2025 ஜூன் 23, திங்கட்கிழமை

தமிழ்ச் சங்க ஒழுங்கை விவகாரம்; மனோ குத்துக்கரணம் அடிக்கின்றார்: பிரபா

Super User   / 2012 டிசெம்பர் 04 , மு.ப. 10:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

"கொழும்பு தமிழ்ச்சங்க ஒழுங்கை பெயர் மாற்றம் மாநகர சபை உறுப்பினர் வேலணை வேணியனின் சிந்தனையிலும் முயற்சியினாலும் மேற்கொள்ளப்பட்ட பாராட்டப்படக்கூடிய விடயமாகும்.

இருப்பினும் இதற்கு தடை ஏற்பட்ட பின்பு ஒற்றுமையாக செயற்பட்டிருப்பின் இதற்காக கூட்டப்பட்ட கூட்டத்தை ஒத்திவைக்கவேண்டிய தேவை ஏற்பட்டிருக்காது" என ஜனநாயக மக்கள் காங்கிரஸ் தலைவரும் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான பிரபா கணேசன் தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

"பெயர் மாற்றத்திற்கு எதிர்ப்பு வெளியானதும் அரசாங்க தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களாகிய நானும் அஸ்வரும் ஆட்சேபனை தெரிவித்திருந்தோம். இதைத் தொடர்ந்து ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் உடனடியாக நானும் அஸ்வர் எம்.பியும் அரசாங்கத்திற்குள் சகல சௌபாக்கியங்களுடன் இருந்து கொண்டு இப்படியான கண்டனங்களை தெரிவிப்பதில் அர்த்தங்கள் இல்லை.இதற்காக எவ்வாறான ஆர்ப்பாட்டத்தை முன்னெடுப்பது என தனக்குத் தெரியும் என ஊடக அறிக்கையில் தெரிவித்திருந்தார்.

அது மட்டுமின்றி இவரது கட்சியின் மாகாண சபை உறுப்பினர் ராஜேந்திரன் மேல் மாகாண முதலமைச்சர் மூலமாக கூட்டத்தை தான் ஏற்பாடு செய்திருப்பதாகவும் இதில் மனோ கணேசன் கலந்துகொள்வதாகவும் ஊடகங்களில் சில தினங்களாக  தெரிவித்து வந்தார்.

இது தொடர்பாக கடந்த முதலாம்  திகதி இணையத்தளங்களிலும் செய்தி வெளியிடப்பட்டது. இன்று கூட்டம் திகதி முடிவின்றி ஒத்திவைக்கப்பட்டதை தொடர்ந்து இன்று மனோ கணேசன் ஊடகங்களுக்கு இன்றைய கூட்டம் தமது கட்சியினால் ஏற்பாடு செய்யப்படவில்லை என்று குத்துக்கரணம் அடிக்கின்றார்.

மேல் மாகாண  முதலமைச்சரினால் ஏற்பாடு செய்த கூட்டம் என மாகாண சபை உறுப்பினர் நல்லையா குமரகுருபரன் ஏற்கனவே தெளிவாக அறிவித்திருந்தார். மேல் மாகாண முதலமைச்சரிடம் நான் ஏற்கனவே இது சம்பந்தமாக உரையாடியிருந்தேன்.

அரசாங்க தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர் என்ற வகையில் எனது விண்ணப்பத்திற்கமைய இப்பிரச்சினைக்கு தீர்வு காண்போம் என உறுதியளித்துள்ளார். நான் மட்டுமே இன்று கொழும்பு மாவட்டத்தில் இருக்கும் ஒரே தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்.

அரசியல்வாதிகள் தேர்தல்களுக்காகவும் வேறு முரண்பட்ட விடயங்களுக்காகவும் ஒருவருக்கொருவர் எதிராக செயல்படுவது சகஜம். இருப்பினும் தமிழ்ச் சங்க ஒழுங்கை பெயர் மாற்றம் போன்ற உயரிய விடயங்களில் நாம் ஒற்றுமையாக செயல்படாவிட்டால் அது நமது இனத்திற்கு நாம் செய்யும் துரோகமாகும்.

கூட்டத்தை தான் ஏற்பாடு செய்ததாக ஊடகங்களுக்கு தெரிவித்திருந்த ராஜேந்திரன் இன்று முதலமைச்சர் முதற்கொண்டு எவரும் சமூகமளிக்காதது ஏன் என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.

தமது கட்சியே தலைநகரத்தில் தலைமை கட்சி என்றும் தானே தலைநகர தமிழர்களின் தலைவன் என்ற இறுமாப்புடன் செயல்படுவதனால் இறுதியில் வீழ்வது தலைநகர தமிழர்களின் உரிமைகள் தான்.

ஏற்கனவே நிமலரூபன், தமிழ் அரசியல் கைதிகள் போன்ற பல விடயங்களுக்காக போராட்டங்களை நடத்தி அதனைத் தொடர்ந்து முன்னெடுக்காமல் புதிய விடயங்களுக்கு தாவியதை போன்று இவ்விடயத்தில் நடந்து கொள்ளா விட்டால் சிறந்ததாகும் என நினைக்கின்றேன்" என்றார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .