கர்ளாவி எங்களிடம் ஓர் உண்மையைக் கூறினார்.

அதாவது அரபு நாடுகளின் முஸ்லிம்கள் ஒற்றுமைபடுவதை விட சிறுபான்மையினராக வாழும் நாடுகளில் முஸ்லிம்கள் மத்தியில் ஏற்படும் ஒற்றுமை உலகிலேயே மாபெரும் மாற்றத்தை ஏற்படுத்த வல்லது என்று அவர் எங்களிடம் கூறினார்.

அதனடிப்படையில், ஒற்றுமையினூடாகவே எமது சமூகத்தை சிறப்பாக வழிநடத்த முடியும். இவ்வளவு காலமாக நாம் பிரிந்திருந்த போதிலும் ஒரு முக்கியமான காலகட்டத்தில் ஒன்றிணைந்துள்ளோம். இதனூடாக சமூக, பொருளாதார, கல்வித் துறைகளில் நாம் உரிய கவனத்தைச் செலுத்தவுள்ளோம்.  ஒவ்வொரு மூலை முடுக்கிலும் கட்சிப் பணிகள் தீவிரமாக முன்னெடுக்கப்படுவதற்குரிய திட்டங்களை தீட்டியுள்ளோம்' என்றார்.

இக்கூட்டத்தில் மேல்மாகாண சபை உறுப்பினர்களான அர்ஷாத், பாயிஸ், கொழும்பு மாநகர சபை உறுப்பினர்களான நைஸர், அனாஸ், ரோய் போகாவத்த, லாஹிர், முன்னாள் மேல் மாகாண சபை உறுப்பினரும், பிரதி அமைச்சர் பஷீர் சேகுதாவூத்தின் பிரத்தியேகச் செயலாளருமான அப்துல் ஹை ஆகியோரும் பங்குபற்றினர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .