2025 ஜூன் 23, திங்கட்கிழமை

தமிழ்ச்சங்க ஒழுங்கை விவகாரத்தை வைத்து அரசியல் செய்ய விரும்பவில்லை: பிரபா கணேசன் எம்.பி.

Super User   / 2012 டிசெம்பர் 05 , பி.ப. 02:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

தமிழ்ச்சங்க ஒழுங்கை விவகாரம் சம்பந்தமான கூட்டத்திற்கு முதலமைச்சரை நான் ஒரு போதும் வர வேண்டாம் என்று கூறவில்லை. என்பதுடன் தமிழ்ச்சங்க ஒழுங்கை விவகாரத்தை வைத்து அரசியல் செய்யவும் நான் விரும்பவில்லை என்று ஜனநாயக மக்கள் காங்கிரஸ் தலைவரும் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான பிரபா கணேசன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,   

"கொழும்பு தமிழ்ச்சங்க ஒழுங்கை விவகாரத்தை பெரிதாக்கி மாகாண சபை உறுப்பினர் ராஜேந்திரன் எனக்கு எதிராக ஊடக அறிக்கையை வெளியிட்டுக் கொண்டிருக்கின்றார். தமிழ்ச்சங்க ஒழுங்கை விவகாரம் சம்பந்தமான கூட்டத்திற்கு முதலமைச்சரை நான் ஒரு போதும் வர வேண்டாம் என்று கூறவில்லை.

கூட்டம் நடைபெறுவதற்கு முன்பாகவே மனோ கணேசன் தனது ஊடக அறிக்கையின் மூலமாக  முதலமைச்சரை விமர்சனம் செய்திருந்தார். அதுவே அவர் பங்குபற்றாமைக்கு காரணமாக அமைந்தது. சில விடயங்களை சாணக்கியமாக சாதித்துக் கொள்ள வேண்டுமேயொழிய ஊடகங்களில் பெயர் பதித்து அரசியல் விளம்பரத்தை தேடிக் கொள்வதை மட்டுமே நம்பி பிழைப்பை நடத்துபவர்களுக்கு நான் பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை.

நான் என்றுமே அரசாங்கத்திற்கு வெள்ளையடித்ததில்லை. மாறாக அவர்களுக்கு வக்காலத்து வாங்கியதும் இல்லை. தமிழ் மக்களுக்கு எதிரான அரசாங்கத்தின் போக்குகளுக்கு எனது கண்டனத்தை தெரிவித்து வந்திருக்கின்றேன். அரசாங்கத்தின் இப்போக்கை கண்டித்து  மனோ கணேசனிற்கு பின்னால் நின்று பத்தோடு பதினொன்றாக ஆர்ப்பாட்டம் செய்வதில் தமிழ் மக்களுக்கு எவ்வித பிரயோசனமும் இல்லை.

தன் கட்சியை சார்ந்த எவரையும் தனக்கு முன்னால் சென்று ஆர்ப்பாட்டம் செய்வதற்கு மனோ கணேசன் விடுவதுமில்லை. இன்று அவரது 53வருட வாழ்நாளிலே 46 வருடகாலம் அவருடன் நான் இருந்திருப்பதனால் முழுமையாக நான் அவரை அறிவேன்.

ஊடக அறிக்கைகள் மூலமாகவோ, சம்பவத்திற்கு எதிராக  ஆர்ப்பாட்டங்களை நடாத்தி அந்த சம்பவத்திற்கு தீர்வை காண்பதற்கு எவ்வித தொடர் நடவடிக்கைகளும் எடுக்காமல் அடுத்த சம்பவத்திற்கு செல்லும் அரசியல் வாதி நான அல்ல. அரசாங்கமாக எப்படிப்பட்டதாக இருந்தாலும் வாக்களித்த மக்களுக்கு தேவையானவற்றை இன்று கொழும்பு மாவட்டத்தில் பெற்றுக் கொடுத்து வருகின்றேன்.

கடந்த இரண்டு வருட நாடாளுமன்ற காலத்தில் என்னால் கட்டியெழுப்பப்பட்ட கொழும்பு மாவட்ட தமிழ்  பாடசாலைகளின் வரலாற்று பட்டியலை வெளியிட முடியும். ஆனால் ஒன்பது வருட காலமாக நாடாளுமன்றத்தில் அங்கம் வகித்தும் குறிப்பாக இரண்டு வருட காலம் ரணில் விக்ரமசிங்கவின் ஆட்சியில் ஆளும் கட்சி நாடாளுமன்ற உறுப்பினராகவும் அங்கம் வகித்த மனோ கணேசனின் அறிக்கைகளை மட்டும் தான் பட்டியலிட்டு காட்ட முடியும்.

மீண்டும் மீண்டும் பதவிக்கு வரவேண்டும் என்ற நோக்கம் இருந்திருந்தால் எதிர்க்கட்சியில் அமர்ந்து கொண்டு என்னாலும் அரசாங்கத்திற்கு எதிரான அறிக்கைகளை விட்டு தமிழ் வாக்குகளை சேகரித்திருக்க முடியும். அதைவிட யுத்தத்தின் பின் விழுந்து கிடக்கும் எமது சமூகத்தின் கல்வி எதிர்ப்பார்ப்புகளையே நான் முன்னிலைப் படுத்தி வருகின்றேன்.

ஊடக அறிக்கைகள் மூலமாக எனக்கு பதிலளித்திருக்கும் ராஜேந்திரன் ஏதாவது ஒரு மேடையில் இதனை தமிழில் வாசிக்க முடியுமா என்று கேட்கின்றேன். சிங்கள மொழியை பயின்ற ராஜேந்திரனுக்கு தமிழில் எழுதவோ வாசிக்கவோ தெரியாது என்று அரசியல் வட்டாரத்தில் உள்ளவர்களுக்கு தெரியும்.

இவரது பெயரில் தனது கருத்துக்களையே அறிக்கையாக விடும் மனோ கணேசன் என்னுடன் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் பகிரங்க விவாதத்திற்கு வர முடியுமா என்று கேட்கின்றேன். அந்த சவாலை  ஏற்றுக்கொண்டு அவர்  வருவாறேராயின் கடந்த கால அரசியலில் இடம்பெற்ற பல ரகசியங்களை வெளியிடுவதற்கு நான் தயாராக இருக்கின்றேன்" என்றார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .