2025 ஜூன் 23, திங்கட்கிழமை

"தமிழ்ச்சங்கம் ஒழுங்கை விவகாரம்" கூட்டம் முடிவின்றி ஒத்திவைப்பு

Kanagaraj   / 2012 டிசெம்பர் 04 , மு.ப. 07:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொழும்பு தமிழ்ச்சங்கம் ஒழுங்கை விவகாரம் தொடர்பாக இன்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற கூட்டம் முடிவின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இன்றைய கூட்டத்தில் கலந்துகொள்வதாக உறுதியளித்திருந்த மேல்மாகாண  முதலமைச்சர் பிரசன்ன ரணதுங்க, தமிழ் மொழி அமுலாக்கல் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார ஆகியோர் கலந்துகொள்ளவில்லை. அதேபோல் கலந்துகொள்வதாக எதிர்பார்க்கப்பட்ட அஸ்வர் எம்.பி.யும் இன்றைய கூட்டத்திற்கு வருகை தர வில்லை என்று ஜனநாய மக்கள் முன்னணி தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் முன்னணி விடுத்துள்ள ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
தமிழ் சங்கம் ஒழுங்கை விவகாரம் தொடர்பில் கலந்துரையாடி முடிவெடுப்பதற்காக ஏற்கனவே தீர்மானித்திருந்ததன் பிரகாரம்  மேல்மாகாணசபை முதலமைச்சர் அலுவலகத்தில் இன்று காலை கூட்டம் ஒன்று நடைபெற்றது.

இந்த  கூட்டத்தில், கொழும்பு மாநகரசபை மேயர் முசாம்மில்,  மேல்மாகாண உறுப்பினர்கள் நல்லையா குமரகுருபரன், எஸ். ராஜேந்திரன், மாநகரசபை உறுப்பினர்கள் வேலணை வேணியன் பிரியாணி குணரத்ன, மன்சில், ரோய் போகாவத்த  ஆகியோர் கலந்துகொண்டனர். அத்துடன் மாகாண உள்ளூராட்சி ஆணையாளர், மாநகர ஆணையாளர் மற்றும் மாகாணசபை, மாநகரசபை அதிகாரிகள் கலந்துகொண்டார்கள்.

இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட உறுப்பினர்களில் சிலர் 57ம் ஒழுங்கையை தமிழ்ச்சங்கம் ஒழுங்கை என பெயர் மாற்றம் செய்வதை ஆட்சேபித்தனர்.

ஒழுங்கையின் பெயரை மாற்றவேண்டும் என்று கோருபவர்களில் பலர் அந்த ஒழுங்கையில் வசிப்பவர்கள் அல்லர் அத்துடன், கொழும்பு தமிழ் சங்கம் ஒரு வர்த்தக நிறுவனம் என்ற சுட்டிக்காட்டினர் எனினும் அவர்களது ஆட்சசேபணை நிராகரிக்கப்பட்டது.

இந்த பெயர் மாற்றம் சட்ட விதிகளின்படி முறையாக செய்யப்பட்டுள்ளது என ஜ.ம.மு உறுப்பினர்கள் தெரிவித்தார்கள். இந்த நிலைபாட்டை கொழும்பு மாநகர மேயர் முசாமிலும்,ஆணையாளர் பத்ராணி ஜெயவர்தனவும் உறுதிபடுத்தினார்கள். இந்நிலையில் இதுபற்றிய தமது அறிக்கையை மேல்மாகாண முதலமைச்சரிடம் சமர்பிப்பதாக,  மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் உறுதியளித்தார். முதலமைச்சர் முடிவையடுத்து தமது நடவடிக்கை முன்னெடுக்கப்படும் என கொழும்பு மேயர் தெரிவித்துள்ளார்.

மனோ கணேசன் கருத்து

இது தொடர்பில் ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர்  மனோ கணேசன்  கருத்து தெரிவிக்கையில் ,
இன்றைய கூட்டம் எமது கட்சியால் ஏற்பாடு செய்யப்படவில்லை. அது ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் மேல்மாகாணசபை முதலைமைச்சர் அலுவலகத்தில், முதலமைச்சரால் ஒழுங்கு செய்யப்பட்டது.

இதில் முதலமைச்சரும்,  மத்திய அரசின் தமிழ் மொழி அமுலாக்கல் அமைச்சர் வாசுதேவ நாணயக்காரவும் கலந்துகொள்வதாக உறுதியளித்தார்கள். ஆனால் மாகாணசபையினால்  ஒழுங்கு செய்யப்பட்டு  நடத்தப்பட்ட இந்த கூட்டத்தில் இந்த இருவரும் கலந்துகொள்ளவில்லை.

இது தமிழ் மக்கள் தொடர்பில் இவர்கள் காட்டும் உதாசீனத்தையும், தமிழ் ஊடகங்களில் தமிழ் பேசும் மக்களின் உரிமைகளை பற்றி பேசுபவர்கள் நடைமுறையில் செயலாற்ற தயாரில்லை என்பதையும் காட்டுகின்றது. எமது கட்சி உறுப்பினர்கள் அழைப்பை ஏற்றுகொண்டு சென்றார்கள் கட்சியின் மாநகரசபை உறுப்பினர்களுடன் கலந்துபேசி அடுத்தகட்ட நடவடிக்கைகளை முடிவுசெய்வோம் என்றார்.
 
 

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .