2025 ஜூன் 22, ஞாயிற்றுக்கிழமை

பல தமிழ் பாடசாலைகளுக்கு நிதி ஒதுக்க முதலமைச்சர் உறுதி: பிரபா கணேசன்

Super User   / 2013 ஏப்ரல் 29 , மு.ப. 11:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

மேல் மாகாணத்திலுள்ள பல தமிழ் பாடசாலைகளுக்கு நிதி ஒதுக்குவதற்கு மேல் மாகாண முதலமைச்சர் பிரசன்ன ரணதுங்க  உறுதியளித்துள்ளார் என நாடாளுமன்ற உறுப்பினர் பிரபா கணேசன் தெரிவித்தார்.

மேல் மாகாண தமிழ் பாடசாலைகளில் நிலவும் குறைபாடுகள் சம்பந்தமாக முதலமைச்சர் பிரசன்ன ரணதுங்கவிற்கும் ஜனநாயக மக்கள் காங்கிரஸ் தலைவரும் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான பிரபா கணேசனுகும் இடையிலான சந்திப்பு இன்று திங்கட்கிழமை இடம்பெற்றது.

இந்த சந்திப்பு திருப்தியளித்துள்ளதென குறிப்பிட்டு நாடாளுமன்ற உறுப்பினர் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

"மேல் மாகாணத்தில் நிலவும் ஆசிரிய வெற்றிடத்தை நிரப்புவதற்கான அறிவிப்புகள் வெளிவந்தும் மேல் மாகாணத்திற்குள் உள்ள பட்டதாரிகளிடம் இருந்து விண்ணப்பங்கள் எதுவும் கிடைக்க பெற்றிருக்கவில்லை. இருப்பினும் கடந்தமுறை முதலமைச்சர் என்னிடம் வழங்கிய வாக்குறுதியின் அடிப்படையிலே மேல் மாகாணத்திற்கு வெளி மாகாணங்களிலிருந்தும் பட்டதாரிகளை உள்வாங்க இன்றைய சந்திப்பில் இணக்கம் காணப்பட்டது.

இதனடிப்படையில் என்னிடம் விண்ணப்பங்களை அனுப்பிய 449 பட்டதாரிகளின் விபரங்கள் முதலமைச்சரிடம் கையளிக்கப்பட்டுள்ளது. அது மட்டுமின்றி மத்திய கொழும்பு இந்து மகா வித்தியாலயத்தின் புதிய கட்டிட இறுதி பணிக்காக 50 இலட்சம் ரூபா நிதி ஒதுக்கீடும், கணபதி இந்து மகளிர் மகா வித்தியாலய கணனி பயிற்சிக்கு புதிய கட்டிடம் அமைப்பதற்கு 80 இலட்ச ரூபாவும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இதற்கு மேலதிகமாக கொழும்பு-13 சென் அந்தனிஸ் ஆண்கள் மகா வித்தியாலயத்தின் இடித்து அப்புறப்படுத்தப்பட்டுள்ள பழைய கட்டிடத்திற்கு பதிலாக புதிய நவீன கட்டிடத்திற்காக ரூபா 80 இலட்சமும் இவ்வருட நிதி ஒதுக்கீட்டில் வழங்கப்படுவதற்கும் முதலமைச்சர் ஒப்புதல் தந்துள்ளார்.

அதேபோல் மேல் மாகாண தமிழ் பாடசாலைகளில் நிலவிவரும் ஒலி பெருக்கி வசதி பற்றாக்குறை, தளபாட பற்றாக்குறை, உபகரணங்கள் பற்றாக்குறை, பாடசாலைகளின் காவலாளி, சிற்றூழியர்கள், காரியாலய உதவியாளர்;கள் பற்றாக்குறை போன்றவற்றை நிவர்த்தி செய்வதற்காக விபரப் பட்டியலைப் பெற்றுக்கொள்வது சம்பந்தமான இணக்கப்பாடும் காணப்பட்டது.

அதேபோல் மேல் மாகாணத்தில் தமிழ் பாடசாலைகளிலுள்ள கல்வி வலயங்களில் இன்று அதிகமான முஸ்லிம் உதவி பணிப்பாளர்களே கடமையாற்றுகின்றார்கள். சிறுபான்மையினருக்கு கிடைத்த சந்தர்ப்பத்தையிட்டு மகிழ்ச்சியடைகின்றோம். இருப்பினும் இதனால் முஸ்லிம் பாடசாலைகளுக்கு கிடைக்கப்பெற்று வரும் வரப்பிரசாதங்கள் தமிழ் பாடசாலைகளுக்கு கிடைக்கப்பெறாதது கவலைக்குரிய விடயமாகும்.

இதனால் ஒவ்வொரு கல்வி வலயத்திற்கு மேலதிக தமிழ் உதவி கல்விப் பணிப்பாளர் நியமிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை விடுக்கப்பட்டது. இதனையும் முதலமைச்சர் ஏற்றுக் கொண்டு இதற்காக அதிபர் சேவையில் இருக்கும் தரம் வாய்ந்த தமிழ் அதிபர்கள் சிலரை உள்வாங்குவதாகவும் தெரிவித்தார்.

ஒவ்வொரு இரண்டு மாதத்திற்கொருமுறை தமிழ் பாடசாலைகள் உள்ள கல்வி வலயங்களிலுள்ள கல்வி பணிப்பாளர், உதவி கல்விப் பணிப்பாளர்கள் அழைக்கப்பட்டு என்னுடனான சந்திப்பை ஏற்படுத்தி தமிழ் பாடசாலைகளில் நிலவும் குறை நிறைகளை கண்டறிவதற்கான ஏற்பாடுகளையும் செய்வதாக இணக்கம் காண்ப்பட்டது.

மேல் மாகாண சபையில் தமிழ் கல்வி சம்பந்தமாக அரச தரப்பு தமிழ் மாகாண சபை உறுப்பினர்கள் இல்லாமை பாரிய குறைபாடு எனவும் முதலமைச்சர் தெரிவித்தார்".

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .