2025 ஜூன் 22, ஞாயிற்றுக்கிழமை

ஆளுந்தரப்பு சிறுபான்மை எம்.பி.க்கள் ஒன்றிணைய வேண்டும்: பிரபா எம்.பி

Menaka Mookandi   / 2013 மார்ச் 29 , பி.ப. 02:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

'அரசாங்கத்திற்கு ஆதரவு தெரிவித்துக்கொண்டிருக்கும் சிறுபான்மை இன கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களும் அரச தரப்பு சிறுபான்மை நாடாளுமன்ற உறுப்பினர்களும் இணைந்து சிறுபான்மை மக்களின் பிரச்சினை சம்பந்தமாக அரசாங்கத்திற்கு அழுத்தத்தை கொடுக்க வேண்டும் என ஜனநாயக மக்கள் காங்கிரஸ் தலைவரும் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான பிரபா கணேசன் ஊடகங்களுக்கு தெரிவித்தார்.

இது தொடர்பில் பிரபா கணேசன் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, 'ஜெனீவா மாநாடு முடிவடைந்து விட்டது. இம்மாநாட்டை திருவிழாவாகக் கருதிக்கொண்டு பல நாடகங்கள் அரங்கேறின. ஜெனீவா மாநாட்டை வைத்துக்கொண்டு பலர் உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் அரசியல் விளம்பரம் தேடிக்கொண்டனர். முடிவடைந்து போன இந்த மாநாட்டின் மூலமாக தமிழ் மக்களுக்கு நியாயமான தீர்வு கிடைக்கும் என காட்டி இன்னும் சிலர் மேலும் அரசியல் செய்து கொண்டிருக்கின்றனர்.

ஜெனீவா தீர்மானம் தமிழ் மக்களுக்கு முதல் படி என கூறுபவர்கள் இதனையே சென்ற ஆண்டும் தெரிவித்திருந்தனர். எகிப்து, லிபியா போன்று அரசாங்கத்தை வீழ்த்தி விடலாம் என்ற நோக்கில் கனவு காண்கிறார்கள். லிபியா, எகிப்து போன்ற நாடுகளில் மக்கள் அரசாங்கத்திற்கு எதிராக கிளர்ந்திருந்தமையே அந்நாட்டு அரசாங்கத்தை வீழ்த்தக் கூடியதாக இருந்தது. ஆனால் எமது நாட்டில்; 70 வீதத்திற்கும் அதிகமான மக்கள் இன்று அரசாங்கத்திற்கு ஆதரவாக இருக்கின்றனர் என்ற யதார்த்தத்தை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

இன்று நாட்டில் சிறுபான்மை மக்களுக்கு எதிரான பல சம்பவங்கள் இடம் பெறுகின்றது. முஸ்லிம் மக்களும் தமிழ் மக்களைப் போன்று இன்று தமக்கு நியாயம் கிடைக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டில் இருக்கின்றனர். இந்நாட்டிலுள்ள எமது பிரச்சினைகளை வெளிநாட்டு தலையீடின்றி உள்ளாட்டிலேயே தீர்த்துக் கொள்வோமேயானால் அந்த தீர்வு நிரந்தரமானதாக இருக்கும். வெளிநாடுகள் மூலமாக நாட்டில் வாழும் 75 வீத சிங்கள மக்கள் மீது திணிக்கப்படும் எந்த ஒரு தீர்வும் நிலைத்து நிற்காது என்ற வரலாற்றை 13வது திருத்த சட்ட மூலம் நாம் உணர்ந்திருக்கின்றோம்.

உள்நாட்டில் தீர்வைக் காண்பதற்கு சிங்கள மக்களின் பெரும் ஆதரவைப் பெற்ற இந்த அரசாங்கத்தினால் மூலமாக மட்டுமே முடியும் என்ற யதார்த்தத்தை நாம் புரிந்து கொள்ள வேண்டும். எதிர் கட்சிகளின் அறிக்கை அரசியலை அரசாங்கம் ஒரு போதும் பொருட்படுத்துவது இல்லை. அதனால் அரசாங்கத்திற்குள் இருக்கும் சிறுபான்மை நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒன்றிணைந்து சிறுபான்மை மக்களின் தீர்விற்கான பேச்சுவாரத்தையை ஆரம்பிப்போமேயானால் சாதகமான பலன்களை காண முடியும்.

இது சம்பந்தமாக அமைச்சர் ரஹூப் ஹக்கீமுடனும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுடனும் பேசியுள்ளேன். இவர்கள் இருவரும் இப்படியான ஒரு செயல்பாட்டை ஏற்படுத்துவதற்கு வரவேற்புடன் சம்மதம் தெரிவித்துள்ளனர். அரசாங்கத்திற்குள் இருக்கும் ஏனைய சிறுபான்மை கட்சி தலைவர்களுடன் இது சம்பந்தமாக பேசுவதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ளேன்.

என்னைப் பொறுத்தவரையில் எதிர்கட்சிகளை விட இனப்பிரச்சினை தீர்விலே பொறுப்புடன் செயல்பட வேண்டியவர்கள் அரசாங்கத்திற்கு ஆதரவு தெரிவித்திருக்கும் சிறுபான்மை நாடாளுமன்ற உறுப்பினர்களேயாகும். இனப்பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும் என்று நோக்கமுள்ள அரசாங்கத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் அனைத்து சிறுபான்மை நாடாளுமன்ற உறுப்பினர்களும் இதற்கு ஒத்துழைக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கின்றேன்' என்றார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .